பதிவு செய்த நாள்
30
மே
2020
05:05
கடலுார்; காட் மேன் என்ற ஆன் லைன் திரைப் படத்தில் பிராமணர்களை கொச்சைப்படுத்திய தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், அந்தணர் முன்னேற்ற கழக மாநில துணை அமைப்பு செயலர் முத்துசாமிசிவம் தலைமையில் மாவட்டத் தலைவர் நாகராஜ், தொண்டரணி செயலர் வாஞ்சிநாதன், ஆன்மிக அணித் தலைவர் அருண் அளித்துள்ள மனு: காட் மேன் என்ற ஆன் லைன் திரைப்படத்தின் டிரெய்லர் சீ என்ற ஆன் லைன் சேனலில் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதில், பிராமணர்களை பற்றியும், இந்து மதம் பற்றியும் கொச்சையான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த டிரெய்லர் வேண்டுமென்றே குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே, காட் மேன் திரைப்படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ, நடிகர்கள், ஆன் லைன் சேனல் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கணேசன், வேதமூர்த்தி, பிரபாகர் உடனிருந்தனர். விருத்தாசலம்: அதே போல், விருத்தாசலத்தில் ஆகம வேத அர்ச்சக ஸாகரம் சங்கம் சார்பில் அதன் தலைவர் விக்னேஷ்சிவம், நிர்வாகிகள் பாலாஜி, தினேஷ் உட்பட விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் நால்வர் அறிவாலயம் சிவனடியார்கள் திருக்கூட்ட தொண்டர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர், டி.எஸ்.பி., இளங்கோவனிடம், காட் மேன் திரைப்படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ, நடிகர்கள், ஆன் லைன் சேனல் நிர்வாகி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153 (ஏ), 295, 294 (ஏ) ,296, 298, 499, 504, 505, 188 மற்றும் 67 ஐ.டி., பிரிவுகளின் கீழ் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.