பதிவு செய்த நாள்
28
ஜன
2020
11:01
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுர வாசலை திறக்க தாக்கலான வழக்கில், அறநிலையத்துறை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருச்செந்துார் சுப்பிரமணியபுரம் நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் கட்டப்பட்ட காலத்திலிருந்தே, பக்தர்கள் ராஜகோபுரம் கீழ் உள்ள வாயில் வழியாக அனுதிக்கப்பட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். ஜோதிடர்கள் கூறியதைக்கேட்டு, அரசியல்வாதிகளில் சிலரின் பதவிக்கு ஆபத்து நேரிடக்கூடும் என்ற அச்சத்தில், அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் 1977 ல் மூடப்பட்டது. ராஜகோபுர வாயில் வழியாக பக்தர்கள் செல்வது தடை செய்யப்பட்டது. பின் ராஜ கோபுர வாயில் நிரந்தரமாக மூடப்பட்டது.
இதனால் நேர் வழியில் செல்வதற்கு பதிலாக, ஆகம விதிகள், நடைமுறைகளுக்கு மாற்றாக பின்னோக்கிய முறையில் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ராஜகோபுர வாயில் திறக்கப்படும்பட்சத்தில், திருவிழாக் காலங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க அவசியம் ஏற்படாது. எந்த ஒரு கோயிலிலும் ராஜகோபுர வாயில் வழியாகச் சென்று, மூலவரை தரிசனம் செய்வதுதான் சாலச்சிறந்தது. இறைவனடி சரணடைந்த மற்றும் பிறவிப் பயனை எட்டிய மகிழ்ச்சியைத் தரும். ராஜகோபுர வாசலை திறக்கக்கோரி அறநிலையத்துறை செயலாளர், கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு நாராயணன் மனு செய்தார். நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை தரப்பில், ‘மனுவை பரிசீலித்து 4 மாதங்களில் தகுந்த முடிவெடுக்கப்படும்,’ என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள்,‘அறநிலையத்துறை சட்டம், விதிகளுக்குட்பட்டு மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என்றனர்.