பதிவு செய்த நாள்
28
ஆக
2012
10:08
பழநி: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில், 4000 ஆண்டுகள் பழமையான பளியர் இன பழங்குடிகளின் குறியீடுகள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறுமலை பளியர் இனபழங்குடிகளின் வாழ்வு முறை ஆய்வின் போது, இந்த குறியீடுகள் கிடைத்துள்ளன. இவை சிந்துசமவெளி நாகரிகத்தில் புதையுண்ட குறியீடுகளை போலவே உள்ளன. தொல்லியல் ஆய்வாளர் நாரயணமூர்த்தி, மதுரை காமராஜர் பல்கலை வரலாற்றுத்துறை தலைவர் சந்திரபாபு, பழனியாண்டவர் மகளிர் கல்லூரி பேராசிரியை திலகவதி, திண்டுக்கல் கிராண்டில் கல்லூரி வரலாறு பேராசிரியர் பாலகுருசாமி, மற்றும் மாணவர்கள் கொண்ட குழு இந்த குறியீடுகளை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து நாரயணமூர்த்தி கூறியதாவது: சிறுமலை பழங்குடியினர் வணங்கும் குலதெய்வ கோயில் அருகே உள்ள கன்னிமார் 7 சிலை புதைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டில் இந்த குறியீடுகள் உள்ளன. குறிஞ்சி இன தமிழர்களான பளியர் இன மக்கள், பண்டைகாலத்தில் வேட்டையாட கல் ஆயுதங்களை பயன்படுத்தினர். மேலிருந்து கீழாக குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. சிந்துசமவெளி குறியீடுகள் போலவே இவை குறிக்கப்பட்டுள்ளன. அதன்படி படித்தால் கோ (கடவுள்) அல்லது மேல் என படிக்கலாம். ஹைரோ கிளிபிக் எழுத்துவடிவில் இந்த சிறுமலை குறியீடுகள் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்து முறை எகிப்திய வடிவமுறை எழுத்துகளை பின்பற்றியது. சமவெளிபகுதியான சிந்துவில் கிடைத்த 134வது குறியீடும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சிறுமலை குறியீடும் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றது. ஏற்கனவே ஏராளமான சிந்துசமவெளி குறியீடுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. மேலும் சிறுமலை குறியீடுகள் சிந்துசமவெளி நாகரிகம், தமிழர்களின் நாகரிகமே என்ற கருத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது, என்றார்.