திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசியை விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள் பெரிய சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பிரம்ம ரத உற்சவம் இரண்டு நாட்கள் நடக்கிறது. முதல் நாள் விழாவான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் திருவிக்கிரமன் விஸ்வரூப தரிசனம், திருவாராதனம், திருப்பாவை சாற்றுமுறை, 8:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி வேணுகோபாலன் சன்னதியில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 9:30 மணிக்கு ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் பக்தர்களுக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்துவைத்தார். மாலை 3:00 மணிக்கு மணிவண்ணன் சுவாமிகளின் உபன்யாசம், இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பஜனை பாடல்களுடன் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 5:00 மணிக்கு பாண்டிய மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள, 12 திருவாராதனம் கண்டருளி ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கைசிக புராணம் வாசிப்பதை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத விநியோகம், 7:00 மணிக்கு ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் பிரம்மத்தில் வீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.