பதிவு செய்த நாள்
18
பிப்
2020
12:02
உடுமலை அருகே, 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கொங்கு சோழர்களது கல்வெட்டை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கிராமம் கல்லாபுரம். கிராமத்தின் அருகிலுள்ள மதகடிப்புதுாரில் ஜெயசிங் என்பவரது விளைநிலத்தில், கல்வெட்டு போன்ற பெரிய துண்டு கற்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் தலைமையிலான குழுவினர், மூன்று பெரிய துண்டுகளாக கிடந்த கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்தனர்.கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது:கல்லாபுரம், அமராவதி ஆற்றை ஒட்டி அமைந்துள்ள பழமையான கிராமங்களில் ஒன்றாகும். கொங்குச் சோழனான வீரராசேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்றில், இவ்வூர், கல்லாபுரமான வீரசோழ நல்லுார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அவரை, அடுத்து ஆட்சி செய்த விக்கிரம சோழனின் கல்வெட்டில், கல்லாபுரமான விக்கிரமசோழ நல்லுார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த இரு அரசர்களும், கி.பி. 1207 - 1265 இடையிலான காலத்தில் ஆட்சி செய்தவர்கள். எனவே, கல்லாபுரம் என்னும் கிராமம் கி.பி. 13 ஆம் நுாற்றாண்டில் இருந்து இன்று வரை கல்லாபுரம் என்னும் தன் இயற்பெயரைக் கொண்டுள்ளது. இவ்வூர் கரைவழி நாடு என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது.
தற்போது கண்டறியப்பட்ட, முதல் இரண்டு துண்டுக் கற்களிலேயே முக்கியமான செய்தி இருந்தது.அதன்படி, கொங்குநாட்டை ஆண்ட கொங்குச்சோழன் வீரராசேந்திரன் என்னும் அரசனின் பெயர் இந்தத் துண்டுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆட்சியாண்டு பத்தொன்பது என்னும் குறிப்பும் கல்லில் உள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி., 1226 எனக் கணிக்கப்படுகிறது.இன்னொரு துண்டுக்கல்லில் கடற்றுார் எனும் கிராமத்தின் பெயரும், ஒரு பெண்ணைக் குறிக்கும் மகள் என்னும் சொல்லும் இருந்தன. இரண்டு கல்களிலும் உள்ள இரண்டு எழுத்துகள், கடற்றுாரில் இருக்கும் பெண் ஒருவரின் மகள் துாண் ஒன்றைக்கொடையாகச் செய்து தந்திருக்கிறாள் என்னும் செய்தியைக் கல்வெட்டு மூலம் அறியலாம்.கடற்றுார் என்று கல்வெட்டில் வரும் ஊர், தற்போதுள்ள கடத்துாராகும். ஒரு கோவில் புதுப்பிக்கப்படும் போது அல்லது புதிதாக ஒரு மண்டபம் கட்டப்படும் போது, துாண்கள் செப்பணிடப்பட்டுப் புதிய துாண்கள் அமைக்கப்படும்.கடத்துார் மருதீசர் கோயிலில் திருப்பணிகள் நடந்ததற்கும், துாண்களை அமைத்துக் கொடுத்ததற்கும் கல்வெட்டுகள் உள்ளன. அந்த வகையில், மண்டபம் ஒன்றுக்குத் துாண் கொடை அளிக்கப்பட்டுள்ளதை துண்டுக்கல்வெட்டு எழுத்துகள் தெரிவிக்கின்றன. கல்லாபுரத்தின் பழமைக்குச் சான்றாகவும் இந்தத் துண்டுக்கற்கள் அமைந்துள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.