பதிவு செய்த நாள்
19
ஜன
2021
05:01
திருவண்ணாமலை: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில், அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரிக்கு, கொரோனா பரவலால் தடை விதிக்கப்பட்டதால், திருவண்ணாமலை கோவில் வளாகத்திலேயே, தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் ஆண்டுக்கு மூன்று முறை, வெளியில் சென்று தீர்த்தவாரி நிகழ்வு நடக்கும். இதில், ரத சப்தமி நாளில், கலசப்பாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று, பள்ளிக்கொண்டாப்பட்டு துரிஞ்சலாற்றிலும், பொங்கல் பண்டிகை முடிந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார் பேட்டை, தென்பெண்ணை ஆற்றிலும், அருணாசலேஸ்வரர் பங்கேற்கும் தீர்த்தவாரி நடக்கும். கொரோனா பரவல் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நடக்கவிருந்த தீர்த்தவாரிக்கு தடை விதித்து, அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றிலிருந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, புனிதநீர் கொண்டு வரப்பட்டு, சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரருக்கு, மகிழ மரத்தின் அருகே, தீர்த்தவாரி நடந்தது. இதை பக்தர்கள் வழிபட்டனர்.