Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாகவத புராணம் பகுதி-2 பாகவத புராணம் பகுதி-2
முதல் பக்கம் » பாகவத புராணம்
பாகவத புராணம் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2012
02:05

1. தோற்றுவாய்: ஸ்ரீ சுக முனிவரால் பரீக்ஷித்து மகாராஜனுக்குச் சொல்லப்பட்ட பகவானுடைய சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம். இது 18,000 ஸ்லோகங்கள் கொண்டது. மக்களின் மனத்திலே பக்தியை வளர்த்து, மன அமைதியையும், சித்த சுத்தியையும் தரவல்லது. பகவானுடைய சொரூபமே பாகவதம். அதைக் கேட்பதினாலும், படிப்பதினாலும் மோக்ஷ சுகத்தை அடையலாம். ஸ்ரீமத் பாகவதத்தை ஸப்தாகமாக ஏழு நாட்களில் சிரத்தையுடன் முறைப்படி கேட்டால் சகல மங்களங்களும் சித்திக்கும்.

ஒரு சமயம் நான்கு மகரிஷிகள் சத்சங்கம் செய்ய ஒன்று கூடினர். அப்போது தற்செயலாக அங்கு நாரத முனிவர் வந்தார். அவர் உற்சாகமின்றி இருப்பதற்கான காரணத்தை அந்த முனிவர்கள் கேட்டனர். நாரதர் சொன்னார், பூலோகத்தில் எங்கு சென்றாலும் கலிமகா புருஷனுடைய ஆதிக்கமே பரவியிருப்பதைக் கண்டேன். கடைசியாக யமுனை ஆற்றங்கரையில் ஓர் இளமங்கை இரண்டு வயோதிகர்களுடன் சோர்வாக அமர்ந்திருந்தாள். அவள் பக்தி தேவி என்றும், அந்த இரண்டு கிழவர்களும் ஞானம், வைராக்கியம் என்ற பெயரை உடையவர்கள் என்றும் அருகிலிருந்த மூன்று பெண்கள் கங்கை, யமுனை முதலிய நதிகளின் தேவதைகள் என்றும் அறிந்தேன்.

அவள் மேலும் அந்தப் புண்ணிய பூமியான பிருந்தாவனத்தை அடைந்த உடனே புத்துயிர் பெற்று, யுவதியாக மாறியதாகவும், ஆனால் அவளுடைய புத்திரர்களான ஞானமும், வைராக்கியமும் பலஹீனர்களாகவே உள்ளனர் என்றும், அதன் காரணம் அறியாமல் அவள் தவிப்பதாகவும் கூறினாள். அப்போது நான் (நாரதர்) அவளிடம் ஸ்ரீ கிருஷ்ண சரணார விந்தங்களைத் தியானம் செய்தால் துக்கம் நீங்கி ÷க்ஷமத்தை அடைவாய் என்று கூறினார். இந்தக் கலியுகத்தில் பக்தியே மோக்ஷசாதனம் என்று அறிவுரை கூறினேன். அடுத்து பக்தி தேவியின் வேண்டுகோளின்படி, ஞானம், வைராக்கியம் இருவரையும் தட்டி எழுப்பி அவர்களுடைய செவிகளில் கீதா வாக்கியங்களையும், உபநிஷத் மந்திரங்களையும் உபதேசித்தேன்.

அப்போது ஓர் அசரீரி என்னிடம் ஒரு சத்கர்மா எப்படி புரிய வேண்டும் என்பதைச் சில சாதுக்கள் கூறுவர் என்று சொல்லியது. நான் பதரீவனத்துக்குச் சென்று தவம் ஆற்றி வருகையில் தாங்கள் என்னைக் கண்டீர்கள் அவர்கள் நாரதரிடம் யோகம், தவம், யக்ஞம் ஆகியவற்றை விடச் சிறந்தது ஞான யக்ஞம். இதுவே சத்கர்மம் ஆகும். பாகவத ஞான யக்ஞ விசேஷத்தால் ஒவ்வொரு வீட்டிலும் பக்தியானவள், ஞான வைராக்கியங்களுடன் பிரேமரசத்தை நிரப்பிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருப்பாள் என்று கூறினர். அப்போது நாரதர் பக்தி, ஞானம், வைராக்கியம் ஆகியோர்க்கு நன்மை செய்ய ஞான யக்ஞம் செய்கிறேன். அதற்குத் தகுதியான இடம் கங்கா நதிக்கரையில் உள்ள ஆனந்த வனம் என்று அறிந்து, அங்கு சேர்ந்து ஞான யக்ஞத்தைச் செய்தார். எல்லோரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

அப்போது சனத்குமாரர்கள் நாரதரைப் பார்த்து பாகவதத்தின் பெருமையை எடுத்துக் கூறினர். பாகவதச் சிரவணத்தாலே ஸ்ரீவிஷ்ணு நம் உள்ளத்தில் ஆவிர் பாகம் ஆகிறார். புண்ணிய கிரந்தமான பாகவதம் பன்னிரண்டு ஸ்கந்தங்களும், பதினென்ணாயிரம் சுலோகங்களும் கொண்ட உன்னத புராணம். துளசி, துவாதசி, திதி, காமதேனு ஆகியவற்றிற்கும், ஸ்ரீமகா விஷ்ணுவுக்கும், பாகவத புராணத்திற்கும், வாசுதேவரின் மந்திரத்துக்கும் எவ்வித பேதமும் கிடையாது. இதை எவனொருவன் ஆயுளின் கடைசி தறுவாயில் கேட்கின்றானோ, அவனுக்கு கோவிந்தன் பிரீதியோடு வைகுண்ட வாசத்தை அளிக்கின்றான். பாபாத்மாக்களும் இந்தக் கலியுகத்தில் ஸப்தாஹ யக்ஞத்தினாலேயே பரிசுத்தம் அடைந்து விடுகின்றனர். எல்லோரும் ஸ்ரீ ஹரியை ஸ்தோத்திரம் செய்தனர். அவ்வமயம் பக்திதேவி, இளமையும், புஷ்டியும் நிறைந்த தன் குமாரர்களுடன் அங்கு தோன்றி ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தாள்.

2. புராணம்-ஸ்ரீபாகவத புராணம்

சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதான, லீலா வைபவங்கள் நிறைந்த பகவானுடைய அவதாரக் கதைகளைக் கேட்க நாங்கள் மிக்க ஆவலுடன் இருக்கின்றோம். அந்தப் புண்ணியமான திவ்ய சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும். பகவானுடைய லீலா விநோதங்களைக் கேட்பதற்காகவே சத்யோகம் செய்வதைக் காரணமாகக் கொண்டு நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். தர்மத்தின் காவலனான கிருஷ்ண பகவான் தன் திருநாட்டுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு தர்ம தேவதையரைச் சரணமாக அடைந்தது. அந்தத் தர்மமானது யாரால் ரக்ஷிக்கப்பட்டது?  கலியில் தோஷங்களினால் மனத்தூய்மையை இழந்த மனித சமூகத்தை பகவத் கதாம்ருதம் என்ற பாணத்தினால் பரிசுத்தப் படுத்துங்கள் என்று வேண்டிய சனகாதி முனிவர்களுக்குச் சூதமா முனிவர் கூறத் தொடங்கினார்.

சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதான, லீலா வைபவங்கள் நிறைந்த பகவானுடைய அவதாரக் கதைகளைக் கேட்க நாங்கள் மிக்க ஆவலுடன் இருக்கின்றோம். அந்தப் புண்ணியமான திவ்ய சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும். பகவானுடைய லீலா விநோதங்களைக் கேட்பதற்காகவே சத்யோகம் செய்வதைக் காரணமாகக் கொண்டு நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். தர்மத்தின் காவலனான கிருஷ்ண பகவான் தன் திருநாட்டுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு தர்ம தேவதையரைச் சரணமாக அடைந்தது. அந்தத் தர்மமானது யாரால் ரக்ஷிக்கப்பட்டது? கலியில் தோஷங்களினால் மனத்தூய்மையை இழந்த மனித சமூகத்தை பகவத் கதாம்ருதம் என்ற பாணத்தினால் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டிய சனகாதி முனிவர்களுக்குச் சூதமா முனிவர் கூறத் தொடங்கினார். ஸ்ரீமந் நாராயணனையும், புருஷ ச்ரேஷ்டரரான நரனையும், சரசுவதியையும், ஸ்ரீவியாச பகவானையும் வணங்கி வெற்றியை அளிக்கும் இந்தப் புராணத்தைக் கூறுகிறேன். பகவானுடைய அருட்கடாக்ஷம் உங்களுக்குப் பூரணமாக கிடைக்கட்டும். ஸ்ரீஹரியை ஆராதித்துப் பக்தி செய்வதே மனித குலத்தின் முக்கியமான தர்மமாகும். ஸ்ரீவாசுதேவனிடத்தில் மனதைச் செலுத்தி, பக்தி யோகத்தைச் செய்வதினாலேயே உண்மையான ஞானமும், வைராக்கியமும் ஏற்பட்டு விடும். அதனால் பகவான் மகிழ்ச்சி அடைகிறான்.

அறிவில் சிறந்த பெரியோர்கள் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் வேறுபாடில்லை என்பதை உணர்ந்து, தமது உள்ளக் கோயிலிலே பரமாத்மாவைக் கண்டு ஆனந்த பரவசம் அடைகின்றனர். சர்வ வியாபியாக விளங்குகின்ற ஸ்ரீஹரியே எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர். முழு கலையுடன் ஒளிர்கின்ற ஸ்ரீகிருஷ்ணாவதாரமே மிகச்சிறந்தது. அவருடைய லீலா வைபவங்களையும், அவதாரக் கதையையும் கேட்கிறவன் இன்ப வெள்ளத்தில் திளைப்பான். அவரை அடைவதற்கு அவரே காரணமாவார். ஸ்ரீகிருஷ்ண பகவானை உபாசிப்பவர்கள் ஸத்வ குணமும், சாந்தியும் அடைந்து ஆனந்தமாக வாழ்கின்றனர் என்று சூதமா முனிவர் கூறினார்.

3. பகவானின் அவதார மகிமைகள்

சூதமா முனிவர் பகவானின் அவதார மகிமைகளை முனிவர்களுக்குக் கூறலானார். ஆதியில் பகவான் உலகைச் சிருஷ்டி செய்ய எண்ணி உடனே பதினாறு கலைகள் கொண்ட புருஷ ரூபத்தைக் கொண்டார். அந்த விராட் புருஷனின் உடலிலிருந்தே தேவர்கள், மனிதர்கள் தோன்றினர். உலகம் விரிவடைந்தது. அவர் சொரூபம் அழிவற்றது. ஸத்வ குணம் நிறைந்தது. மகிமை பொருந்தியது. அவருடைய அமிசத்தினாலேயே தேவதைகள், பசு, பக்ஷிகள், பிராணி வர்க்கங்கள் தோன்றின. அந்த ஆதிநாராயண சொரூபமே சகல அவதாரங்களுக்கும் மூல காரணமாயிற்று. ஸ்ரீஹரி எடுத்த அவதாரங்கள் எண்ணில் அடங்கா. ஆனால் அவற்றுள் இருபத்து நான்கு மிக்க மகிமை பெற்றவை. அசுரர்களால் உலகத்திற்குத் துன்பம் உண்டாகும் போது அவர்களை அடக்கி நன்மக்களைக் காப்பதற்காகவே பகவான் பலவித உருவங்களில் தோன்றுகிறார். தர்மம், ஞானம் ஆகியவற்றுடன் ஸ்ரீகிருஷ்ணன் தனது திவ்யலோகத்துக்குச் சென்ற பிறகு உலகினர் அஞ்ஞானத்தில் சிக்கி ஞான சூனியர்களாய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தப் பாகவத புராணம் உதயமாகி ஒளிவீசத் தொடங்கியது. துவாபர யுக முடிவில் வியாசர் பராசர முனிவரின் மகனாக அவதரித்தார். மகாவிஷ்ணுவின் கலாவதாரமாகத் திகழ்ந்த அவர் வேதங்களை வகுத்தார். இதிகாச புராணங்களை இயற்றினார். எனினும், அவருக்கு திருப்தியும், மனஅமைதியும் ஏற்படவில்லை. இத்தகைய சிந்தையுடன் சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்து வருந்திக் கொண்டிருக்கும்போது நாரத முனிவர் வந்தார். அவரிடம் வியாசர் தன் மனக்குறையைக் கூறி அதனை நிவர்த்திக்க வேண்டினார்.

