மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) நடக்கிறது. உச்ச நிகழ்ச்சியான வைகையில் அழகர் இறங்கும் உற்ஸவம் மே 1ல் நடக்கிறது. இதற்காக அழகர்கோவிலில் இருந்து தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்கள் இன்று மதுரை வந்து சேர்ந்தன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.,19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். நேற்று அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்த நிலையில், இன்று அம்மன், அஷ்ட திக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலையான திக்கு விஜயம் நடந்தது. இதைதொடர்ந்து இன்று காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதை காண கட்டண அடிப்படையில் 6 ஆயிரம் பேரும், இலவசமாக 6 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். திருக்கல்யாணத்திற்காக அம்மன் தாலியுடன் இணைக்கப்படும் குழிபொட்டு தாலி நேற்று சீர்வரிசையுடன் யானைக்கல் லாலா சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்லக்கில் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இன்று 1.50 லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து அளிக்க மதுரை சேதுபதி பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை சார்பில் ஏற்பாடு நடந்து வருகிறது.
29ம் தேதி காலை 6:00 மணிக்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக இரு தேர்களிலும் 1732.14 கிலோ எடையில் திருச்சி ‘பெல்’ நிறுவனம் மூலம் கோயில் நிதி ரூ.35 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட புதிய இரும்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அழகருக்காக வந்து சேர்ந்த தங்கக்குதிரை மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். ஏப்., 30 அதிகாலை 5:30 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. அன்றிரவு 11:30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்கக்குதிரையில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துக்கொண்டு வைகையாற்றுக்கு புறப்படுகிறார். தமுக்கம் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின் மே 1 அதிகாலை 5:30 முதல் 5:55 மணிக்குள் வைகையாற்றில் தங்கக்குதிரையில் எழுந்தருளுகிறார். இதைதொடர்ந்து மதியம் ராமராயர் மண்டபத்தில் அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. அன்றிரவு வண்டியூர் பெருமாள் கோயிலில் சுவாமி எழுந்தருளுகிறார். மே 2 காலை 11:30 மணிக்கு வைகையாறு தேனுார் மண்டபத்தில் சேஷ வாகனத்திலும், மதியம் கருட வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மே 4 அதிகாலை பூப்பல்லக்கில் மீண்டும் கள்ளழகராக அழகர்கோவில் நோக்கி சுவாமி புறப்பட்டு, மே 5 காலை 10:40 மணி முதல் 11:10 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். அழகர் எழுந்தருளும் தங்கக்குதிரை, சேஷ, கருட வாகனங்கள் நேற்று அழகர்கோவிலில் இருந்து தல்லாகுளம், வண்டியூர் பெருமாள் கோயில்களுக்கு கொண்டு வரப்பட்டன.