பதிவு செய்த நாள்
04
ஆக
2012
05:08
நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.
சதுர்த்தியின் மகிமை :
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
தண்டனை தமிழில் இவருக்கு பிடிக்காத வார்த்தை
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் மற்ற விநாயகர்களில் இருந்து மாறுபட்டவர். மலைக்கோயில் குன்றின் மீது, இவரது சிலை வடிக்கப்பட்டுள்ளது. மலையில் செதுக்கப்பட்ட இறைவடிவங்களுக்கு மந்திர சக்தி அதிகம் இருப்பதாக ஆகமசாஸ்திரம் கூறுகிறது. மற்ற விநாயகர்களுக்கு தும்பிக்கை நீங்கலாக நான்கு கரங்கள் இருக்கும். இவருக்கோ இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. பத்மாசனமாக காலை மடித்து யோகநிலையில் இருந்து, யோகபலன்களை வாரி வழங்குகிறார். இவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை தண்டனை. யாரையும் தண்டிக்கும் எண்ணம் இல்லாமல், தவறுகளை மன்னிக்கும் குணம் உள்ளவர் என்பதால் பாச அங்குசம் ஏந்தாமல் இருக்கிறார். சடைமுடி, கங்கை, மூன்றுகண், இளம்பிறை ஆகியவற்றைக் கொண்டு சிவ அம்சத்துடன் விளங்கும் இவர், கற்பக மரம் போல கேட்டவரம் அருள்பவராக விளங்குகிறார். இவரைத் தரிசித்தால் பிறர் செய்த தவறுகளை மன்னிக்கும் குணம் வளரும்.
யானை போடும் தாளம்
யானை தாளம் போடுமா என்று யோசிக்க வேண்டாம். தாளம் என்றால் விசிறி. யானை தன்னுடைய பெரிய காதுகளை விசிறிபோல அசைப்பதற்கு கஜதாளம் என்று பெயர். பிராணி வர்க்கங்களில் யானைக்கு கூர்மையாக கேட்கும் திறனும், ஞாபகசக்தியும் உண்டு. கேட்கிற சத்தத்தை சிதறாமல் உள்ளே அனுப்ப வேண்டும் என்பதற்காக இப்படி எப்போதும் அசைத்தபடி இருக்கிறது. சுவாமியிடம் வைக்கும் எந்த பிரார்த்தனையாக இருந்தாலும், கேட்பது என்னவோ அவருடைய காது தான். அந்த அடிப்படையில் நம் வழிபாட்டை முழுமையாக உள்வாங்கிக் கொள்பவராக ஆனைமுகத்தான் விளங்குகிறார்.
இவர் பெரிய கொம்பன்
முதற்கடவுளாக விளங்கும் விநாயகருக்கு ஒற்றைக் கொம்பன் என்ற பெயருண்டு. விநாயகருக்கு இப்பெயர் உண்டானதற்கான புராணக்காரணத்தை இருவிதமாகச் சொல்வர். ஐந்தாம் வேதம் என்று போற்றப்படுவது மகாபாரதம். இதன் ஸ்லோகங்களை வியாசர்வேகமாகச் சொல்ல, தன் ஒற்றைத் தந்தத்தை ஒடித்து எழுத்தாணி யாக்கிய விநாயகர், இமயமலைப் பனிப்பாறைகளில் எழுதினார். பிறரின் நன்மைக்காக தன் அழகான தந்தத்தைத் தியாகம் செய்தார். வேறெந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாத கஜமுகாசுரனை அழிக்க, விநாயகர் தன் தந்தத்தை ஒடித்துக் குத்தி வதம் செய்ததாலும், இந்தப் பெயர் வந்ததாகச் சொல்வதுண்டு.
தாத்தா இல்லாத பேரன்
விநாயகருக்குரிய ஸ்லோகம் ஒன்றில், அப்பாவின் தாத்தா கிடையாது என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. மஹஸ் தத் அபிதாமஹம் என்கிறது அந்த ஸ்லோகம்.
மஹஸ் தத் என்பது விநாயகரைக் குறிக்கும். ஒளிமயமானவர் என்பது இதன் பொருள். அபிதாமஹம் என்றால் அப்பாவின் தாத்தா இல்லாதவர் என்பது பொருள். சிவன் அநாதியாகத் தோன்றிய சுயம்புமூர்த்தி என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
கட்சியில் சேர்ந்த கடவுள்
சாமர்த்தியமாகப் பேசி ஏமாற்றுவதற்கு அகடவிகடம் என்று பெயர். இதில் கைதேர்ந்தவர் விநாயகர். சக்தியும், சிவனும் ஊடலால் கோபம் கொண்டால் குறும்புசெய்து ஒன்றுசேர்ப்பவர் விநாயகர். காகமாக வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டி காவிரி நதியை ஓடச்செய்த பெருமைக்குரியவர். சிறுவனாக வந்து விபீஷணனை ஏமாற்றி ரங்கநாதரை காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்தவர். திருக்கோகர்ணத்தில் ராவணனிடம் சாதுர்யமாகப் பேசி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். இவர்செய்த எல்லா விளையாட்டும் நமக்காகத்தான். தனிஉடைமையாக இருப்பதை அனைவருக்கும் உரியதாக்கிய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர் விநாயகர்.
பெருமைப்படுத்தும் பிள்ளை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற அடிப்படையில் சிவபார்வதியை வலம் வந்து வணங்கி மாங்கனியைப் பெற்றவர் விநாயகர். பெற்றோருக்குப் பெருமைசேர்ப்பது போல ஹேரம்பர் (ஐந்து முகம்) கோலத்தில், சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இவரது ஐந்துமுகங்கள் சிவனின் ஐந்து முகங்களை ஞாபகப்படுத்துகிறது. வாகனம் சிங்கம் அம்பிகைக்குரியதாகும். ஆக, சிவசக்தி இணைந்த வடிவம் விநாயகர் என்பது உறுதியாகிறது. நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில், செம்பால் உருவாக்கப்பட்ட ஹேரம்ப கணபதி இருக்கிறார். இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்.
இவரும் கிராமணி தான்
கிராமத்தில் தலையாரியாக இருப்பவரை அந்தக் காலத்தில் கிராமணி என்பர். கிராமணி என்றால் கிராமத்தலைவர். கிராமணியில் பரம்பரையில் பிறந்தவர்கள் தங்கள் பெயரோடு கிராமணியைச் சேர்த்துக் கொள்வர். இதுவே பிற்காலத்தில் ஜாதிப்பெயராகவும் மாறி விட்டது. விநாயகருக்கும் கிராமணி என்ற பெயர் இருக்கிறது. ராகவ சைதன்யர் எழுதிய மகாகணபதி ஸ்தோத்திரம் நூலில் கண க்ராமணீ என்று குறிப்பிடுகிறார். சிவகணங்களின் தலைவராக இருப்பதால் விநாயகர் இப்பெயரால் குறிப்பிடப்படுகிறார்.