அப்போது நாரதர், உலகத்திற்கு ÷க்ஷமம் தரும் பகவானுடைய புனிதமான குண வைபவங்களை நீர் பாடவில்லை. ஸ்ரீஹரியின் குணங்களை வர்ணிக்கும் நூல்களையே சாதுக்கள் விரும்புவர். அனந்தனின் திவ்ய நாமங்களின் மகிமையைக் கூறும் நூலே மக்கள் பாபங்களைப் போக்கக் கூடியது. ஹரியின் குணங்களைப் பாடி, கேட்பதிலேயே சாதுக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே ஸ்ரீஹரியின் குணங்களைப் பாடுங்கள்; பக்தியின் பெருமையைக் கூறுங்கள். சமாதியில் அமர்ந்து பகவானுடைய லீலைகளைத் தியானித்து எழுதுங்கள்; பரமானந்தம் பெறுவீர். உலக நன்மை ஏற்படும்; பந்தங்களிலிருந்து விடுபட்டு அமைதியைப் பெறுவீர் என்றார் நாரதர். மேலும் எவன் ஒருவன் தனது ஸ்வதர்மத்தையும் விட்டு பகவானுடைய சரணகமலங்களில் பக்தியுடன் சேவித்து வருகிறானோ அவன் அதன் பயனை அடைவதற்கு முன்பே மரணமடைந்தாலும் அவனுக்கு நற்பேறே கிட்டும் என்றார். எடுத்துக்காட்டாக, தனது பூர்வ ஜன்ம வரலாற்றைக் கூறினார். அவர் முற்பிறவியில் வேதவித்துக்களிடம் வேலைக்காரியின் மகனாகத் தோன்றினதாகவும், அவர்களுக்குப் பக்தி சிரத்தையுடன் அவர் பணிவிடை செய்து வந்ததாகவும், அதனால் அவர்களிடம் பிரம்ம வித்தையை உபதேசம் பெற்றதாகவும், தான் எதையும் பகவதார்ப்பணமாகவே செய்து வந்ததாகவும் அதனால் பக்தி, ஞானம் வளர்ந்ததாகவும் கூறினார்.

தாயார் இறந்தபோது அவ்விடம் விட்டு வடக்கே புறப்பட்டுச் செல்ல பசி தாகத்தினால் சோர்வு ஏற்பட்டது. ஆங்குள்ள நதியில் நீராடி நீரருந்தி அரச மரத்தனடியில் அமர்ந்து உபதேச மந்திரத்தை ஜபித்து இதயத்திலே பரமாத்மாவைத் தியானித்து வந்ததாகவும் முனிவர் கூறினார். அப்போது அவர் உள்ளக் கோயிலில் பகவான் ஆவிர்பவித்து, மறைந்துவிட தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் அப்போது அசரீரி வாக்கு இப்பிறவியில் தன்னைக் காண தகுதி ஏற்படவில்லை என்றார். ஸ்ரீகிருஷ்ணனிடமே உள்ளத்தை இருத்தி, பற்றின்றி இருந்ததால் சித்த சுத்தி ஏற்பட்டது. பஞ்சபூத சரீரம் விழுந்துவிட புண்ணிய பார்ஷத சரீரம் கிடைத்தது என்றார். பல யுகங்கள் கழிந்த பிறகு உலக சிருஷ்டி ஏற்பட அப்போது பிரம்ம புத்திரனாகப் பிறந்ததாகக் கூறினார். பிறகு நாரதர் சென்று விட்டார். பின்னர் வியாசர் தியானத்தில் ஆழ்ந்து பரமபுருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணனிடம் இணையற்ற பக்தியைத் தரக்கூடிய பாகவத கிரந்தத்தை இயற்றினார்.

அநீதியின் உருவமாகிய கவுரவர்களும், நீதிக்கு இருப்பிடமாகிய பாண்டவர்களும் வாழ்ந்த கால வரலாறே மகாபாரதம். இதை எழுதியவரும் வியாசரே. பாரதப் போரில் இரு தரப்பினிலும் பலர் போர்க்களத்தில் அடிபட்டு வீர சுவர்க்கம் அடைந்தனர். அப்போது துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமன் திரவுபதியின் புத்திரர்களை, தூங்கிக் கொண்டிருக்கும் போது குரூரமாகக் கொன்றுவிட்டான். இதைக் கண்டு தாயான திரவுபதி கதறி அழுது பரிதவித்துப் போனாள். அருச்சுனன் கோபம் கொண்டு அசுவத்தாமன் தலையைக் கொண்டு வருவதாகக் கூறி அசுவத்தாமனைப் பின் தொடர்ந்தான். பயந்து ஓடிக்கொண்டிருந்த அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தான். அருச்சுனனும் அதையே பிரயோகிக்க இரண்டும் பயங்கரமாக மோதிக் கொண்டன. பிறகு கிருஷ்ணனின் ஆணைப்படி அருச்சுனன் பிரம்ம அஸ்திரத்தை தன்னிடமே இழுத்துக் கொண்டான். பிறகு அசுவத்தாமாவைப் பிடித்துக் கட்டி, யாக பசுவைப் போல் இழுத்து வந்தான். அப்போது கிருஷ்ணன் அருச்சுனனிடம் அவனுக்குத் தயவு காட்டாதே என்றார்.

பிறகு அருச்சுனனும், கிருஷ்ணனும் திரவுபதியிடம் சென்று அசுவத்தாமாவை தண்டிக்கப் போவதாகக் கூற, திரவுபதி மனமிரங்கி குரு புத்திரனான அசுவத்தாமாவை வணங்கி, அருச்சுனனிடம் அவனை விட்டு விடுமாறு வேண்டினாள். அப்போது அருச்சுனன் அசுவத்தாமனுடைய சிகையை அறுத்து, தலையிலுள்ள சிரோரத்தினத்தையும் அபகரித்தான். பின்னர், அவனை கட்டவிழ்த்து விட்டு கூடாரத்திலிருந்து விரட்டி விட்டான். போரில் உற்றார், உறவினர்களை இழந்து வருந்தும் திருதராஷ்டிரன், காந்தாரி, தர்மபுத்திரர் அவரது சகோதரர்களையும் , குந்தி தேவியையும் ஆறுதல் மொழிகளைக் கூறிச் சமாதானம் செய்தார் கிருஷ்ணன். அப்போது கிருஷ்ணா, காப்பாற்று என்று கூவிக் கொண்டே அபிமன்யுவின் மனைவி உத்திரை கிருஷ்ணனிடம் ஓடிவர கிருஷ்ணன் நடந்தது அறிந்து அசுவத்தாமன் ஏவிய அஸ்திரத்திலிருந்து உத்தரையின் சிசுவைக் காப்பாற்றினார்.

4. கண்ணன் கருணை, பீஷ்மர் மறைவு

உறவினர் பலரும் பாரதப் போரில் மடிந்து போனதை எண்ணி மிகவும் மனம் வருந்தினார் யுதிஷ்டிரர் எனப்படும் தருமபுத்திரன். வியாசமுனிவரும் கிருஷ்ண பகவானும் பலவிதமாக ஆறுதல் கூறியும் யுதிஷ்டிரர் மனம் தெளிவடையவில்லை. இவ்வாறு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க யுதிஷ்டிரர் குரு÷க்ஷத்திரத்தில் விழுந்து கிடந்த பிதாமகர் பீஷ்மரைக் காணச் சென்றார் கிருஷ்ணனுடன். அப்போது பீஷ்மரைக் காண அனைவரும் கூடி இருந்தனர். பீஷ்மர் எல்லோரையும் அன்புடன் வரவேற்றார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை இதய பீடத்தில் அமரச் செய்து பக்தியுடன் வணங்கிப் பூஜித்தார். பிறகு பாண்டவர்களையும், குந்தியையும் நோக்கி சிறு குழந்தைகளான உங்களை வைத்துக் கொண்டு இளவயதுள்ள குந்தி தேவி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து விட்டாள். தர்மன் அறனாகவும், வீரன் பீமனும், வில்லில் சிறந்த விசயனும், உற்ற துணையாக ஸ்ரீகிருஷ்ணனே இருந்தும் வரும் விபத்துக்களைத் தடுக்க இயலாமல் போய் விட்டது. இந்தக் கிருஷ்ணனுடைய எண்ணத்தை யாராலும் அறிய முடியாது. எனவே, யுதிஷ்டிரா! மனம் வருந்தாதே, எல்லாம் தெய்வச் செயல் என எண்ணி, மனதை திடப்படுத்திக் கொண்டு பிரஜைகளை ரக்ஷித்து, ஆட்சி புரிந்து பரதகுல சிரேஷ்டனாக விளங்குவாயாக.

பிறகு எல்லோருக்கும் கிருஷ்ணனைப் பற்றிக் கூறுகிறார் பீஷ்மர். ஸ்ரீகிருஷ்ணன் சாக்ஷõத் பரமாத்மாவே; ஆதிநாராயண மூர்த்தி. இணையற்ற பெருமைகள் கொண்ட இவரை உற்ற நண்பனாக, சாரதியாக, மதிமந்திரியாகக் கொண்டு பழகி வந்தீர்கள். இடையறாத பக்தி பூண்டவர்களிடம், அளவில்லாதக் கருணை உடையவர். உயிரை இழக்கும் தருணத்திலும் எனக்கு திவ்ய தரிசனம் தர இங்கு வந்திருக்கிறார் அவருடைய கிருபையே கிருபை. பகவானுடைய நினைவிலேயே ஆழ்ந்து மரணமடைபவன் சகல பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். சிவந்த தாமரை நயனங்களில் கருணை பொங்க, புன் சிரிப்பினால் ஒளிரும், மலர்ந்த முகத்துடன் விளங்கும் தேவதேவனைத் தியானத்திற்கு உகந்த சகல சதுர்புஜங்களுடன் என் எதிரில் தரிசன அளிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் என்றார் பீஷ்மர். தர்மபுத்திரர் கேட்டுக் கொண்டபடி சகல தரும சாஸ்திரங்களையும் நீதிகளையும் எடுத்துக் கூறினார். பீஷ்மர் எதிர்பார்த்த உத்தராயண புண்ணியகாலம் வந்தது. அவர் மனத்தை பகவானிடம் நிலைநாட்டி கண்களை மூடாமலே தியானம் செய்தார். பீதாம்பர தாரியாய், சதுர்புஜ மூர்த்தியாய் காட்சி அளிக்கும் அந்த ஆதி புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை கண்ணிமைக்காமல் தியானம் செய்த வண்ணம் இருந்தார்.

