பதிவு செய்த நாள்
26
நவ
2021
09:11
சபரிமலை: சபரிமலை தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை தினமும் 30 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மண்டல, மகரவிளக்கு சீசனில் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்பதிவுதுவக்கத்தில் முன்பதிவு மந்தமாக இருந்தது. மகரவிளக்கு, மண்டலபூஜை போன்ற முக்கிய நாட்களில் தான் புக்கிங் முடிந்தது.
கார்த்திகை மாதம் 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் புக்கிங் செய்தவர்களில் 50 - 80 சதவீதம் பக்தர்கள் தான் தரிசனத்துக்கு வந்துள்ளனர். இதனால் 10 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டது. முன்பதிவு செய்யாதவர்கள் எருமேலி, நிலக்கல், பந்தளம் போன்ற இடங்களில் வந்து முன்பதிவு செய்து சன்னிதானம் செல்லலாம். தற்போது தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 45 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, அதன் முன்பதிவு நேற்று முன்தினம் துவங்கியது.கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே முக்கிய நாட்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது.
அனுமதி மறுப்பு: டிச.,ல் 18, 20, 23, 26, 31 தேதிகளிலும், 2022 ஜன., 1 - 9 வரையிலும் மகரவிளக்கு தினமான ஜன., 14 லிலும் முன்பதிவு முடிந்து விட்டது. இதற்கிடையே சபரிமலை பயணம் கொரோனா பரவலுக்கு காரணமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தான், அங்கு பக்தர்கள் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்றுதெரிவித்தார்.