மன உறுதியுடன் ஸ்ரீரங்கப்பெருமானின் சன்னதியில் வழிபட்டார் பிள்ளைலோகாச்சார்யார். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த பிள்ளைலோகாச்சார்யாரின் எதிரில் மணப்பாக்கத்து நம்பி நின்றிருந்தார். ‘‘சுவாமி....’’ ‘‘சொல்லப்பா...ஏதோ கேட்க நினைக்கிறாய்?’’ ‘‘எம்பெருமான் என்ன சொன்னான் சுவாமி?’’ ‘‘அப்படியானால் அவன் இப்போது என்னிடம் பேசினான் எனக் கருதுகிறாயா நீ?’’ ‘‘அதில் எனக்கு சந்தேகமில்லை...’’ நம்பியின் பதில் கேட்டு சிரித்தார் பிள்ளைலோகாச்சார்யார். ‘‘உங்கள் சிரிப்பில் பல பொருள் தெரிகிறது.’’ ‘‘புத்திசாலி...முகக்குறிப்பை நன்றாக புரிந்து கொள்கிறாய்! வாழ்க நீ?’’ ‘‘வாழ வழி இருக்கிறதா சுவாமி?’’ நம்பியின் கேள்வி சற்று இடிக்கவே செய்தது. நடந்தபடியே தான் பேசினார். எதிரில் கிளி மண்டபம்! அங்கும் பேரமைதி! அவைகளுக்கும் சோதனையான கால கட்டம் என்பது தெரிந்ததோ என்னவோ? ‘‘நம்பி... வாழ வழி இருக்கிறதா என்றா கேட்டாய்?’’ ‘‘ஆம் சுவாமி! இந்த சூழல் அப்படி கேட்கச் செய்கிறது.’’ ‘‘இது ஒன்றும் உலகிற்கு புதிய சூழல் இல்லையே நம்பி...’’ ‘‘என்ன சொல்கிறீர்கள்.’’ ‘‘எந்த கஷ்டமும் இன்றி வாழ்ந்தவர் என ஒருவரும் உலகில் இல்லை என்பது உனக்கு தெரியாதா?’’ ‘‘அது தெரியும்! ஆனால்...’’ ‘‘நீ என்ன சொல்ல வருகிறாய் என்பது புரிகிறது. தனி மனிதனுக்கு கஷ்டம் வருவதற்கும், சமூகத்திற்கே கஷ்டம் வருவதற்கும் வேற்றுமை உண்டு. ஆனாலும் வைணவனுக்கு இது ஒன்றும் புதியதல்ல...’’ ‘‘எப்படி சுவாமி?’’ ‘‘நம்மில் இருந்து தோன்றிய ஹிரண்யனை விடவா இப்போதுள்ள அந்நியர்கள் கொடியவர்கள்? நம்மில் இருந்து தோன்றிய ஒரு கம்சன், மது கைடபர், கேசி என அவ்வளவு பேரையும் எம்பெருமான் அழித்து நம்மைக் காத்ததை எண்ணிப் பார்...’’ ‘‘அப்படியானால் அசுரர்களை அழிக்க அவதாரம் எடுத்தது போல் இப்போதும் வருவாரா?’’ நம்பி கேட்கவும் மீண்டும் சிரித்தார். ‘‘நான் தவறாக ஏதும் கேட்டு விட்டேனா?’’ ‘‘நீ எங்கே கேட்டாய்.... இப்படி கேட்கச் செய்வது தான் கலியின் தன்மை...’’ ‘‘என்ன சொல்கிறீர்கள்?’’ ‘‘எம்பெருமான் வருவாரா என கேட்டதில் தொனித்த சந்தேகத்தை சொல்கிறேன்’’ ‘‘சந்தேகமா... இல்லை சுவாமி! என்னை அறியாமல் பேசி விட்டேன்.’’ ‘‘இந்த அறியாமல் என்ற பதத்திற்கே. கலியில் சக்தி அதிகம். அறியாமல் தான் எல்லோருமே தவறு செய்கின்றனர். அதாவது அவனை(எம்பெருமானை) அறியாமல்... அறிந்து விட்டால் மாறி விடுவர்!’’ ‘‘உங்கள் கருத்து நமக்கு பொருந்தும். அந்நியர்களுக்கு பொருந்துமா?’’ ‘‘அவர்கள் என்ன தான்தோன்றிகளா...? அவர்களையும் அவன் தானே படைத்தான்?’’ ‘‘சுவாமி’’ ‘‘என் கேள்விக்கு பதில் சொல்...’’ ‘‘உங்கள் கருத்தை அவர்கள் ஏற்பரா.... உருவ வழிபாடே தவறு என்பதல்லவா அவர்களின் சித்தாந்தம்?’’ ‘‘இருக்கும் ஒன்றே இல்லாமலும் போக முடியும். இல்லாத ஒன்றை ஒருவர் நினைக்கவே முடியாது சரி தானே?’’ ‘‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’’ ‘‘அது ஒரு மாற்றுச் சிந்தனை... இறைவனை அவர்கள் மறுக்கவில்லையே...?’’ ‘‘அப்படியானால்?’’ ‘‘நம் பக்திக்கும், அதன் தெளிவிற்கும். உறுதிக்கும் அவர்களின் வடிவில் சோதனை வந்துள்ளது. நாம் நம்வழியில் கடமையை செய்தால் போதும், நடப்பது நலமாக அமையும்.’’ ‘‘நாம் எப்போது செய்யத் தவறினோம்? உண்பது போல் உறங்குவது போல் அது நம் கடமையல்லவா?’’ ‘‘இப்போது சொன்னதை அப்படியே அதே உறுதியோடு பின்பற்று. நடப்பவை எல்லாம் தானாக நலமாகவே நடக்கும்...’’ ‘‘வருத்தம், கோபம் என எதுவுமின்றி தாங்கள் இயல்பாக பேசி நம்பிகையோடு இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லையே’’ ‘‘பழகிக்கொள். எம்பெருமானின் பரம கருணையை சந்தேகிக்காதே. நாம் அவனிடம் ஒப்படைத்து சரணாகதி அடைந்தவர்கள். நாம் அவன் சொத்து. அந்த சொத்தை படைத்தவனும் அவனே... எனவே அவன் பாதுகாத்துக் கொள்வான்.’’ பிள்ளைலோகாச்சார்யாரின் இதமான் ஆழமான பேச்சு மணப்பாக்கம் நம்பிக்கும் ஒரு மருந்தாக இருந்தது. அவரோடு கோயிலை விட்டு நீங்கும் போது நம்பிக்குள் காஞ்சி குறித்த சிந்தனை! இங்கு இருப்பது போலத் தானே அங்கும் சூழல் மாறியிருக்கும்? மனதுக்குள் கேள்வி எழுந்தது. காஞ்சி நகரிலும் சுல்தானின் படை வீரர்கள்! எல்லைப்புறங்களில் சுங்கச் சாவடிகள். அங்கும் ஒரே சலசலப்பு. பலர் வரி கட்ட மறுக்க வாக்கு வாதங்களில் ஈடுபட்டனர். ‘‘நீங்கள் யார்... நாங்கள் ஏன் உங்களுக்கு வரி கட்ட வேண்டும்?’’ ‘‘நாங்கள் யாரா? நாங்களே இந்த காஞ்சி நகரின் ராஜாங்க ஊழியர்கள். நீங்கள் எங்களுக்கு கட்டுப்பட்டவர்கள்...’’ ‘‘இது அநியாமம்... அக்கிரமம்.....’’ ‘‘அரசாங்கம் வரி விதிப்பது அநியாயமா... ஏன் உங்கள் முந்தைய ஆட்சியில் வரி விதிப்பு கிடையாதா?’’ ‘‘உண்டு... ஆனால் இது போல் ஊருக்குள் நுழைவதற்கெல்லாம் வரி இல்லை.’’ ‘‘விரைவில் உள்நாட்டு நிர்வாகம் செயல்படத் தொடங்கும். அப்போது இக்குறை நீங்கும்’’ ‘‘நீங்கள் யார் எங்களை ஆட்சி செய்ய! இது புனிதமான நகரம். இதை ஆள்பவன் இம்மண்ணை சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும்.’’ ‘‘தலைமைக்கு கட்டுப்படத் தயார் என்றால் உங்கள் மண்ணைச் சேர்ந்தவரே ஆள்வர். ஆனால் டில்லி பாதுஷாவுக்கு கப்பம் கட்ட மறக்கக் கூடாது.’’ இப்படி வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. இந்த வாக்கு வாதங்களை எல்லாம் கேட்டபடியே தான் சென்றார் வேதாந்த தேசிகன். அவரிடம் ஆட்சி மாற்றம், கலாச்சார மாற்றம் குறித்து சீடர்கள் கேள்வி கேட்டனர். ‘‘சுவாமி... இச்சோதனையை நாம் எப்படி எதிர் கொள்வோமோ தெரியவில்லையே....’’ ‘‘கலக்கம் வேண்டாம். நாம் நாமாக இருப்போம். எம்பெருமான் காத்தருள்வான்...’’ ‘‘ இக்காஞ்சியில் தாங்கள் இருப்பது எங்களுக்கு உறுதுணையாக உள்ளது.’’ ‘‘எம்பெருமான் கருணைக்கு ஆளான உங்களிடம் ஒரு கேள்வி. இந்த அந்நியர்களும் அவன் படைப்பு என்றால் எம்பெருமான் இவர்களை எல்லாம் ஏன் படைக்க வேண்டும்? பின் இவர்களிடம் ஏன் போராட வேண்டும்? இந்த உலகமே வைணவமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’’ ‘‘இப்படிப்பட்ட கேள்வியை இந்த உலகில் பல முறைகளில் நாம் சிந்திக்கலாம். பூவைப் படைத்தவன் ஏன் முள்ளைப் படைக்க வேண்டும்? இனிப்பை படைத்தவன் கசப்பை ஏன் தர வேண்டும்? அமிர்தத்தை படைத்தவன் விஷத்தை ஏன் வைக்க வேண்டும்? இப்படி எழுப்பிக் கொண்டே போகலாம். நல்லதன் அருமை தீயது என ஒன்று இருந்தாலே தெரிய வரும். காரணமில்லாத காரியமில்லை.’’ ‘‘இப்படி தத்துவமாக பதில் சொன்னால் எப்படி? பொன்னையும், பொருளையும் இழக்க நேர்ந்தால் ஒருநாள் திரும்ப சம்பாதிக்க முடியும். ஆனால் எம்பெருமான் இங்கே கோயில் கொண்டிருப்பது என்பது காலத்தால் நிகழ்ந்த அதிசயம். அதற்கே அழிவு வந்து விட்டால்?’’ ‘‘நடக்காது. நடக்கவே நடக்காது...எம்பெருமானை எவரும் நெருங்க முடியாது. அப்படி நிகழும் பட்சத்தில் அதற்கேற்ப அவதார புருஷர்கள் தோன்றுவர். இது கலியுகம்... அவதார புருஷர்களாலேயே கலியை வெற்றி கொள்ள இயலும். இது அவர்களுக்கான சோதனை...’’என்று சொல்லி வேதாந்த தேசிகன் கண்களை மூடி தியானித்த போது, அத்திகிரி கோயில் ஸ்தானீகர் ஒருவர் மூச்சிரைக்க வந்து ‘‘ சுவாமி...என் கனவில் நம்பெருமாள் வந்தார்...’’ என்றார்.