எல்லாக் கஷ்டங்களும் மறைய இந்திரியங்களெல்லாம் வெளிநாட்டமற்று பகவானிடமே லயித்தன. சரீரத்தை விடப்போகின்ற அச்சமயத்தில் அவர் ஸ்ரீகிருஷ்ணனைப் பலவிதமாக துதி செய்யலானார். பிறகு மெல்ல மெல்ல மூச்சை அடக்கி, மவுனமாகி மனதைக் கிருஷ்ணனிடமே ஒன்றுபடச் செய்து கண்களை மூடி பரம்பொருளிடத்திலே ஐக்கியமாகி விட்டார். மறைந்த மகானுக்கு தருமபுத்திரர் உத்தரகிரியைகளைச் செய்தார். கிருஷ்ண பரமாத்மாவுடன் அஸ்தினாபுரம் வந்த யுதிஷ்டிரர் பெரிய தகப்பனாருக்கும் காந்தாரிக்கும் விஷயத்தைத் தெரிவித்து ஆறுதல் கூறினார். திருதராஷ்டிரனிடமும் அனுமதி பெற்றுத் தர்மநீதி தவறாமல் அரசாட்சி செய்து வந்தார். தருமபுத்திரர் ஆட்சியில் எங்கும் அமைதியும், ஆனந்தமும் சுபிக்ஷமும் நிரம்பி இருந்தன.

5. கிருஷ்ணன் விடைபெற்று துவாரகை செல்லுதல்

ஸ்ரீகிருஷ்ணன் சில நாட்கள் அஸ்தினாபுரத்தில் தங்கி சுபத்திரையை அன்புடன் ஆதரித்து சந்தோஷப்படுத்தினார். மற்றவர்கள் சோகத்தை நிவர்த்தி செய்தார். பிறகு அவர் துவாரகைக்குப் புறப்பட்டார். எல்லோரும் அவர் பிரிவைத் தாங்காமல் வருந்தினர். வாத்யங்கள் முழங்க பயணம் தொடங்கிய ஸ்ரீகிருஷ்ணனை விட்டுப் பிரிய மனமின்றி வெகுதூரம் தொடர்ந்து வந்த பாண்டவர்களையும், மற்றவர்களையும் சமாதானம் கூறி விடை கொடுத்தனுப்பினார். பிறகு தேரேறி உத்தவர், சாத்யகி ஆகியோருடன், துவாரகை அடைய அப்போது தனது திவ்யமான சங்கை ஊதினார். துவாரகை மக்கள் திரண்டு காணிக்கைகளுடன் வந்து ஸ்ரீகிருஷ்ணனை உற்சாகத்துடன் வரவேற்றுத் துதித்தனர். கிருஷ்ணர் எல்லோருக்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் அரண்மனை சென்று, தேவகி முதலான மாதாக்களையும், வாசுதேவரையும் பணிவுடன் நமஸ்கரிக்க, அவர்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஆசீர்வதித்தனர்.

6. விதுரன் திருதராஷ்டிரன் முடிவு

சூத முனிவர் சவுனகாதி முனிவர்களுக்கு மேலும் கூறலானார். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த விதுரர் அஸ்தினாபுரம் வரும் வழியில் மைத்ரேயரைச் சந்தித்து ஆத்ம தத்துவத்தைக் கேட்டு அறிந்து சிறந்த ஞானத்தைப் பெற்று ஸ்ரீகிருஷ்ணன் மீது நிர்மலமான பக்தியும், அமைதியும் பெற்றார். நீண்ட நாட்களாய் பிரிந்திருந்த சிறிய தகப்பனார் விதுரரைக் கண்ட யுதிஷ்டிரர் அன்புக் கண்ணீர் பெருக்கினார். பிறகு விதுரருக்குப் போஜனம் செய்வித்து யோக÷க்ஷமங்களை விசாரித்தார். அப்போது விதுரர் தருமனுக்கு எல்லாவற்றையும் கூறினார். ஆனால், யதுகுலத்துக்கு நேர்ந்த கஷ்டத்தை மட்டும் கூறவில்லை. பிறகு தனது தமையனாருக்கு ஞானமார்க்கம் பற்றி எடுத்துக் கூறியவராக காலம் கடத்தி வருகையில் மரணகாலம் நெருங்குவதை அறிந்து தமையனிடம் பின்வருமாறு கூறினார். காலதேவனின் சக்தியை வெல்ல முடியாதல்லவா. விரைவிலேயே வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும். அதற்காக இந்த வயதில் பிறரை அண்டி வாழ வேண்டும். எவர்களுக்காகப் பல கொடிய செயல்களைச் செய்தீரோ அவர்கள் வீட்டிலேயே வாழலாமா? வீட்டைக் காக்கும் நாய்க்கு சோறிடுவதைப் போல பீமன் உமக்கு அன்னம் இடுகிறான்.

எவ்வளவுதான் உயிர்மீது ஆசை வைத்தாலும் சரீரம் காலக்கிரமத்தில் அழியும். எவன் ஆசைகளை விட்டுப் பற்றின்றி வைராக்கிய மனதுடன், வீட்டை விட்டு வெளியேறி யாரும் அறியாமல் சரீரத்தை விடுகிறானோ அவனே தீரபுருஷன். எவன் ஸ்ரீஹரியின் சரணங்களையே தியானித்து வீட்டை விட்டுத் துறவியாக புறப்பட்டுச் செல்கிறானோ அவனே உத்தமன். எனவே உடனே யாருக்கும் தெரிவிக்காமல் வடக்கு திக்கில் செல்லுங்கள் என்றார். உடனே திருதராஷ்டிரன், காந்தாரி பின் தொடர விதுரர் வழிகாட்ட வீட்டைத் துறந்து, இமயமலைக்குச் சென்று விட்டார். தருமர் வழக்கப்படி பெற்றோர்களை வணங்க வந்தவர், மாளிகையில் யாரும் இல்லாதது பற்றி சஞ்ஜயரைக் கேட்க, அவரும் தன்னை ஏமாற்றிவிட்டு அவர்கள் எங்கு சென்றார்களோ தெரியவில்லை என்றார். அப்போது அங்கே வந்த நாரத முனிவர் வீணாக வருந்த வேண்டாம்; எல்லாம் பகவான் கட்டளைப்படியே நடக்கும். பஞ்சபூத சரீரத்தினால் ஆன எவரையும் காப்பாற்ற முடியாது என்று கூறி திருதராஷ்டிரர் குடும்பத்துடன் இமயமலை சென்றதைக் கூறினார். தருமன் மனம் தெளிந்து சோகத்தை விட்டார்.

தருமர் முதலானோர் வீடு பேறு

சில நாட்கள் கழிந்த பின் தருமர், உற்றார் உறவினர் ÷க்ஷம லாபங்களை அறிந்து வர அருச்சுனனைத் துவாரகைக்கு அனுப்பினார். அஸ்தினாபுரத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. பல மாதங்களிலும் அருச்சுனன் திரும்பி வராததால் பீமசேனனைத் துவாரகைக்குச் சென்று வருமாறு கூறினார். மேலும் நாரதர் கூறியபடி பகவான் தனது லீலாவதாரமான சரீரத்தை விட்டு விடும் காலம் வந்து விட்டதோ என்று கவலையுற்றான். அவ்வமயம் துவாரகையிலிருந்து திரும்பி வந்த அருச்சுனன் யுதிஷ்டிரரை வணங்கிக் கண்ணீர் மல்க நிற்பது கண்டுபயந்தார். எல்லோரும் நலந்தானே என்று விசாரித்தார். அப்போது அருச்சுனன் நா தழுதழுக்க, ஸ்ரீஹரி உற்ற பந்துவாக இருந்தும் என்னை வஞ்சித்து விட்டார். என்னுடைய தேஜஸ் வீர்யம் எல்லாம் அபகரிக்கப் பட்டு விட்டது. நான் சக்தி அற்றவன் ஆகிவிட்டேன். அவருடன் வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது. துவாரகா நகரமே சூன்யமாகி விட்டது. நமக்குக் கோவிந்தனுடைய நாமஸ்மரணமே தான் துணை. அதுவே நமது துன்பங்களை நீக்கக் கூடியது என்று ஆற்றாமையுடன் கூறினான். பின்னர் கீதோபதேசங்களை நினைவு கூர்ந்து ஞானம் பெற்றான். குணாதீத நிலையைப் பெற்ற அவன் ஜீவன் முக்தனானான். குந்தியும் அவன் சொற்களைக் கேட்டு சம்சார சூழலிலிருந்து விடுபட்டாள்.

சக்கரவர்த்தியாகிய தருமபுத்திரன், குணசாலியும் வணக்கமுடையவனுமாகிய பேரனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து மதுரா நகரில் சூரசேன நாட்டிற்கு வஜ்ரனை அரசனாக்கினார். பின்னர் அகங்கார, மமகாரங்களை விட்டு மோகமின்றி எல்லாப் பந்தங்களையும் துறந்து வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அரண்மனையை விட்டு வெளியேறினார். சகோதரர்களும் மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். திரவுபதியும் வாசுதேவனையே சரணாக அடைந்து, ஏகாந்தபக்தியில் ஈடுபட்டு அவரையே அடைந்தார். இவ்வாறு பகவானுடைய பிரியமான பக்தர்களான பாண்டவர்களுடைய மகா பிரயாணத்தைப் பற்றி பாகவதம் கூறுகிறது.

7. பரீக்ஷித்தின் கதை

உத்தரையின் பிரார்த்தனையை ஏற்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவள் கருவை அழிக்க அசுவத்தாமனால் ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தின் உக்கிரத்தை, அங்குஷ்ட பிரமாணமுடன்-சிசுவின் அருகிலே நெருங்கவிடாமல் இருந்து ரட்சித்து வந்தார். பிறகு ஒரு சுபலக்கினத்தில் ஓர் ஆண் குழந்தை உத்தரைக்குப் பிறந்தது. அதுவே பரீக்ஷித்து ஆகும். மகாவிஷ்ணுவால் ரட்சிக்கப்பட்டு பிறந்த அந்தக் குழந்தைக்கு விஷ்ணுராதன் என்று பெயர் வைத்தனர். அக்குழந்தை தாயின் கருவில் கண்ட திவ்ய சொரூபி யார் என்று பரீட்சை செய்துகொண்டு இடைவிடாமல் அப்பகவானையே சிந்தித்ததாலும் விஷ்ணுராதனுக்கு பரீக்ஷித் என்று பெயர் ஏற்பட்டது. பரீக்ஷித், உத்தரன் பெண்ணாகிய இராவதியை மணந்து, தர்மநீதி தவறாமல் ஆண்டு வந்தான். அவனுக்கு ஜனமேஜயன் முதலான நான்கு குமாரர்கள் பிறந்தனர்.

ஒரு சமயம் பரீக்ஷித் திக்விஜயம் செய்து வருகையில் பாண்டவர்களின், ஸ்ரீகிருஷ்ணனின் கீர்த்தி ஆகியவற்றைப் பற்றி மக்கள் சிலாகித்துப் பேசுவதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றான். இதனால், பரீக்ஷித்தின் உள்ளத்தின் கிருஷ்ணபக்தி பெருக்கெடுத்தது. பக்திப் பரவசமடைந்த அவன் மனம் ஸ்ரீகிருஷ்ணரின் சரணார விந்தங்களையே தியானிக்கத் தொடங்கியது. தேச சஞ்சாரம் செய்து வந்தபோது பரீக்ஷித்து ஒரு பசுவும், ரிஷபமும் மிக்க தீனமாக நிற்பதையும், ஒரு முரட்டு மனிதன் அவற்றை அடித்து இம்சிப்பதையும் கண்டான். அதைக் கண்ட பரீக்ஷித் கோபம் மிக்கவனாக அதட்டி கேட்கலனான். துஷ்டனே நீ யார்? என் ஆட்சியில் இந்தக் கொடுமையான செயலைப் புரிந்த உன்னைத் தண்டிக்கப் போகிறேன். துஷ்டர்களைச் சிக்ஷித்து, சாதுக்களை ரக்ஷிப்பதும் அரசனது கடமையே. பிறகு ரிஷபத்தை நோக்கி, ஒற்றைக் காலில் நிற்கும் நீர் தேவதைகளில் யார்? மற்றப்பாதங்களை வெட்டியது யார்? என்று கேட்க, அது கூறியது: துன்பங்களுக்குக் காரணம் பல வகையாகச் சொல்லப்படுவதால் அறிவில் சிறந்த தாங்களே அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் என்றது.

