பதிவு செய்த நாள்
20
நவ
2020
06:11
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் நடந்தது.
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இந்த அப்டேட் கண்ட சஷ்டி விழா, கடந்த, 15ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இவ்விழா, ஏழு நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாளில் இருந்து காலை, மாலை இருவேளையும் யாகசாலை பூஜை நடைபெற்றது. ஆறாம் நாளான இன்று கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் நடந்தது. வழக்கமாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம். இந்தாண்டு, கொரோனா தொற்று காரணமாக, பகல், 1:00 முதல் மாலை, 5:00 மணி வரை, மலைமேல் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல், 2:40 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி சூரசம்ஹாரத்திற்காக, பச்சைநாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், சூரபத்மன், பானுகோபன், சிங்கமுகாசுரன், தாரகாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், சுப்பிரமணிய சுவாமிக்கு, வெற்றி வாகை சூடும் நிகழ்ச்சியும், சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. கந்த சஷ்டி ஏழாம் நாளான நாளை காலை, 7:00 மணி முதல் 8:30 மணிக்குள், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.