பதிவு செய்த நாள்
09
டிச
2019
11:12
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா நேற்றும்(8-ந்தேதி), இன்றும்(9-ந்தேதி) நடைபெற்றது. 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும்.
இந்தாண்டு கைசிக ஏகாதசி விழா நேற்றும்(8-ந்தேதி) இன்று(9-ந்தேதி) அதிகாலை வரை நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்;தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு 11.30 மணி முதல் 1.30 மணிவரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர்; சந்தனமண்டபத்திலிருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 2வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்பித்தனர்.
11.30 மணி முதல் இன்று(9ம்தேதி) அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார். பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அவ்வாறு நம்பெருமாள் படியேறும் போது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.