அரசன் சிந்தித்து ரிஷபத்தை நோக்கி, நீர் தருமதேவதை. நீர் சத்தியம், தயை, தவம், ஆச்சாரம் என்னும் நான்கு பாதங்களுடன் கிருதயுகத்தில் சஞ்சரித்து வந்தீர் அல்லவா. கர்வம், மதம், பேராசை ஆகிய அம்சங்களினால் மூன்று கால்களை இழந்துவிட்டீர். சத்தியம் என்னும் ஒரே காலில் இப்போது நிற்கிறீர் அதையும் அசத்தியமே உருவான கலிபுருஷன் வெட்டப்பார்க்கிறான் என்றார். பொறுமையே உருவான பூதேவியே பசுவாக வந்திருக்கிறாள். பகவானுடைய சரண ஸ்பரீசத்தால் மகிழ்ச்சி அடைந்திருந்த அவள் இப்போது கண்ணீர் மல்கி நிற்கின்றாள் என்று கூறி அருகிலுள்ள வேடதாரியைக் கொல்ல உடைவாளைக் கையில் எடுத்தான் பரீக்ஷித்து. அதுகண்ட முரட்டு கலி மனிதன் பரீக்ஷித்தின் காலில் விழுந்து வணங்கினான். அப்போது பரீக்ஷித்து அருச்சுனன் புகழைப் பாதுகாத்து வரும் நான் சரணமடைந்த வரைக் கொல்வதில்லை.

நீ கலகம், பொய், திருட்டு, கபடம் ஆகிய தீயகுணங்கள் நிறைந்தவன். எனவே சத்தியம், தர்மம் நிறைந்த இந்த பிரம்மாவர்த்தத்தில் வசிக்கக்கூடாது என்று ஆணையிட அவன் தான் நிலையாக இருப்பதற்கான இடம் ஒன்று குறிப்பிட வேண்டினான். அதற்கு பரீக்ஷித்து சூதாட்டம், மதுபானம், விபச்சாரம், கொலை முதலிய அதர்மங்கள் நடக்கும் இடத்திற்குச் சென்று வசிக்குமாறு கூறினார். மேலும் சில இடங்களைக் கலி வேண்டிட பரீக்ஷித்து பொய், காமம், மதம், விரோதம், கோபம் ஆகிய ஐந்து இடங்களையும் குறிப்பிட்டார்.

பரீக்ஷித்தின் ஆட்சி

இவ்வாறு கலியை விரட்டிய பிறகு அரசன் தயை, தவம், ஆச்சாரம் ஆகியவற்றை வளர்த்து தர்ம தேவதையாகிய ரிஷபத்தின் மூன்று கால்களையும் வளரச் செய்தார். பூதேவியாகிய பசுவைச் சமாதானம் செய்து புஷ்டியுடன் விளங்கச் செய்தார். இவ்வாறு அபிமன்யுவின் புத்திரரான பரீக்ஷித்து தர்மத்தையும் பூமியையும் நன்றாகப் பாதுகாத்துப் புகழுடன் அஸ்தினாபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார்.

கலியினால் அனுகூலம்

பாவங்களைச் செய்த பிறகே அதன் பலனை அனுபவிக்க நேரிடுகின்றது. நற்செயல்களையே நினைத்து பாவங்களிலிருந்து விலகி வாழ்வதே நல்லது என்று அறிதல் கலியிலுள்ள சிறந்த அனுகூலம் ஆகும். அவன் தைரியமுள்ளவர்களிடம் நெருங்கமாட்டான்.

8. பரீக்ஷித்து பெற்ற சாபம்

ஒரு சமயம் மன்னன் பரீக்ஷித்து வேட்டையாடச் சென்றான். காட்டில் களைப்புற்ற அவர் அருகிலிருந்த ஆசிரமத்தில் நுழைந்தான். அங்கு மெய்மறந்து தவமியற்றி வந்த சமீக முனிவரைக் கண்டான். அவர் உண்மையில் நிஷ்டையிலிருக்கிறாரா என்று அறிய புறத்தே கிடந்த பாம்பை வில்லால் எடுத்து அவர் கழுத்தில் போட்டுவிட்டு தன் நகரத்தை அடைந்தான். ஆசிரமம் அடைந்த சமீக முனிவரின் புத்திரன் தந்தை நிஷ்டையிலிருப்பதையும், அவர் கழுத்தில் ஓர் உயிரற்ற பாம்பு கிடப்பதையும் கொண்டு கோபம் கொண்ட அவன் கண்கள் சிவக்க கவுசீக நதியில் இறங்கி ஆசமனம் செய்து தந்தையை அவமதித்த அரசன் இன்றையிலிருந்து ஏழாவது நாளில் என்னால் தூண்டப்பட்ட தக்ஷகன் என்ற, கொடிய சர்ப்பம் தீண்டி இறக்கட்டும் எனச் சாபமிட்டான். பிறகு பாம்புடை கழுத்தைக் கண்டு துக்கத்துடன் கதறி அழுதான்.

சப்தம் கேட்டுக் கண் விழித்த சமீக முனிவர் பாம்பை எடுத்து எறிந்துவிட்டு, தனது புத்திரன் மூலம் நிகழ்ந்தவற்றை எல்லாம் அறிந்து புத்திரனைக் கொண்டாடாமல், அரசர் வந்தபோது உபசரியாமல் இருந்ததற்கும், தன் புத்திரன் அவருக்கு இட்ட சாபத்திற்காகவும் மிக்க வருத்தமுற்றார். மன்னனுக்காகப் பச்சாதாபப்பட்டார். அரசன் செய்த தவறை மறந்தும் விட்டார். மன்னன் பரீக்ஷித்து தன் பிழைக்காக வருந்தி, தவறு செய்த அவனுக்கு ஏற்படக்கூடிய விபத்தைப் பற்றியும் அவனது ராஜ்யம், செல்வம் எல்லாம் அழிந்து விடும் என்றும் எண்ணிச் சிந்தித்தான். மேலும் ரிஷி சாபம் தனக்கு அனுகூலமானதே. உலகில் பற்று கொண்டு உழலும் தனக்கு விரக்தி ஏற்பட தக்ஷகன் விஷச்சுவாலை தேவையே. அந்த அக்கினியால் தனது பாபங்கள் தொலையும் என எண்ணி மகிழ்ச்சியுற்றான். பின்னர் இகபரசுகங்கள் அநித்யம். எனவே அவற்றிலிருந்து விடுபட்டு ஸ்ரீகிருஷ்ண சரணங்களைத் தியானித்துக் கொண்டே, கங்கைக் கரையில் பிராயோபவேசம் செய்ய நிச்சயித்தான் பரீக்ஷித்து.

புறப்படும் நேரத்தில் அத்திரி, வசிஷ்டர், ப்ருகு, ஆங்கீரசர், பரத்வாஜர், தேவலர், மைத்ரேயர், நாரதர் ஆகிய ரிஷிகள் அங்கு வந்தனர். அவர்களைத் தக்க வகையில் உபசரித்து கீழ்க்கண்டவாறு கூறினான். தங்கள் தரிசனம் கிடைத்தது என் பாக்கியம். வைராக்கியம் ஏற்படவே பிராம்மண சாபத்தைப் பகவான் அருளினார். தங்களையும் கங்காதேவியையும் வணங்குகிறேன். தக்ஷகன் என்னைக் கடிக்கட்டும். முனிவர்களிடம் ஹரிநாம கீர்த்தனை செய்யுமாறும், தனக்கு எப்பிறவியிலும் கிருஷ்ண பக்தி குறையாமல் இருக்கவும் பிரார்த்தித்தான். அரசை புத்திரன் ஜனமேஜயனிடம் ஒப்படைத்து கங்கையைக் கரையில் வடக்கு நோக்கி தர்ப்பாசனத்தில் அமர்ந்தான். சியாமள வர்ண மேனியுடன், புன்சிரிப்பு தவழ ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் ஒளிரும் சுகப்பிரம்மத்தை எல்லோரும் எழுந்து வரவேற்று ஆசனத்தில் இருக்கச் செய்தனர். பின்னர் பரீக்ஷித் அவரை நோக்கி, ஆத்ம சொரூபியான அவர் அதிதியாக வந்து அனைவரையும் தூய்மையாக்கி விட்டதாகக் கூறினான். மரண சமயத்தில் அவர் தரிசனம் கிடைத்தது கிருஷ்ணன் அருளால்தான் என்றான்.

மேலும் பரீக்ஷித்து அவரைத் தனக்கு குருவாக இருந்து அந்த மரணத்தருவாயில் உபதேசம் செய்ய வேண்டினான். மரணத்தருவாயில் இருப்பவன் எதைச் செய்ய வேண்டும்? எதைக் கேட்க வேண்டும்? எதை ஜபிக்க வேண்டும்? யாரை பஜனை செய்து உபாசனை செய்ய வேண்டும்? என்றும் செய்யத் தகாதவை பற்றியும் கூறி அருளுக சுகப்பிரம்மத்தினிடம் வேண்டிக் கொண்டான். மிக்க மகிழ்ச்சி கொண்ட அவரும் பதில் கூறலானார் என்று சூத பவுரானிகர் சனகாதி ரிஷிகளுக்குக் கூறினார்.

(இத்துடன் முதல் ஸ்கந்தம் முடிவுற இரண்டாவது ஸ்கந்தம் சுகப்பிரம்மத்தின் பதிலுடன் ஆரம்பிக்கிறது.)

9. சுகப்பிரம்மம் கூறிய பதில்

பரீக்ஷித்திற்கு சுகதேவர் மகிழ்ச்சியுடன் பதில் கூறலானார். பரதகுல சிரேஷ்டனே! மோக்ஷத்தை விரும்புகிறவன் ஸ்ரீகிருஷ்ண சரித்திரத்தையே சிரவணம் செய்து, அவரது லீலைகளையே கானம் செய்து, அவரது நினைவிலேயே ஆழ்ந்திருந்தால் மரண காலத்தில் ஸ்ரீமந் நாராயணனுடைய நினைவு கட்டாயம் ஏற்படும். இதுவே பிறவிப்பயன். இது மிக்க இன்பத்தையும் அளிப்பது. ஸ்ரீமத் பாகவத புராணம் வேதத்திற்குச் சமமானது. புரு÷ஷாத்தமனிடத்திலே சிறந்த பக்தியுள்ள உமக்கு நான் இதை அளிக்கிறேன். பகவத் சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர்க்கு வெகு விரைவில் முகுந்தனிடத்தில் இணையற்ற பக்தி ஏற்படும். கர்வாங்கன் என்ற ராஜரிஷி ஒரு முகூர்த்த காலமே ஆயுள் பாக்கி இருந்த நிலையில் ஆசைகளைத் துறந்து, சர்வ சங்க பரித்யாகம் செய்து, ஸ்ரீ ஹரியின் சரணங்களையே தியானித்து அச்சமற்ற நிலையை-சாயுஜ்ய பதவியை அடைந்தான். சுகப்பிரம்மம் மேலும் கூறினார்,

உமக்கோ ஆயுள் இன்னும் ஏழு நாட்கள் உள்ளன. சரீர உறவுகளில் உள்ள பற்றுதலை வைராக்கியம் கொண்டு அகற்றிவிட வேண்டும். பிறகு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தூய்மையான ஏகாந்த இடத்தில், ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமத்தினால் மனத்தை அடக்கி, புனிதமான பிரணவ மந்திரத்தை இடைவிடாது மானசீகமாக ஜபம் செய்ய வேண்டும். மனதை பகவானுடைய மங்களச் சொரூபத்தில் நிலைபெறச் செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் நிர்மலமான ஆனந்தமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரமபதம். திடமான தாரணையால் ரஜோகுணத்தால் ஏற்படும் மனக்கலக்கம், தபோ குணத்தால் மோகம் உண்டாகும். அவற்றை திடமான தாரணையால் விலக்க வேண்டும் என்றார்.

