நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை என்பார்கள். பக்தர்களின் குறை தீர்க்க உடனடியாக ஒடி வரும் இவர் கர்நாடக மாநிலம் மைசூரு விஜய் நகரில் யோக நரசிம்மர் என்னும் பெயரில் இருக்கிறார். அமாவாசையன்று இவரை தரிசித்தால் சூரியனைக் கண்ட பனியாக மனதை வாட்டும் பிரச்னைகள் ஓடிவிடும். அசுரனான இரண்யனின் ஒரே மகன் பிரகலாதன். தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே, நாரதரின் உபதேசத்தால் விஷ்ணு பக்தனாக மாறினான். அசுர குலத்தின் குருவான சுக்ராச்சாரியாரிடம் பாடம் கற்க மகனை அனுப்பினான் இரண்யன். அங்கு படிக்க வந்த சிறுவர்களும் பிரகலாதனால் பக்தர்களாக மாறினர். ‘அசுரனான தனக்கு இப்படி ஒரு குழந்தையா?’ என வெகுண்ட இரண்யன் மகனைக் கொல்லத் துணிந்தான். விஷம் கொடுத்தான். மலையில் இருந்து உருட்டினான். யானையை விட்டு மிதிக்கச் செய்தான். ஆனால் எதற்கும் அவன் மசியவில்லை. நாராயண மந்திரத்தை ஜபித்து தப்பித்தான். கடைசியாக பிரகலாதனிடம், “எங்கே உன் ஹரி?” என ஆவேசமாகக் கேட்டான். ‘துாணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்றான் பிரகலாதன். அந்த துாணை பிளக்க இரண்யன் முயன்ற போது, அதைப் பிளந்தபடி தோன்றிய நரசிம்மர் அசுரனைக் கொன்றார். அவரே இங்கு யோக நரசிம்மராக இருக்கிறார். சாளகிராமம் என்னும் கல்லினால் ஆன மூலவர் குத்துக் காலிட்டபடி யோகநிலையில் உள்ளார். சங்கு சக்கரம் ஏந்தியுள்ள இவரது மார்பில் மகாலட்சுமி தாயார் குடியிருக்கிறாள். அதர்வண வேதத்தை கால் கட்டை விரலில் அடக்கிய இவரைத் தரிசித்தால் தீயசக்திகள் அண்டாது. 1998 மே25ல் யோக நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த ஆண்டு வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனையும், வைகாசி பவுர்ணமியன்று சகஸ்ர கலசாபிஷேகமும், பிரதமையன்று சுதர்சன ஹோமமும் நடக்கிறது. வீண்பயம், எதிரி தொல்லை, வழக்கு பிரச்னையில் இருந்து விடுபட அமாவாசையன்று சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் 300 லிட்டர் பால், 300 லிட்டர் தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. பதினாறு கைகளோடு காட்சி தரும் சக்கரத்தாழ்வார் இக்கோயிலில் ‘அஷ்டபுஜ சுதர்சனர்’ என்னும் பெயரில் எட்டுக்கைகளுடன் இருக்கிறார். உற்ஸவர் சீனிவாசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கல்யாணக்கோலத்தில் இருக்கிறார். எப்படி செல்வது: மைசூரு – மங்களூரு மெயின் ரோட்டில் 4கி.மீ.,