பதிவு செய்த நாள்
13
ஜூலை
2020
04:07
சென்னை: ‘ஆடி மாத வழிபாட்டில், புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்’ என, அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக, சென்னை மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில், கிராமப்புற கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தவும், பக்தர்களை அனுமதிக்கவும், அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வரும், 17ல், ஆடி மாதம் துவங்குகிறது. அம்மாதம், அம்மன் கோவில்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். புற்றுக்கு பால் ஊற்றுவது, மாவிளக்கு போடுவது, பொங்கலிடுதல், கூழ் வார்த்தல், அலகு குத்தி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் நிறை வேற்றுவது போன்றவை நடைபெறும். தற்போது, கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதால், அறநிலையத்துறை சார்பில், ஆடிமாத வழிபாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிராமப்புற கோவில்களில், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் 6 அடி இடை வெளியை பின்பற்ற வேண்டும்; முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தேங்காய், பழம், பூகொண்டு வரக்கூடாது; கேழ்வரகு கூழ் எடுத்து வந்து, பிரசாதமாக வழங்கவும் அனுமதியில்லை.