மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடி தபசு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2022 08:08
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நடைபெற்ற ஆடித்தபசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமணமாகாத ஏராளமான பெண்கள் சுவாமிகளுக்கு அணிவித்த மாலைகளை பிரசாதமாக பெற்று சென்றனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 31ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், அன்னம்,கமலம், யானை,கிளி விருஷபம் காமதேனும்,குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும்,பூப்பல்லக்கு,சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு மண்டகப்படி நேற்று நடைபெற்றதை முன்னிட்டு வைகை ஆற்றுக்குள் தண்ணீர் செல்வதால் கோயில் முன்பாக மண்டகப்படி அமைக்கப்பட்டு அங்கு ஆனந்தவல்லி அம்மன் தபசு கோலத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து விருஷப வாகனத்தில் சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் ஆனந்தவல்லி அம்மனுக்கு காட்சி கொடுத்தார்.பின்னர் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமியை சுற்றி 3 முறை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் சுவாமிக்கு அணிவித்த மாலைகளை பிரசாதமாக பெற்றுச் சென்றால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்பப்படுவதால் ஏராளமான பெண்கள் சுவாமிகளுக்கு அணிவித்த மாலைகளை பெற்றுக் கொண்டு சென்றனர்.இந்நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.