பதிவு செய்த நாள்
20
ஜன
2021
11:01
சிவகங்கை:சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயிலில் 916 நகரத்தார் குடும்பத்தினர் பங்கேற்ற செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது. தை பொங்கலை அடுத்து வரும் முதல் செவ்வாய் அன்று ஆண்டு தோறும் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி கோயில் முன் நகரத்தார் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெறும். இந்த ஆண்டின் செவ்வாய் பொங்கல் விழா நேற்று நடந்தது.
நகரத்தார் 916 குடும்ப தலைவர்களின் பெயர்களை சீட்டு எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு அம்மன் முன் குலுக்கி எடுப்பர். அதில் முதல் பெயர் வரும் குடும்பத்தினர் மண் பானையில் முதல் முதலாக பொங்கல் வைக்க வேண்டும். அவ்வகையில் சீட்டு குலுக்கலில் கே.என்.எம்.என். சொக்கலிங்கம் குடும்பத்தினர் தேர்வாகினர். அவர்களது மண் பானையில் அனைவரும் பசும் பால் ஊற்றி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அதை தொடர்ந்து மற்ற நகரத்தார் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். இங்கு முற்றிலும் வெண் பொங்கல் மட்டுமே வைக்கப்பட்டன. நகரத்தார் தலைவர் ஏ.டி.கே.என்.அண்ணாமலை தலைமையில் ஏற்பாடுகளை செய்தனர். பொங்கல் பானைகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, பின்னர் கிடா வெட்டி அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர்.
தங்க ரதம் புறப்பாடு: செவ்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில், மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், சரவண கணேசன் முன்னிலையில் உபயதாரர்கள் தங்க ரதம் இழுத்தனர்.
வரன் பார்க்கும் படலம்: கொரோனா ஊரடங்கால் அரசு சார்பில் நடக்கும் சுற்றுலா விழா நடக்கவில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் வருகையும் குறைவாக இருந்தது. நகரத்தாரில் திருமணம் முடிக்காத ஆண், பெண் இடையே வரன் பார்க்கும் படலமும் நடந்தது. செவ்வாய் பொங்கல் அன்று கூட நகரில் தெருவிளக்குகள் எரியாததால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். அதே நாளில் பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் முன் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.