பதிவு செய்த நாள்
29
மே
2020
06:05
திருப்பூர்: சார்வரி தமிழ் ஆண்டில், வெட்டுக்கிளியால் விவசாயம் பாதிக்கும் என்று, ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டு பிறப்பின் போது, கிரஹ சஞ்சார நிலையை கருத்தில்கொண்டு, ஆண்டுபலன் கணிக்கப்படுகிறது. சித்திரை மாதத்துக்கு முன்பாகவே, பஞ்சாங்கங்கள் அச்சிட்டு, விற்பனைக்கு வருகிறது. விகாரி ஆண்டு பஞ்சாங்கத்தில், ஆண்டு இறுதியில் புதிய வைரஸ் நோய் உருவாகும் என, ஆற்காடு பஞ்சாங்கம் கணித்திருந்ததை, கொரோனா வந்த பிறகுதான், அனைவரும் உற்று கவனித்தனர்.
நடப்பு தமிழ் ஆண்டான, சார்வரி ஆண்டு பஞ்சாங்கத்திலும், ‘வெட்டுக்கிளி பூச்சிகளால் கடும்பாதிப்பு ஏற்படும்; அண்டை நாடுகளான, பாகிஸ்தான், சீனா வலுக்கட்டாயமாக சண்டைக்கு வரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பூர் திருவருள் ஜோதிட கல்வி ஆராய்ச்சி மைய பேராசிரியர் மீனம் ராஜூ கூறியதாவது: சார்வரி ஆண்டிலும் சிலவகை பாதிப்பு இருக்கும். ராஜாவாக புதன் வருவதால், காற்று, புயல் ஆபத்து இருக்க வாய்ப்புள்ளது. பூச்சியினங்களால் அழிவு வரும். ராகு- கேது சஞ்சாரம் சரியில்லாததால், எல்லையில் போர் பதற்றம் உருவாகலாம். அரசு பல வகையில் சிரமத்தை சந்திக்கும். மழை குறைவாக இருக்கும். பூச்சியினங்களால் விவசாயம் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. ஆக., மாதம் மூன்றாவது வாரம் வரை, இதுபோன்ற குழப்பம் தொடரும். இறை வழிபாட்டின் மூலமாக, பாதிப்புகளை தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.