வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் மண்டியிட்டு நூதன போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2022 07:09
மயிலாடுதுறை: வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணி களை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்திட வலியுறுத்தி இந்து மகா சபா சார்பில் நிர்வாகிகள் மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் இளங்கிளை நாயகி உடனாகிய வீரட்டேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தரின் தேவார வைப்புத் தலமாக விளங்கிவரும் இத்தலத்தில் சிவபெருமான் யானையை பிளந்து வீர நடனம் ஆடியதால் அட்ட வீரட்டத் தலங்கள் ஆறாவது தலமாக விளங்கி வருகிறது. இத்தளத்தில் 48 ஆயிரம் ரிஷிகள் தவமிருந்து ஞானம் பெற்றுள்ளனர். மேலும் வராகி வழிபட்ட தலமாகவும் இது விளங்கி வருகிறது. இக்கோவிலில் சுவாமி அம்பாளை வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் உடனே கைகூடும் என்பது ஐதீகம். 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலின் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடத்தப்படவில்லை. இந்நிலையில் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்திட கோரி தலைவர் ராம நிரஞ்சன் தலைமையில் இந்து மகா சபா நிர்வாகிகள் கோவிலில் மண்டியிட்டவாறு கோஷமிட்டு நூத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திருப்பணி செலவை அரசு ஏற்று பணியை செய்து முடிக்க வேண்டும். இதற்கு அரசு செவி சாய்க்காவிட்டால் பிச்சை எடுத்து நிதி திரட்டி கோவில் திருப்பணிகளை செய்வோம் என தெரிவித்துள்ளனர்.