பதிவு செய்த நாள்
07
ஆக
2020
03:08
திருக்கனுார் : கொடுக்கூர் கிராமத்தில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தாழிகள், உடைந்த மண்பானை ஓடுகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன், 65; செங்கல் சூளை தொழில் செய்து வருகிறார். இவர் தனது நிலத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க, 10 அடி ஆழத்திற்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டியுள்ளார்.அப்போது, உடைந்த மண்பானை ஓடுகள், மது குடுவை, செங்கல், சிவப்பு மற்றும் கருப்பு நிற மண்பாண்ட ஓடுகள், மது குடுவை தாங்கிகள் உள்ளிட்டவை தென்பட்டன.இதுகுறித்து ஜெயபாலன், விழுப்புரம் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று காலை கொடுக்கூர் வந்து, அங்கு கிடைத்த தாழிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை கையகப்படுத்தி, ஆய்வு செய்தனர்.பின்னர் தொல்லியல் அதிகாரிகள் கூறுகையில், இங்கு கிடைத்துள்ள பொருட்கள், 2,000 ஆண்டுகள் பழமையானவை. சங்கராபரணி ஆற்றை ஓட்டி அமைந்துள்ள இப்பகுதி, முற்காலத்தில் மக்கள் வசிப்பிடமாக இருந்திருக்கலாம். எனவே, கொடுக்கூர் கிராமம் முழுவதும் விரைவில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கொடுக்கூர் கிராமத்திற்கு வந்து, பழங்கால பொருட்களை பார்வையிட்டார்.அவர் கூறுகையில், கொடுக்கூரில் கிடைத்துள்ள கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகள் போல, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிடைத்துள்ளது. தொல்லியல் துறையினர் இவற்றை பார்த்தாலே, கி.மு., 3ம் நுாற்றாண்டை சேர்ந்தது என கூறுவர். ஆகையால், தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் இப்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டும். சங்கராபரணி ஆற்றங்கரையின் பல்வேறு பகுதிகளிலும் அகழ்வாய்வு செய்ய வேணடும் என்றார்.