தாரணையை எங்கு, எப்படிச் செய்ய வேண்டும் என்று பரீக்ஷித்து கேட்டார். சுகமான இருக்கையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, பற்று நீக்கி, சுவாசத்தை ஒழுங்காக்கி, பகவானின் ஸ்தூல வடிவத்தில் மனதைச் செலுத்தித் தாரணை செய்ய வேண்டும். இந்தப் பிரபஞ்சமே பகவானுடைய விராட்ஸ்வரூபம். எல்லாமே அதனுள் அடக்கம். ஏழு ஆவரணங்களை உடைய பிரம்மாண்ட கோசமான இந்தச் சரீரத்திலே விராட் புருஷனாக விளங்குகின்ற பகவானே தாரணைக்கு உரியவர். சத்ய சொரூபியாகவும், ஆனந்த நிதியாகவும் விளங்கும், அந்தப் பரம்பொருளே தியானத்துக்கு உகந்த வஸ்து. அந்தத் திவ்ய வடிவத்தையே பூஜிக்க வேண்டும். மற்ற ஆசைகளை விட்டுவிட வேண்டும்.

ஸ்ரீஹரியையே இடைவிடாமல் பூஜிக்க வேண்டும். அவரே சகல மங்களங்களையும் தரவல்லவர். தமது இதயாகாசத்திலே வசிக்கின்றவரான சங்க, சக்ர, கதா, பத்மபாணியாக விளங்கும் சதுர்புஜ மூர்த்தியாகிய பரம புருஷனையே இடைவிடாமல் தாரணை செய்து தியானிக்கின்றனர். இவ்வாறு சுகமுனிவரால் கூறப்பட்ட பகவானுடைய மகிமைகளைக் கேட்டதும், பரீக்ஷித்து மகாராஜன் அனைத்தையும் துறந்து பகவான் வசுதேவரிடத்திலேயே மனதைச் செலுத்தினார். பின்னர், சுகமுனிவரை நமஸ்கரித்து தன் அஞ்ஞானம் விலகி விட்டதென்று கூறி, பகவான் தனது மாயாசக்தியினால் இப்பிரபஞ்சத்தை எவ்வாறு சிருஷ்டி செய்கிறார் என்பதை அறிய விரும்பி அதைச் சொல்ல வேண்டி முனிவரை வேண்டினான். அப்போது பரீக்ஷித்தை நோக்கி சுகமுனிவர், ஸ்ரீஹரியானவர் ஸ்வயம்புவான பிரம்மதேவருக்கு உபதேசித்ததை அவர் நாரதருக்கு உபதேசித்தார். அவ்வாறு அவர் உபதேசித்தவற்றையே நான் உமக்குக் கூறுகிறேன் என்று சுகமுனிவர் கூற ஆரம்பித்தார்.

நாரத முனிவர் பிரம்ம தேவனிடம் ஆத்ம தத்துவத்தைத் தனக்கு உபதேசித்தருள வேண்டினார். மேலும், அவரே சிருஷ்டி கர்த்தாவாக இருந்தும், அவரைக் காட்டிலும் வேறாக உள்ள ஈசுவரர் யார்? என்று கேட்டார். அதற்கு பிரம்மத்தேவர் என்னைக் காட்டிலும் ஆதாரமாயிருப்பவர் ஒருவர் இருக்கிறார். இவ்வுலகம் முழுவதுமே பரவாசுதேவனுடைய சக்தியினாலேயே விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த அண்ட சராசரங்கள் யாவும் அவருடைய திவ்ய விபூதிகளேயாகும். சக பிரபஞ்ச சிருஷ்டிகளுக்கும் காரண கர்த்தாவாக விளங்குகின்ற ஸ்ரீவாசுதேவரைத் தியானிப்போமாக. அளவற்ற மகிமை வாய்ந்த பகவானின் லீலா விநோதங்களை உனக்குக் கூறுகிறேன் என்று நாரதரிடம் பிரம்மதேவன் கூற ஆரம்பித்தார். அவர் பகவானுடைய அவதாரங்கள் கணக்கிடலங்கா. சில முக்கிய அவதாரங்களைக் கூறுகிறேன் என்றார்.

10. பகவானது அவதாரங்கள்

1. ஆதியில் யக்ஞவராக மூர்த்தியாக அவதரித்து ஹிரண்யாக்ஷனை கூரிய பற்களால் குத்திக் கிழித்து வதம் செய்தார். இது வராக அவதாரம்.
2. ருசி, ஆஹுதி என்ற தம்பதிகளுக்கு கயக்ஞன் என்ற புத்திரனாக அவதரித்து தேவதைகளைத் தோற்றுவித்து அவர்களுடைய துயர்துடைத்து ஹரி என்றழைக்கப்பட்டார். இது யக்ஞாவதாரம்.
3. கபிலராக அவதரித்து, தாயாரான தேவஹூதிக்குப் பிற்காலத்தில் பிரம்ம வித்தையை உபதேசித்து, முக்குண தோஷங்களிலிருந்து விடுவித்து கபிலருடைய உருவத்தில் லயித்து முக்தி அடையச் செய்தார். இது கபிலாவதாரம்.
4. அத்ரி மகரிஷிக்குப் புத்திரனாகத் தோன்றிய தத்தாத்திரேய அவதாரம்.
5. பிரம்மன் பலவகை உலகங்களைச் சிருஷ்டி செய்யத் தவம் செய்தபோது திருப்தி அடைந்த பகவான் ஸனத் குமாரர், ஸனக, ஸந்தன, ஸனத் சுஜாத என்ற பெயருடன் நால்வராகத் தோன்றி மகரிஷிகளுக்கு ஆத்ம வித்தையை மீண்டும் உபதேசித்தார். இது குமாரவதாரம்.
6. தக்ஷகுமாரியான மூர்த்தி என்பவளுக்கு நர, நாராயண சொரூபியாக அவதரித்து, இந்திரியங்களை ஜபிப்பது எப்படி என்பதை எடுத்துக் காட்டினார். இது நரநாராயண அவதாரம்.
7. வேனன் என்ற மன்னன் கீழாக சுதியை அடைந்தபோது ரிஷிகள் வேண்டுகோளுக்கு இணங்கி, அவனுக்குப் புத்திரனாய்ப் பிறந்து அவனை நரகத்திலிருந்து விடுவித்து, பிருகு சக்கரவர்த்தியாக, பூமியைப் பசுவாகச் செய்து சகல வஸ்துக்களையும் கறந்து உலகை ரக்ஷித்தார். இது பிருகு அவதாரம்.
8. நாபி என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து, முற்றும் துறந்த முனிவராக, ஆத்ம சொரூபத்திலே ஆழ்ந்து சஞ்சரித்தது ரிஷபாவதாரம்.
9. ஒரு சமயம் நான் செய்த யாகத்தில் பொன்னிறமான மேனியுடன் யக்ஞ சொரூபியாக, வேதமூர்த்தியாக பகவான் விளங்கினார். அவருடைய மூச்சுக்காற்றிலிருந்தே வேதங்களும் தோன்றின. இது ஹயக்ரீவாவதாரம்.
10. பிரளய காலத்தில் மறைந்த வேதங்களை மீட்க பகவான் மீனாகத் தோன்றியது மத்ஸ்யாவதாரம்.
11. தேவாசுரர்கள் அமிருதத்துக்காகப் பாற்கடலைக் கடைந்தபோது மத்தான மந்தரமலையை முதுகிலே தாங்கிட எடுத்ததோர் அவதாரமே கூர்மாவதாரம்.
12. தேவர்களுடைய துன்பத்தை நீக்கவும், பக்த பிரகலாதனைக் காக்கவும் ஹிரண்யகசிபைக் கொல்லத் தூணிலிருந்து தோன்றியது நரசிம்மாவதாரம்.
13. அதிதி தேவிக்குப் புத்திரனாகப் பிறந்து மகாபலிச் சக்கரவர்த்திக்கு அனுக்கிரகம் செய்ய வாமனனாகத் தோன்றி மூன்றடி மண்ணை யாசித்தது வாமன அவதாரம்.
14. பகவான் மக்களின் நோய்களைத் தீர்க்க ஆயுர்வேதமென்னும் வைத்திய சாஸ்திரத்தை அளித்தது தன்வந்திரி அவதாரம்.
15. ஜமத்கினி முனிவரின் திருமகனாய்த் தோன்றி, பரசுவைக் கையிலேந்தி பிராம்மணத் வேஷிகளான அரசர்களை அழித்த அவதாரம் பரசுராமாவதாரம்.
16. இஷ்வாகு குலத்தில் தசரத குமாரனாகத் தோன்றி இராவணாதியரை அழித்ததோர் அவதாரம் ராமாவதாரம்.
17. கம்சன், சிசுபாலன், ஜராசந்தன் போன்ற அசுர அரக்கர்களைக் கொன்று பூமியை ரக்ஷித்த அவதாரம் பலராம, கிருஷ்ணாவதாரம்.
18. கல்கியாக அவதரித்து கலியை அடக்குவார். அந்த அவதாரம் கல்கி அவதாரம்.
19. துருவனுக்குத் துருவபதம் அளித்தது, கஜேந்திரனுக்கு மோக்ஷம் தந்தது போன்ற அற்புதங்களை நிகழ்த்தியவர் மகாவிஷ்ணு.

இவ்வாறு பகவானால் பிரம்மாவுக்கு உபதேசித்ததும், அவர் நாரதர்க்கு உபதேசம் செய்ததுமான பாகவத புராணத்தை முனிவர் பரீக்ஷித்துக்குக் கூறி அருளினார்.
அப்போது பரீக்ஷித்து மிக்க பாக்கியம் உள்ளவரே! நான் உயிரை விடும்போது எனது மனம் சர்வாத்மாவாகிய ஸ்ரீகிருஷ்ணனிடத்திலேயே ஒன்றி இருக்குமாறு உபதேசியுங்கள் என்று பரீக்ஷித்து சூதமுனிவரிடம் பிரார்த்தித்தான்.
(இரண்டாவது ஸ்கந்தம் முடிவு பெற்றது.)

11. விதுரரும் உத்தவரும்

பாண்டவர் தூதராகச் சென்ற கிருஷ்ணன், துரியோதனன் மாளிகையை அடையாமல், அழையாதபோதும் விதுரர் இல்லம் சென்றார். அந்தப் புனித கிரகத்தை விட்டு விட்டு விதுரர் கானம் செல்ல வழியில் மைத்ரேயரைச் சந்தித்து ஆத்மஞானம் பெற்றார். கண்ணுடன் அறிவும் குருடாக இருந்த திருதராஷ்டிரன் பாண்டவர்களை அரக்கு மாளிகையில் இட்டு அக்னி ஊட்டியது. திரவுபதியை நடுச்சபையில் துகில் உரித்து அவமானம் செய்தது. பிறகு, பாண்டவர்களில் தருமராஜன் சூதாட்டத்தில் அனைத்தையும் இழக்க, அவர்கள் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாத வாசமும் செய்ய நேரிட்டது. பின்னரும் தூது சென்ற கிருஷ்ணனை அவமதித்து ராஜ்யபாகம் கண்டு நீதிகளை எடுத்துரைத்தார். அவையே விதுர நீதி என்று விளங்குவது. இந்த நீதி உரைகள் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் ஆயிற்று. மேலும், இதனால் கோபம் கொண்ட துரியோதனாதியர் ஆத்திரம் கொண்டு அவரைத் துரத்துமாறு கூச்சலிட, அவர் மிகவும் நிதானமாக, தன் கை வில்லையும், அம்பையும் அரண்மனை வாசலிலே வைத்துவிட்டுத் தீர்த்தயாத்திரை சென்றார்.

