பதிவு செய்த நாள்
24
அக்
2020
05:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சிவாஜி நகரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில், நவராத்திரி விழா கடந்த 17ம் தேதி தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது.
நவராத்திரி விழாவையொட்டி ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், அன்னை சாராதாதேவி ஆகியோரது படங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தினமும் மாலை பிரவசனம், இசைநிகழ்ச்சிகள் ஆகியவை நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 7.30 மணிக்கு ராமகிருஷ்ணர், துர்க்காதேவிக்கு சிறப்பு பூஜைகளும், வேத மற்றும் ஸ்துதி பாராயணம், துர்க்காதேவிக்கு மகா அஷ்டமி ஹோமம் மற்றும் புஷ்பாஞ்சலியும், மாலை தேவி மகாத்மிய பாராயணம் மற்றும் திவ்ய நாம சங்கீர்த்தனமும் நடந்தது.
முன்னதாக, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் பக்தர்களிடம் பேசுகையில், இன்று நவராத்திரியில் அஷ்டமி எட்டாவது தினம். மிக முக்கியமான தினம். அன்னை துர்க்கையின் அருளை மேலும் பெருக்கிக் கொள்ள நாம் கூடியுள்ளோம். இந்த நன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம். தீமைகள் இல்லாத, துரோகங்கள் இல்லாத, நோய்கள் இல்லாத, சோம்பல் அற்ற, தன்னம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட வாழ்க்கையை எங்களுக்கு வழங்க வேண்டும். தைரியம், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, நற்சிந்தனை, தாராளமனப்பான்மை, உடல் நலம், நீள்ஆயுள், நற்செயல், ஆற்றல் தந்து மனங்களில் மகிஷாசுரன் குடிபுகாதவாறு செய்ய வேண்டும். இந்த கரோனா காலத்தில் உலக மக்கள் மிகவும் துன்பபட்டு சிரமப்படுகிறார்கள். உங்களது பிள்ளைகளான எங்கள் மீது இரக்கம் கொண்டு கரோனா வைரஸ் என்ற நவீன மகிஷாசுரனை ஒழித்திட நாங்கள் வேண்டிக் கொள்கிறோம் என்றார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவினை தொடர்ந்து மகா நவமியான நாளை (25-ம் தேதி) காலை சிறப்பு பூஜைகள், தேவி ஸ்துதி பாராயணமும், மாலை அபிராமி அந்தாதி பாராயணம், தர்மக்ஷண சமிதியினரின் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.