கம்பம்; கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நாளை பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப். 16 ல் நடைபெற்றது. அன்று மாலை முக்கொம்பு மற்றும் கரகம் ஊர்வலமாக நகர் வீதிகளில் கொண்டு வரப்பட்டது. கோயிலில் உள்ள கம்பத்தில் இணைத்து முக்கொம்பு கட்டப்பட்டது. முக்கொம்பிற்கு புது வஸ்திரம் உடுத்தி, மஞ்சள் நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெத்தது. பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி வணங்கி வருகின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு சமூகத்தினர் மண்டகப்படி நடந்து வருகிறது. தினமும் அம்மன் விதவித அலங்காரத்துடன் வீதி உலா வருகிறார். 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஏப். 29 ,30ல்அக்னி சட்டி, மாவிளக்கு ஆயிரம் கண் பானை எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கம்பம் மட்டுமல்லாது சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள். பொங்கல் வைத்தல், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறும். அன்று இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்னதானம், நீர்மோர் வழங்குதல், கலை நிகழ்ச்சிகள் என களைகட்டி வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியும், ஹிந்து சமய அறநிலைய துறையினர் செய்கின்றனர்.