பல திவ்ய ÷க்ஷத்திரங்களைத் தரிசித்து, ஸ்ரீவிஷ்ணுவுக்குப் பிரீதியான விரதங்களை அனுஷ்டித்து சஞ்சரித்துக் கொண்டிருந்த அவர் கடைசியில் பிரபாச தீர்த்தக்கரையை அடைந்தபோது குரு÷க்ஷத்திரப் போரில் கவுரவர் குலநாசம், பாண்டவர் வெற்றி கேட்டு வருந்தினார். பின்னர், மேலும் பல இடங்களுக்குச் சென்று யமுனை நதிக்கரையை அடைந்த அவர் அங்கு சிறந்த உத்தவ முனிவரைச் சந்தித்து யாதவர்கள் நலம் பற்றி விசாரித்தார். உடனே கிருஷ்ணபக்தியில் திளைத்து இருந்த அவர், அந்த ஆனந்த நிலையிலிருந்து மனித உலகிற்கு வந்து கண்ணீர் விட்டுக் கதறினார். கிருஷ்ணன் மறைவையும், வெற்றி பெற்றும் பாண்டவர் உற்சாகமற்றிருப்பதையும் எடுத்துரைத்தார். யாதவர்கள் பகவானின் மகிமைகளை அறியவில்லை. தரிசனம் செய்தது போதும் என்று திருப்தி அடையாமல் இருக்கும் போதே நம்மைப் பிரிந்து போய் விட்டார். அவருடைய லீலைகளை நினைத்தால் உள்ளம் உருகுகின்றது. சிசுபாலன், கம்சன் போன்றோரை விளையாட்டாகத் தண்டித்தார்.

அந்த பகவான் சாந்தீபினி முனிவரிடம் குருகுலத்தில் கற்றார். குரு தக்ஷிணையாக மரணம் அடைந்த குருபுத்திரனை உயிர் பெறச் செய்து சமர்ப்பித்த மாயாஜாலம் எவ்வளவு சிறந்தது. தேவி ருக்மிணியை மணந்தது, நரகாசுரனை வதைத்தது, எட்டு பட்ட மகிஷிகளை மணந்து வர்ணாசிரம தருமங்களைத் தவறாமல் அனுஷ்டித்தது ஆகியவற்றை எண்ணி பிரமித்தார். குரு÷க்ஷத்திரப் போரில் அருச்சுனனுக்குச் சாரதியாக கீதோபதேசம் செய்த கபடநாடக சூத்திரதாரியை நினைவு கூர்ந்தார். பூபாரத்தைக் குறைக்க யாதவ குலமே அழியவேண்டுமெனத் தீர்மானித்தார். ஒரு சமயம் துவாரகையில் யதுகுமாரர்களும், போஜர்களும் விளையாடிக் கொண்டிருந்த உற்சாகத்தில் பிராமணர்களைக் கேலி செய்து அவமதிக்க அவர்கள் சபித்தனர். அதன் காரணமாக யாதவர்கள் மதுவினால் அறிவிழந்து, பரஸ்பர துவேஷத்தாலும், கலகத்தாலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்தனர். அதே சமயம் பகவானும் சரஸ்வதி நதி தீரத்தில் ஆசமனம் செய்து ஒரு அரச மரத்தினடியில் தனியாக அமர்ந்திருந்து மாயாசக்தியால் யாதவர் அழிவை அறிந்தும் மவுனமாக இருந்தவர் என்னை பதரிகாசிரமம் செல்லுமாறு பணித்தார். தனியே அவரை விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே நின்றேன்.

அப்போது இடது தொடை மேலே, வலது பாதத்தை வைத்துச் சாய்ந்தபடியே, அன்னபானம் துறந்து, புன்னகை வதனத்துடன் ஆனந்த சொரூபியாகக் காட்சி அளித்தார். அது கண்டு மெய் மறந்த நிலையில் நான் இருக்கையில், மைத்ரேயர் அங்கு வந்தார். இருவரையும் பகவான் அனுக்கிரகித்து பின்வருமாறு கூறினார்: உத்தவ, உன் எண்ணத்தை நான் அறிவேன். உன் ஆசைப்படி இவ்வுலகத்தை விட்டுச் செல்லுகின்ற என்னை ஏகாந்தத்தில் தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றாய். முன் கல்பத்தில் பிரம்மனுக்கு எனது மகிமைகளை எடுத்துக் கூறினேன். அதுவே பாகவதம். அதனை எனக்கு உபதேசம் செய்தார். அப்போது கண்ணீருடன் உத்தவர், கிருஷ்ணனின் பாதகமலங்களைத் தொட்டு, கண்ணா! உமது சரணார விந்தங்களைப் பூஜிப்பவர்களுக்குக் கிடைக்காதது எது? எனக்கு புருஷார்த்தங்களில் ஆசை இல்லை. உமது சரண சேவையே போதுமானது, என்றும், ஆத்ம ஞானநீதியைப் பெற்று வந்திருப்பதாகக் கூறினேன். அவர் கட்டளைப்படி பதரிகா சிரமம் சென்று கொண்டிருப்பதாக உத்தவர் கூறினார். அப்போது விதுரர், பகவான் அருளிய ஆத்ம தத்துவ ரகசியத்தை உபதேசிக்க வேண்டிட, அதனை உமக்கு சொல்லும்படியாக மைத்ரேயரிடம் பகவான் கூறியுள்ளார். எனவே அவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி உத்தவர் பதரிகாசிரமம் நோக்கி புறப்பட்டார்.

12. யக்ஞவராக மூர்த்தி

சிறந்த ஞானியும், பகவத் குணங்களிலேயே ஆழந்திருப்பவருமான மைத்ரேயரை, விதுரர் கங்கத் துவாரத்திற்குச் சென்று வணங்கினார். அவரிடம் விதுரர், எதைச் செய்வதால் சாந்தியும், அகமும் உண்டாகுமோ அதைக் கூறியருளுமாறு வேண்டினார். புண்ணியகீர்த்தி வாய்ந்த ஸ்ரீஹரியினுடைய திவ்ய சரிதாம்ருத ஸாரத்தை வழங்குங்கள் என்றார். அப்போது மைத்ரேயர் விதுரரைப் புண்ணியவான் என்றும் பகவான் அருளைப் பெற்றவர் என்றும், அதனாலேயே உமக்கு ஞானோபதேசம் செய்யும்படி பகவான் எனக்கு ஆணையிட்டுள்ளார் என்றும் கூறினார். பகவானுடைய யோக மாயா சக்தியினால், உண்டாகிய விராட் சிருஷ்டியின் ரகசியங்களையும் பிரம்ம தேவரின் உற்பத்தியையும் அவரால் செய்யப்பட்ட சிருஷ்டி விசேஷங்களையும் கால சொரூபியாகிய பகவானின் மகிமைகளையும், காலத்தின் பிரிவுகளையும் ஸ்வாயம்பு மனுவின் பிறப்பையும் விரிவாக உரைத்தார்.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் அருட்கடாட்சத்தினாலும், இடைவிடாத பத்தி யோகத்தினாலும் துயரங்கள் மெள்ள மெள்ள விலகிவிடுகின்றன. பின்னர் மைத்ரேயர் விதுரர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்ம புத்திரர் ஸ்வாயம்பு மனுவின் சரித்திரத்தைக் கூறுகிறார்: ஸ்வாயம்பு மனு, தன் மனைவியாகிய சமரூபையுடன் பிரம்ம தேவரை வணங்கி என்ன செய்ய வேண்டுமென்று கேட்க, அவர் தர்மநீதி தவறாமல் மக்களைப் பாதுகாத்து வருவாயாக. இது தனக்குச் செய்யும் பணிவிடை. மேலும் யக்ஞங்களால் ஸ்ரீஹரியை ஆராதிப்பதால் பகவான் ஹிருஷிகேசர் சந்தோஷமடைகிறார் என்றார். அப்போது ஸ்வாயம்புமனு, தனக்கும் பிரஜைகளுக்கும் தங்குவதற்கு இடம் இல்லை. பூமி கடலில் மூழ்கிக் கிடக்கிறது. அதனை உயரக் கொண்டு வருவது எப்படி என்று கேட்டார். அதுகேட்ட பிரம்மன் பகவானைத் தியானிக்க அவருடைய மூக்குத் துவாரத்திலிருந்து கட்டை விரல் அளவு பன்றிக்குட்டி தோன்றி குதித்து, அடுத்த கனமே யானை அளவு வளர்ந்து விட்டது. இது என்ன அதிசயப் பிராணி என்று பிரம்மன் யோசிக்க, மலை போன்ற சரீரத்துடன் வராக வடிவில் பகவான் கர்ஜிக்க ரிஷிகள் மகிழ்ந்தனர். உடனே அந்த வராக ரூபி கடலில் குதித்து, பாதாளம் வரை சென்று, அங்கே மறைந்து கிடந்த பூமியைத் தன்னிரு கொம்புகளால் தூக்கி எடுத்துக் கொண்டு வெளிக்கிளம்பினார். அதைக் கண்ட திதியின் மகன் ஹிரண்யாக்ஷன் கதாயுதத்துடன் பகவானை நோக்கி ஓடிவந்தான். அந்த அசுரனை வராக ரூபியான விஷ்ணு விளையாட்டாகவே கொன்றார். அப்போது ரிஷிகளால் துதி செய்யப்பட்ட பகவான் பூமியை நீரில் மிதக்கச் செய்துவிட்டு மறைந்தார். (இது வராக அவதாரம்)

13. ஜயவிஜயர்கள் பெற்ற சாபம்

மேலும், விதுரர்க்கு மைத்ரேயர் கூறினார்: பிரம்ம குமாரர்கள் சனகாதி முனிவர்கள் நால்வரும் பகவானைத் தரிசிக்க வைகுண்டம் சென்றனர். பகவானுடைய குண வைபவங்களையே ஆனந்தமாக கானம் செய்கின்ற மகான்களே அங்கு செல்ல முடியும். முனிவர் நால்வரும் வைகுண்டத்தில் கிரீட குண்டலங்களையும், பலவகை ஆபரணங்களையும், வனமாலையும் அணிந்து, கதாயுதத்தைக் கையிலேந்தி நின்கின்ற இரு துவாரபாலகர்களைக் கண்டனர். அவர்கள் முனிவர்களைக் கைப்பிரம்பினால் தடுத்து நிறுத்தினார். அவ்வாறு தடுத்தவர்கள் மீது கோபம் கொண்டு, பாபிகளான காமம், குரோதம், லோபம் என்ற மூன்று சத்துருக்களாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பூலோகத்திற்குச் செல்லக் கடவீர் எனச் சபித்தனர். உடனே, துவார பாலகர்கள் முனிவர்களின் பாதங்களில் விழுந்து மன்னிக்க வேண்டினர். அவ்வமயம் அங்கு பகவான் ஸ்ரீதேவியுடன் சனகாதி முனிவர்களுக்குக் காட்சி அளித்தார்.

முனிவர்கள் பரமானந்தம் அடைந்து எம்பெருமானைத் தரிசித்தனர். மற்றும் துவாரபாலகர்களாகிய ஜய விஜயர்களைச் சபித்ததற்காக மன்னிப்பு வேண்டினர். அப்போது பெருமான் ஜயவிஜயர்கள் எனது பார்ஷதர்களே என்றாலும் தண்டனைக்கு உரியவர்களே. உங்களை அவமதித்ததை நான் பொறுக்கமாட்டேன். எனவே, அவர்கள் தண்டனையை அனுபவிக்கட்டும் என்றார். அப்போது பகவான், இந்த சாபம் தன்னாலேயே ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் அசுரப் பிறவியை அடைந்து, என்னைத் துவேஷித்து, விரோத பாவத்தால் என்னையே நினைப்பதாகின்ற யோகத்தைச் செய்து மறுபடியும் என்னையே வந்தடைவர் என்றார்.

பின்னர் சனத்குமாரர்கள் பகவானை வலம் வந்து வணங்கி, விடைபெற்று ஸ்ரீஹரியின் குணகீர்த்தனங்களை ஸ்மரணம் செய்து கொண்டே சென்றனர். பகவான் ஜயவிஜயர்களை நோக்கி, முனிவர்களை அவமதித்ததின் பலனை அனுபவித்து, மறுபிறவியில் துவேஷ புத்தியால் என்னையே நினைத்து சீக்கிரமாகவே என்னை வந்து அடைவீர்கள் என்று கூறினார். ஜயவிஜயர்கள் காசியபர், திதி தம்பதியருக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று பிறந்து பகவானால் முறையே வராக அவதாரம், நரசிம்ம அவதாரங்களில் கொல்லப்பட்டு வைகுண்டம் அடைந்தனர்.

14. கர்த்தமர், ஸ்வாயம்பு மனு

ஸ்வாயம்பு மனுவுக்கு சதரூபை என்பவளிடம் பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரண்டு புதல்வர்களும், ஆஹுதி, தேவஹுதி, பிரசூதி என்ற மூன்று பெண்களும் தோன்றினர். ஆஹுதி ருசியையும், தேவஹுதி கர்த்தம பிரஜாபதியையும், பிரசூதியை தக்ஷரும் மணந்தனர். பிரம்ம தேவன் கர்த்தமரைப் பார்த்து, பிரஜைகளைச் சிருஷ்டி செய் என்று ஆணையிட்டார். கர்த்தமர் சரசுவதி நதிக்கரையில் ஸ்ரீமந் நாராயணரைக் குறித்து நெடுங்காலம் தவம் செய்ய, ஸ்ரீஹரி காட்சி அளிக்க, கர்த்தமர் அவரைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். அப்போது பகவான் கர்த்தமரை அனுக்கிரகித்துக் கூறினார். ஸ்வாயம்பு மனு, மனைவியுடன் இங்கு வருவார். அவர் மகள் தேஹுதியை மணந்து தரும பத்தினியான அவளுடன் இல்லற தர்மத்தை நடத்தி தூய உள்ளத்துடன் எல்லாவற்றையும் எனக்கே சமர்ப்பணம் செய்து முடிவில் என்னை வந்து அடைவாய் என்றார்.

மேலும் தேவஹுதியிடம், நானே அம்சாவதாரமான கபிலராக அவதரித்து தத்துவ ஸாங்கியத்தை உபதேசிக்கப் போகிறேன் என்று கூறி பகவான் மறைந்து விட்டார். அவ்வாறே மனுவும், சதரூபையும் தேவஹுதியுடன் வந்து மகரிஷியிடம் செய்தி கூற, முனிவர் இவளுக்குச் சந்தானம் ஏற்படும் வரையில் இல்லறத்தில் இருப்பதாகவும், பின்னர் பரமஹம்ச சந்நியாச தர்மத்தை அனுஷ்டிக்க விரும்புவதாகவும் கூறினார். மனு தனது நகரத்துக்குச் சென்று தருமநெறியில் சுகங்கள் அனுபவித்து ஆட்சி செய்து வந்தார். ஸ்ரீவாசுதேவருடைய நினைவிலேயே வாழ்நாட்களை ஆனந்தமாகவும், சாரமுள்ளதாகவும் கழித்து வந்தார். பகவான் நினைவிலேயே ஒன்றிக் கிடந்த அவருக்கு, மூவகையான தாபங்களும் நீங்கி விட்டன. இதுவே அரச சிரேஷ்டராகிய ஸ்வாயம்பு மனுவின் வரலாறு. அடுத்து தேவஹுதியின் குணநலங்கள், வரலாறு ஆகியவற்றை மைத்ரேயர் கூறலானார்:

கர்த்தமரும், அவர் மனைவி தேவஹுதியும்

தேவஹுதி தன் கொழுநனான கர்த்தமரின் மனமறிந்து மகரிஷி சிரத்தையுடன் பணிவிடை செய்து வந்தாள். ஒருநாள் கர்த்தமர் மனைவியிடம் அவளது பக்தியையும் தொண்டையும் கண்டு மனமகிழ்ச்சி அடைந்ததாகவும், அவள் மீது அவர் தயை கொண்டதாகவும் உரைத்தார். அவர் தான் அடைந்த பகவத் பிரசாதத்தை அவளும் பெற்றிருப்பதாகவும், அந்த திவ்ய சக்திகளைக் கண்டு மகிழ ஞானக்கண் தருவதாகவும் கூறி, அவள் விரும்பினால் திவ்ய போகங்களை அனுபவிக்கலாம் என்றார். பிறகு, யோக சித்தராகிய கர்த்த மகரிஷி ஒரு விசித்திர விமானத்தைச் சிருஷ்டி செய்தார். மனைவியை அருகிலுள்ள நதியில் நீராடி வருமாறு கூறினார். நதியில் மூழ்கிய தேவஹுதி ஆங்கோர் அழகிய அரண்மனையைக் கண்டாள். பணிப்பெண்கள் அவளுக்கு சேவை செய்து அவர் சிரமத்தைப் போக்கினர். கர்த்தமர் மனைவியுடன் விமானத்தில் ஏறிட இருவரும் உல்லாசமாகச் சஞ்சரித்தனர். இந்தத் தம்பதிகளுக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒன்பது பெண்கள் பிறந்தனர்.

கர்த்தமர் தன் பிரதிக்ஞைப்படி வீட்டை விட்டுப் புறப்பட்டார். அப்போது அவர் மனைவி, அவர் வனம் சென்ற பிறகு தனக்கு ஆறுதல் அளிக்க யாருளர்? என்றும், தமது பெண்களுக்குத் தகுந்த கணவனைத் தேடி யார் விவாகம் செய்து வைப்பர் என்றும் வருத்தத்துடன் கேட்டாள். அப்போது பகவான் கூறின மொழிகள் கர்த்தமருக்கு நினைவுக்கு வர, அவர் மனைவியிடம் கவலைப்பட வேண்டாம். உன் ஸ்ரீஹரி அருளால் அவளுக்கு சர்வ மங்களங்கள் உண்டாகும் என்று கூறினார். பிறகு தேவஹுதி மனஅமைதியுடன் பகவானை பஜனை செய்து கொண்டிருந்தாள். பல நாட்களுக்குப் பிறகு அத்தம்பதிகளுக்கு பகவான் மதுசூதனர் புத்திரனாகத் தோன்றினார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

பகவானுடைய அவதாரத்தைக் காண பிரம்மதேவரும், மரீசி முதலான ரிஷிகளும் கர்த்தமர் ஆசிரமம் வந்தனர். கர்த்தமரைப் புகழ்ந்தனர். தேவ ஹுதியிடம், அவள் பாக்கியசாலி என்றும், பகவான் கபிலர் என்ற பெயருடன் கீர்த்தியைப் பரவச் செய்வார் என்றும் கூறிச் சென்றனர். கர்த்தமர் பிரம்மாவின் ஆணைப்படி தனது ஒன்பது புத்திரிகளையும் மரீசி, அத்திரி, ஆங்கீரசர், புலத்தியர், புலகர், கிரது, பிருகு, வசிஷ்டர், அதர்வா என்ற ஒன்பது மகரிஷிகளுக்கு விவாகம் செய்து கொடுத்தார்.

15. கபிலர்

சிலகாலம் சென்றபின் கர்த்தமர் தனது புத்திரனாகிய கபிலரை இரகசியமாகச் சந்தித்து வணங்கிக் கூறலானார், இந்த எளியவன் கிரகத்தில் எங்கள் பாக்கியவசத்தால் அவதரித்தீர். தத்துவ சொரூபியும், காலச் சொரூபியுமாகிய தங்களை வணங்குகிறேன். ஒரு வேண்டுகோள். எனக்கு எல்லா ஆசைகளும் பூர்த்தியாகி விட்டன. இனிமேல் நான் சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டு, இதயத்தில் தங்களையே தியானித்துக் கொண்டு சோகமின்றி சஞ்சரிக்க வேண்டுகிறேன். அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது கபிலர் கர்த்தமரிடம், ஆத்மஞான மார்க்கத்தின் உண்மை தத்துவத்தை உலகில் பரப்பவே தான் அவதரித்திருப்பதாகவும், கர்த்தமருக்க அனுமதி தருவதாகவும் கூறினார். மேலும் எல்லாச் செயல்களையும் அவருக்கே அர்ப்பணம் செய்து, சம்சார தாபங்களை வென்று மோட்சம் அடைய அவரையே உபாசித்துப் பஜனம் செய்யுமாறும் அறிவுரை கூறினார்.

பின்பும் சகல கர்மபந்தங்களையும் நிவர்த்தி செய்யும் அத்யாத்ம வித்தையை தாயாருக்கு உபதேசம் செய்யப்போவதாகவும், அதனால் அவள் சம்சார தாபங்களிலிருந்து விடுபட்டு அபயத்தை அடைவாள் என்றும் கூறினார். கர்த்தம ரிஷி ஸ்ரீஹரியிடமே மனத்தைச் செலுத்தி சாந்தமாக இருந்தார். அவர் எல்லா ஜீவராசிகளிடமும் பகவானையே கண்டார். விருப்பு, வெறுப்பு நீக்கி சமச்சித்தராகி பகவத் பக்தியினால் ஸ்ரீஹரியினுடைய பரமபதத்தை அடைந்தார்.

தாய்க்குக் கபிலர் தத்துவோபதேசம்

கபிலதேவர், தாயாரைத் திருப்தி செய்வதற்காக பிந்து ஸரஸ்ஸிலேயே தங்கி இருந்தார். ஒருநாள் தாயான தேவஹுதி, குமாரனை நோக்கி, அஞ்ஞான இருளில் சிக்கி அல்லல்படும் எனக்கு ஞானமார்க்கத்தைக் காட்டியருள வேண்டும். பிரகிருதி, புருஷ விவேகத்தை உபதேசித்து மோட்சத்தை அருளுக. உம்மையே சரணடைந்தேன் என்றாள். கபிலர் மகிழ்ச்சி கொண்டு கூறலானார்: அன்னையே, சுகதுக்கங்களிலிருந்து விடுபட அத்யாத்ம மார்க்கமே சிறந்தது. மனித சமூகத்துக்கு அதுவே சாந்தியும், ÷க்ஷமமும் உண்டாக்கும். மனமே ஆசை கொண்டு பந்தத்தில் சிக்க வைக்கிறது. எனவே, ஆசையை அகற்றி பகவானை அணுகி வாழும் மனதில் மோக்ஷ விருப்பம் உண்டாகிறது. ஆத்ம விடுதலை கிடைக்கின்றது.

நான், எனது என்பது நீங்கிட சித்த சுத்தி ஏற்படுகின்றது. சுக துக்கங்களைச் சமமாக எண்ணும் சமநிலை ஏற்பட பக்தி யோகமே சிறந்த உபாயமாகும். சாது சங்கமே மோக்ஷசாதனம். பிராணிகளிடம் அன்பும், கருணை உள்ளமும் கொண்டு என் மீது நிலையான பக்தி கொண்டு, எனது சரிதத்தைக் கேட்டு, படித்து, சொல்லுவதில் சாதுக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, சாது சங்கத்தில் இருங்கள். அதனால் பக்தி சிரத்தையும், மோக்ஷ விருப்பமும் உண்டாகும். சாதுக்கள் மக்கள் உள்ளங்களில், விடுதலையில் விருப்பத்தையும், பகவானிடம் பிரேம பக்தியையும் ஏற்படச் செய்கின்றனர். சாதுக்கள் புலன்களை அடக்கி, பிரகிருதியிலிருந்து விடுபட்டவராய், ஆசை நீக்கி வைராக்கியத்தால் வளர்ந்த ஞானத்தாலும், யோகமுயற்சியாலும், பக்தியாலும், முதல் கர்த்தாவாகிய என்னை இச்சரீரத்திலேயே அடைந்து விடுகின்றர் என்றார்.

அப்போது தேவஹுதி, அவளைப் போன்ற பெண்டிர் செய்யக்கூடிய மார்க்கம் எத்தன்மையது? என்று கேட்டாள். அதற்கு கபிலர் ஆத்ம சொரூப தத்துவங்களாகிய ஞான யோகம், பக்தி யோகம் பற்றிக் கூறலானார். தூய உள்ளம் பெற்றவரின் கர்மேந்திரிய, ஞானேந்திரியங்கள் ஸ்ரீஹரியிடமே ஒன்றிக்கிடத்தலே சிறந்த பக்தி யோகம். கோரிக்கையற்ற பக்தி முக்தியை விட சிறந்தது. இடைவிடாமல் எனது பாத சேவையில் ஈடுபட்டு, என்னைப் பற்றியே பேசிக் கொண்டு மகிழ்ச்சி கொள்வோர் அந்தப் பிரேமையினால் மோக்ஷத்தைக் கூட விரும்புவதில்லை. அப்படி அவர்கள் மோக்ஷத்தை விரும்பாவிட்டாலும் கூட அவர்களுடைய பக்தி அவர்களைப் பரமபதத்திற்கு அழைத்துச் செல்கிறது. எல்லாமாய் என்னை எண்ணி வழிபடும் பக்தர்கள் கெடுவதில்லை. காலக்கிரமத்தாலும் துன்பப்படுவதில்லை. பற்றற்று என்னைப் பூஜிக்கின்றவன் சம்சார தாபத்திலிருந்து காப்பாற்றப்படுகிறான். திடமான பக்தி யோகத்தினாலேயே மக்கள் ÷க்ஷமம் அடைகின்றனர் என்று தத்துவோபதேசம் செய்தார் கபிலர். கபிலர் தாயார்க்கு மேலும் ஆத்மத் தத்துவங்களின் லக்ஷணங்களைத் தனித்தனியே பிரித்துக் கூறலானார். ஆத்ம ஸ்வரூப தரிசன ஞானமே ஜீவனுக்கு மோக்ஷ பிரதான காரணமாகும்.

எங்கும் நிறைந்து, நிர்க்குண, நிராதரமாய், பிரகிருதிக்கு அப்பாற்பட்டு, உயிர்களனைத்திலும் அந்தராத்மாவாக ஒளிர்பவராய் தானே ஜோதி ஸ்வரூபனாய், ஆதி அந்தமற்ற ஆத்மாவே புருஷன். புருஷன் பிரகிருதியின் சுக துக்கங்களில் சம்பந்தப்படுவதில்லை. எனவே, மனதை தீவிரபக்தி, வைராக்கியம் யம நியமாதி யோக மார்க்கங்களால் ஒருமுகப்படுத்தி சிரத்தையாக என்னையே நினைத்து சத்திய நெறியில் சம பாவத்துடன் ஜீவராசிகள் இருக்க வேண்டும். நான், என்னுடையது என்பதை மறந்து, கிடைத்ததைத் திருப்தியுடன் புசித்து, அனைவரிடமும் நட்பு, தயவு கொண்டு பிரகிருதி புருஷ விவேகத்தை அடைய வேண்டும். இப்படி நிர்மல மனதுடன், பயனேதும் எதிர்பாராமல் ஞான வைராக்கியத்துடன் தபோமயமான வாழ்வை நடத்தும் புருஷனது அஞ்ஞானம் தானாகவே நசிந்து மறைந்து விடும். திட மனதுடன் பூசிக்கும் பக்தர்கள், எனது அருள் சக்தியினால் தத்துவ ஞானம் பெறுவர். அவர்களின் சந்தேகங்கள் விலகி முடிவில் எனது திவ்ய பதத்தை அடைந்து இணையற்ற ஆனந்தத்தைப் பெறுகிறார்கள். அஷ்டமா சித்திகளில் பற்றற்றவன் எனது பதத்தை அடைவான்.

அடுத்து கபில மகரிஷி யோக லக்ஷணங்களை எடுத்துக் கூறலானார். யோக விதிகளை அனுஷ்டிப்பதால் மனம் தெளிந்து சன்மார்க்கத்தில் சென்றும், சுய தர்மத்தை அனுஷ்டித்து, உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியுற்று, ஆத்மஞானிகளின் சரணங்களைப் பூஜித்து அஹிம்சையைப் பின்பற்றித் தனியாக வசித்து வரவேண்டும். இந்திரியங்களை வென்று, மவுன விரதத்துடன் பகவானை ஆராதித்து வரவேண்டும். ஆதார ஸ்தானங்களில் ஓரிடத்தில் மனதையும், பிராணனையும் நிலைக்கச் செய்து பகவானுடைய லீலைகளைத் தியானிக்க வேண்டும். பிராணாயாமத்தினால் வாத, பித்தங்களையும், தாரணையினால் பாபங்களையும், பிரத்தியாகாரத்தினால் உலக சம்பந்தங்களையும், தியானத்தினால் தீயகுணங்களையும் விலக்கி, தூய நிலைபெற்ற மனதுடன் பகவானுடைய திவ்ய சவுந்தர்ய வடிவத்தைத் தியானம் செய்ய வேண்டும்.

பகவான் பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீவத்ச மார்பில் கவுஸ்துப மணி ஒளி, கிரீடம், கங்கணம், நூபுரம், தோள் வளைகள் ஆகியவற்றுடன் மனோகரமான அழகுடன், காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சாந்தம், இளமை உடைய கண்ணனை அன்புடன் தியானிக்க வேண்டும். இவ்வாறு மனம் ஒன்றுபடும் வரை நன்றாகத் தியானிக்க வேண்டும். எல்லா அங்கங்களிலும் மனம் ஒன்றிவிட்ட பிறகு அவற்றைத் தனித்தனியாகத் தியானித்துப் பழக வேண்டும். பகவானுடைய கருணாகடாக்ஷம் மூவகை தாபங்களையும் போக்கி விடும். பகவானின் புன்சிரிப்பு மகரிஷிகளையும் மோகிக்கச் செய்வதால் அதுவே தியானத்திற்கு உகந்ததாகும். தியான யோக அப்யாசத்தினால் மனம் கனிந்த சாதகன் பக்திப் பெருக்கினால் உள்ளம் உருகி மகிழ்ச்சியினால் மெய்சிலிர்த்து, ஆனந்தக் கண்ணீரில் மூழ்கி, இரண்டற்ற நிலையைப் பெருகிறான். அண்ணலின் அருட்சக்தியினாலே மாயையை வென்று, உண்மை சொரூபத்தில் ஒன்றி பிரம்ம சாக்ஷõதிகாரத்தைப் பெற்று ஆனந்தமடைகிறான் என்றார். பின்னர் தேவஹுதி பக்திமார்க்கம் பற்றிக் கூறிட வேண்டினாள். அதற்கு கபிலர் கூறியதாவது:

பக்தி மார்க்கம் பலவகைப்படும்.

1. முன்கோபம், பொறாமை, ஆடம்பரம், பேத புத்தி, இம்சை உடையவன் என்னை வழிபட்டால் அவன் தாமச பக்தன் ஆவான்.
2. உலக சுகங்கள் கோரி ஆராதிப்பவன் ராஜச பக்தன் ஆவான்.
3. பகவானை ஆராதிப்பதே கடமை என்று கருதி எல்லாம் அர்ப்பணம் செய்து பூஜிப்பவன் சாத்வீக பக்தனாவான்.
4. எனது குண வைபவங்களைக் கேட்டு, என் மீது பயன் கருதாமல் கொள்ளும் பிரேமை, எல்லாவற்றிலும் வசிக்கும் என்னிடம் மனதைச் செலுத்துவது நிர்க்குண பக்தி ஆகும். இதுவே சிறந்த பக்தி யோகம். இதைச் செய்பவன் முக்குணங்களையும் கடந்து எனது பதம் அடைகின்றான்.

பக்தன் வைராக்கிய சீலனாக வாழ வேண்டும். பக்தியில் ஆடம்பரம் கூடாது. பிறரை வெறுப்பவன் என்னையும் வெறுப்பவன் ஆவான். அவன் பலவித திரவியங்களாலும் என்னைப் பூஜித்தாலும் நான் திருப்தி அடையேன். உயிர் கூட்டங்களில் உள்ள என்னை மானசீகமாக வணங்கி வரவேண்டும். இவ்வாறு கர்மபலன்களைச் சமர்ப்பித்து தூயமனதுடன், சமதிருஷ்டியுடன் என்னை உபாசிப்பவன் சிறந்தவன். இவையே ஞானயோக, பக்தியோக லக்ஷணங்கள். இவற்றில் ஒன்றை அனுஷ்டித்தாலும் பரம புருஷனை அடையலாம் என்று கூறினார். ஞான சொரூபியாகிய கபிலருடைய இந்த சிறப்பான உபதேசங்களைக் கேட்ட தேவஹுதி ஞான ஒளியைப் பெற்று கபிலரைப் பக்தியுடன் வணங்கிப் பலவாறு துதி செய்தாள்.

கபிலர் தாயாரிடம் விடைபெற்று வடகிழக்கில் சென்றார். அப்போது சித்த, சாரண, கந்தர்வர்கள் எல்லாரும் அவரை வணங்கித் துதித்தனர். புத்திரனின் பிரிவாற்றாமையால் மனம் கலங்கிய தேவஹுதி யோக மார்க்கத்தை மிக்க கவனத்துடன் அனுஷ்டித்துக் கடுமையான தவத்தில் ஈடுபட்டாள். திட வைராக்கியம், தக்க கர்மானுஷ்டானங்கள், தீவிர பக்தி யோகத்தினால் மனத்தூய்மை பெற்ற அவள் பிரம்ம சாக்ஷõத்தார ஞானத்தை அடைந்து, ஆத்ம சொரூபத்திலே நிலைத்த மனத்தை உடையவளாகப் பரமானந்த சுகத்தில் ஆழந்திருந்த அவளுடைய சரீரத்தை ஆசிரமவாசிகளே போஷித்து வந்தனர். கபிலரால் உபதேசிக்கப்பட்ட யோக மார்க்கத்தை அனுஷ்டித்து வெகு சீக்கிரத்திலேயே பகவானுடைய திவ்ய பதத்தை அடைந்தாள். அவள் சித்தி பெற்ற இடம் சித்தி பதம் என்று போற்றப்படுகிறது.

 
மேலும் பாகவத புராணம் »
temple news
16. நான்காவது ஸ்கந்தம் : துருவன் கதை (இது விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு உள்ளது) துருவன் நற்பதம் பெற்றிட ... மேலும்
 
temple news
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்: 1. தோற்றுவாய் (இது ஸ்ரீவிஷ்ணு புராணம் ஐந்தாவது அமிசத்திலும், ஸ்ரீமத் பாகவத ... மேலும்
 
temple news
18. பலராமன் கல்யாணம் ஆதிசேஷன் மனைவி வாருணியைப் பார்த்து வருணன் ஆதிசேஷனே பலராமனாக பூவுலகில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar