கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். அவலட்சணத்துடன் இருப்பதைக் காண்பீர்கள். உடனே கோபம் மறைந்து விடும். தர்மவழியில் ஈட்டிய பணம் பல தலைமுறைக்கும் தொடர்ந்து பயனளிக்கும். பொய், வஞ்சனையால் தேடிய பணம் தீய வழியில் உடனே செலவழியும். வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் நாக்கைப் பொறுத்ததே. மனதால் நல்லதைச் சிந்தியுங்கள். நாவால் நல்லதைப் பேசுங்கள். வயதில் மூத்தவர்கள் மட்டும் பெரியவர்கள் அல்ல. பிறரைக் குறை கூறாத நல்லவர்களும் பெரியவர்கள் தான்! வியாபாரி தினமும் லாப, நஷ்டக் கணக்கு பார்ப்பது போல, நம்முடைய நல்ல, தீய பண்புகளையும் கணக்கிட்டு மனதைப் பண்படுத்துங்கள். மனிதனையும், விலங்கையும் பிரித்துக் காட்டும் ஒரே கருவி ஒழுக்கம் தான். அதை உயிராக மதித்துப் போற்றுங்கள். மழை நீர், அது விழும் இடத்தின் தன்மையைப் பெறுகிறது. அதுபோல, சேரும் நண்பர்களை பொறுத்தே மனிதனின் குணமும் அமைகிறது. மனைவி தவிர்த்த மற்ற பெண்களை தாயாகக் கருதுங்கள். இதனால் சமுதாயத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உருவாகும். பூமியில் உயிர்கள் வாழத் தேவையான அனைத்தையும் கடவுள் வழங்கியிருக்கிறார். ஆசையை கட்டுப்படுத்தி உழைக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் அனைவர் மனதிலும் அமைதி பிறக்கும். கடவுளிடம் அன்பினால் பக்தி செலுத்த வேண்டுமே ஒழிய, அதைக் கொடு! இதைக் கொடு என்று ஒருபோதும் பேரம் பேசக்கூடாது. சாந்தம் என்னும் சாணத்தால் உள்ளத்தை மெழுகுங்கள். அங்கு அன்பு என்னும் சந்தனம் தெளித்து, அறிவு விளக்கை ஏற்றி வையுங்கள். காலையில் எழும் போதும், உணவு உண்ணும் போதும், இரவு தூங்கும் முன்னும் கடவுளின் திருவடிகளைப் பக்தியுடன் வணங்குங்கள். அனைவரிடமும் ஒற்றுமையோடு பழகுங்கள். உயர்வு, மதிப்பு, அழகு இவை அனைத்தும் ஒற்றுமையால் கிடைக்கும். பணிவே வாழ்வின் உயிர்நாடி. பணிவில்லாத மனிதர்கள் வாழ்வில் உயர்வு நிலையை அடையவே முடியாது. பிறர் கூறும் கொடிய சொற்களையும் இன்சொற்களாகக் கருதுங்கள். மறந்தும், பிறர் மனம் நோக கடுஞ்சொல் பேசாதீர்கள். (மகான் வாரியார்)