திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் தெற்குப்பட்டி மாணிக்கநாச்சியம்மன் கோயில் ஐப்பசி மாத விழாவிற்கு அனுமதியின்றி மதுக்குடம் எடுத்ததாக திருக்கோஷ்டியூர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இக்கோயில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் மழை வேண்டி கண்டரமாணிக்கம் நாட்டார்களால் அம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். கண்டரமாணிக்கம் நாட்டு அம்பலம் தேர்வில் இரு தரப்பாக உள்ள கருத்து வேறுபாட்டால் வருவாய்த்துறையினர் இந்த ஆண்டு விழா நடத்த தடை விதித்திருந்தனர். அதில் ஒரு தரப்பினர் முயற்சியால் ஐப்பசி முதல் செவ்வாயில் காப்புக் கட்டப்பட்டு விழா துவங்கியது. அம்மனுக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. இதனையடுத்து போலீசார் அனுமதியின்றி காப்புக் கட்ட ஏற்பாடு செய்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இரண்டாம் செவ்வாய்கிழமையன்று வடக்குத் தெரு, தெற்குத்தெரு பகுதி பெண்கள் மதுக்குடம் மற்றும் முளைப்பாரி எடுக்க தேவகோட்டை ஆர்.டி.ஓ.விடம் அனுமதி கோரினர். வளர்த்த பாரியை 20 பெண்கள் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பங்கேற்று முளைப்பாரி மதுக்குடம் எடுப்பு நடந்தது. இதனையடுத்து கொரோனா விதிகளை கடைபிடிக்காமலும், முன் அனுமதியின்றி விதிகளை மீறி திருவிழா நடத்தியதாக திருக்கோஷ்டியூர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.