சதுரகிரியில் நவராத்திரி திருவிழா; காப்புகட்டுதலுடன் துவங்கியது.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2022 03:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதல் வைபவத்துடன் நேற்று முதல் துவங்கியது.
இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவை ஒட்டி நேற்று அதிகாலை 5:00 மணிக்குமேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அர்ச்சனை, சங்கொலி பூஜைக்கு பின் நவராத்திரி திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏழூர் சாலியர் சமுதாய பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காப்பு ஏந்தி ஆனந்தவல்லி அம்மன் கோயிலை வலம் வந்து கொலுமண்டபத்தை அடைந்தனர். அங்கு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இதனையடுத்து தினமும் இரவு 6:00 மணி முதல் 9:00 மணி வரை அம்மன் கொலு வீற்றிருத்தல், பஜனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக்டோபர் 4 அன்று இரவு சரஸ்வதி பூஜை வழிபாடும், அக்டோபர் 5 அன்று விஜயதசமி வழிபாடு மற்றும் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்மன் அம்பு எய்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன், ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள் செய்துள்ளனர்.