Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சோதனை மேல் சோதனை…
 
பக்தி கதைகள்
சோதனை மேல் சோதனை…


“திடீர்னு நட்ட நடுக்கடல்ல தனியா மாட்டிக்கிட்ட மாதிரி இருக்குண்ணா”
என்முன் அமர்ந்திருந்த 45 வயது சங்கருக்கு நிறையச் சொத்து இருக்கிறது. வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
“ஏன் என்னாச்சு?”
“எங்களுக்கு நிறைய நிலம் இருக்கு. முன்னால நிலத்துலருந்து நிறைய வருமானம் வந்துச்சி கடந்த 5 வருஷமா. விவசாயம் நடக்கல. நிலத்த வித்துரலாம்னு நெனச்சேன். விலை போக மாட்டேங்குதுண்ணா. கையில இருக்கற காசு கரைஞ்சிருச்சி. இருக்கற காச வச்சி இன்னும் பதினஞ்சு நாள்தான் ஓட்ட முடியும்.
“இதுக்கு நடுவுல பேங்க்ல கடன வாங்கி வீட்டப் புதுப்பிச்சோம். மூணுமாசமா தவணை கட்ட  முடியல. வீட்ட ஏலத்துக்குக் கொண்டு வந்திருவாங்களாம்..
பையன இன்ஜினியரிங் படிக்கறான். இன்னும் பத்து நாள்ல அவனுக்கு பீஸ் கட்டணும்.
“நிலத்த வித்தா எப்படியும் முப்பது, முப்பத்தியைஞ்சு லட்சமாவது கெடைக்கும். அத வச்சி என் பிள்ளையப் படிக்க வச்சிரலாம். என் காலத்த ஓட்டிரலாம். ஆனா அதுவும் நடக்கமாட்டேங்குதே!”
சங்கர் நல்லவன். உத்தமமான பக்தன். அவனுக்கே இந்த நிலையென்றால்...
சங்கரைச் சீண்டிப் பார்க்கலாம் என்று தோன்றியது.
“உனக்குப் பச்சைப்புடவைக்காரிதானே எல்லாம்?”
“ஆமாண்ணா”
“இவ்வளவு பெரிய சிக்கல்ல உன்னை மாட்டிவிட்டிருக்காளே உனக்கு பச்சைப்புடவைக்காரி மீது  கோபமே வரலையா?  பச்சைப்புடவைக்காரிய திட்டணும்னு தோணலையா? உன் இடத்துல வேற யாராவது இருந்தாங்கன்னா அவளை வஞ்சகி, ராட்சசி, நம்பவச்சிக் கழுத்தறுத்துட்டாளேன்னு வாய்க்கு வந்தபடி திட்டியிருப்பாங்க.”
“உங்க வாயிலருந்து அந்த மாதிரி வார்த்தைகள் வரலாமாண்ணா?”
“உன் மனசுல அவளத் திட்டணும்னு தோணுதா?”
“சத்தியமா இல்லண்ணா. பச்சைப்புடவைக்காரி கருணைக் கடல். காரணமேயில்லாம கருணைகாட்டறவள்னு அப்பா சொல்லிக்கிட்டேயிருப்பாரு. அவளே எனக்கு இப்படி ஒரு கஷ்டத்தக் கொடுத்திருக்கான்னா நான் எவ்வளவு பாவம் செஞ்சிருக்கணும்? எத்தனை பேர் வயத்துல அடிச்சிருக்கணும்? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்கண்ணா’’
“இந்த இக்கட்டான சமயத்துலயும் அவள நெனச்சி அழறதுக்கு ஒரு மனசக் கொடுத்திருக்காளே. அது போதுமே”
“அதெல்லாம் சரி, சங்கர். இன்னும் ஒரு மாசத்துக்குள்ள நிலத்த விக்க முடியலேன்னா என்னாகும்? நான் ஏதாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?”
“திருப்பித் தர வழி இருக்கான்னு சரியாத் தெரியாம கடன் வங்கறது தப்புண்ணா”
“பணம் கெடைக்கலன்னா என்னாகும்?”
“ வீடு போயிரும். போகட்டுமே. எங்க குடும்பத்தோட மானம் போகும் போகட்டுமே!. பீஸ் கட்ட முடியலேன்னா பையனோட படிப்பு போகும், போகட்டுமே. எல்லாமே போனாலும் எனக்கு பச்சைப்புடவைக்காரி இருக்காண்ணா. எனக்கு மூணு வயசாகும்போது எங்கம்மா செத்துட்டாங்க. அதுலருந்து பச்சைப்புடவைக்காரியத்தான் அம்மாவா நெனச்சிக்கிட்டிருக்கேன். எல்லாமே போனாலும் எங்காத்தா பச்சைப்புடவைக்காரி என்னை விட்டுட்டுப் போகமாட்டாண்ணா’’
சிறிது நேரம் அங்கே கனத்த மவுனம் நிலவியது. பின் சங்கர் என்னிடம் சைகையாலேயே விடைபெற்றுச் சென்றுவிட்டான்.
அன்று மாலை சங்கருக்காக பிரார்த்தனை செய்தபடி மீனாட்சி கோயிலுக்கு நடந்தே சென்றேன். பொற்றாமரைக் குளத்தைத் தாண்டி போக மனமில்லை. குளத்தின் படிகளில் அமர்ந்துகொண்டேன்.
சற்றுத் தள்ளி ஒரு நடுத்தர வயதுப் பெண் அமர்ந்திருந்தாள். அப்படி ஒரு அழகையும் கம்பீரத்தையும் நான் பார்த்ததில்லை. ஒருவேளை பச்சைப்புடவைக்காரியாக இருக்குமோ?
சட்டென என்னைத் திரும்பிப்பார்த்தாள். பின் என்னை நோக்கி வேகமாக வந்தாள். நான் எழுந்தேன்.
“கோயில்ல, ஒரு கல்யாணமான பொண்ணையே இப்படி வெறிச்சிப் பாக்கறியே? உன்னை என்னன்னு சொல்றது? ஒரு குரல் கொடுத்தா உன்னை அப்படியே கொத்தா அள்ளிக்கிட்டுப் போயிருவாங்க”
“என்ன பேசுகிறீர்கள்? உங்களை பச்சைப்புடவைக்காரியாகத்தான் பார்த்தேன். என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள் மீது சத்தியம்”
நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டதுபோல் பெரிதாகச் சிரித்தாள்.
“நானேதான். உன்னைச் சீண்டிப் பார்த்தேன்”
விழுந்து வணங்கினேன். அவள் அமர்ந்தவுடன் கீழே அமர்ந்து கொண்டேன். அவள் என் முகத்தையே பார்த்தாள்.
“இது என்னப்பா விபரீதம்? நீ இப்போது என் கோயிலில் இருக்கிறாய். உன் அருகே நான் இருக்கிறேன். பின் ஏன் உன் முகம் இப்படி வெளிறியிருக்கிறது? என்னையும் மீறி யாராவது உன்னைக் காயப்படுத்திவிடுவார்களோ என பயப்படுகிறாயோ?”
“என் பயத்துக்கு வேறு காரணம் தாயே!”
“சொல்”
“சங்கர் மனதில் எந்த அழுக்கும் இல்லாதவன். எப்போதும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கும் உத்தம பக்தன். அவனுக்கே இந்தக் கதியென்றால்... அவன் வீட்டை இழக்கப்போகிறான், மானத்தை இழக்கப்போகிறான். குலை நடுங்குகிறது, தாயே! துாயவனே திண்டாடுகிறான் என்றால் மனதில் அழுக்குகளை வைத்திருக்கும் என்னைப் போன்றவர்கள்  நிலையை யோசித்துப் பார்த்தேன். பயமாகத்தான்  இருக்கிறது, தாயே!”
“சங்கரிடம் விளையாடிக் கொண்டிருக்கிறேன்”
“உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விளையாட்டு உங்கள் அடியவர்களுக்கு வேதனையைத் தரலாமா?””
“சிலசமயம் தாய்க்குத் தன் குழந்தை மீது அளவு கடந்த அன்பு வந்துவிடும். அப்போது அவள் குழந்தையை முரட்டுத்தனமாகக் கொஞ்சுவாள். மேலே துாக்கிப்போட்டுப் பிடிப்பாள். இதனால் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. அறியாத குழந்தைகள் சில சமயம் பயந்துவிடும். அந்த பயத்தையும் தாய் உடனே போக்கிவிடுவாள். சங்கர் என் மடியில் இருக்கும் என் குழந்தை.”
“என்றாலும்...’’
“சங்கருக்கு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாயா?”
கைகூப்பினேன்.
“அங்கே பார்.”
காட்சி விரிந்தது.
பத்து நாட்கள் கழித்து ஒரு வெள்ளிக்கிழமை. விளக்கு வைக்கும் நேரம். சங்கர் பூஜையறையில் பச்சைப்புடவைக்காரியின் படத்தின்முன் அமர்ந்து கண்ணீரைப் பெருக்கிக்கொண்டிருந்தான்.
மனைவி அவனை அழைத்தாள்
“உங்களத் தேடிக்கிட்டு யாரோ வந்திருக்காங்க.”
ஜப்தி செய்ய வந்திருக்கும் வங்கி அதிகாரியா? இரண்டு மாதம் பாக்கி வைத்திருக்கும் பலசரக்குக் கடைக்காரானா?
பயந்தபடியே வாசலுக்கு வந்தான் சங்கர்.
வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்த நான்கு மனிதர்கள் வந்திருந்தனர்.
“நீங்கள்…”
“பூங்குடி கிராமத்துல இருக்கற உங்க நிலத்த விக்கப்போறதாக் கேள்விப்பட்டோம். எங்களுக்கு நிலம் அவசரமா தேவைப்படுது. விலை நிலவரத்த விசாரிச்சோம். முப்பது, முப்பத்தியஞ்சு லட்சத்துக்குப் போகும்னு சொன்னாங்க. நாங்க நாப்பது லட்ச ரூபாய்க்கு வாங்கிக்கறோம். இதுல அஞ்சு லட்சம் ரொக்கம் இருக்கு. 35 லட்சத்துக்கு செக் கொடுத்துடறோம். செக்குக்குப் பணம் வந்தவுடனே பதிஞ்சிக்கலாம்”
ஒரு சாதாரண நில விவகாரத்தில் சங்கர் ஏன் அப்படி விம்மி விம்மி அழுகிறான் என்று அவர்களுக்குப் புரியவில்லை.
காட்சி முடிந்ததும் பச்சைப்புடவைக்காரி தொடர்ந்தாள்.
“சில நாட்கள் அந்தக் குழந்தையைத் துாக்கிப்போட்டு விளையாடவேண்டும் என்று தோன்றியது. அதை அந்தக் குழந்தை துன்பமாக எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?”
“என்னிடமே உண்மையை மறைத்துவிட்டீர்களே தாயே!”
“என்னடா உளறுகிறாய்?”
“அடுத்த பத்து பிறவிகளில் சங்கர் பெற வேண்டிய ஆன்மிக வளர்ச்சியை இந்தப் பிறப்பிலேயே கொடுத்துவிடுவது என தீர்மானித்துவிட்டீர்கள். நாலாபக்கமும் துன்பங்கள் சூழ்ந்த நிலையிலும் சங்கர் உங்களைப் பற்றித் தப்பாக ஒரு வார்த்தை குறை சொல்லவில்லை. அவனுடைய பக்தியின் தீவிரம் பலமடங்கு அதிகமாகியது. விளைவு இந்தப் பிறப்பு முடிந்தவுடன் அந்த ஜீவன் உங்களோடு ஒன்றிவிடும்”
“எதை வைத்து அப்படி சொல்கிறாய்?”
“உங்களால் விளையாட்டுக்குக்கூட எங்களைத் துன்புறுத்த முடியாது, தாயே! எங்கள் கர்மக்கணக்கு கோளாறாக இருந்தால் மட்டுமே எங்களுக்குத் துன்பம் வரும். அதையும் நீங்கள் கணிசமாகக் குறைத்துவிடுவீர்கள். நீங்கள் விளையாடினீர்களாம்! அந்தக் குழந்தை அது புரியாமல் துன்பப்பட்டதாம்! யாரிடம் கதை அளக்கிறீர்கள்?”
அன்னை சிரித்தாள். அகிலமே மலர்ந்த்து.  





 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar