தூத்துக்குடியில் மழைவேண்டி நாளை கூட்டுப்பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2012 10:09
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வேண்டி திருப்பாவையில் உள்ள ஆழிமலைக்கண்ணா பாடல் பாடியும், சிறப்பு பூஜைகளும் நாளை பெருமாள் கோயில் வளாகத்தில் கோபாலவல்சிதாசர் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. தூத்துக்குடியில் மழை பெய்ய வேண்டி பெரிய அளவில் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் குருஜீ கோபாலவல்லிதாசர் தலைமையில் பெருமாள் கோயில் பிரகாரத்தில் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இது குறித்து கோபாலவல்லிதாசர் சுவாமி கூறியதாவது;திருப்பாவையில் உள்ள 4வது பாசரத்தில் ஆழிமலைக்கண்ணா பாடல் உள்ளது. அந்த பாடலை எல்லோரும் சேர்ந்து பாடும் போது மழை வரும். வருணன் திருப்பாவை விரதம் மேற்கொண்டிருந்த ஆண்டாள் அம்மையிடம் வந்து வருணன் தங்களுக்கு ஏதாவது உபகாரம் செய்ய வேண்டும் அதற்கு உத்தரவிடுங்கள் என்று வேண்டினார்.மழை அதிகமாக பெய்தாலும் அதன் மூலம் பாதிப்பு வரும், குறைவாக பெய்தாலும் பாதிக்கும். இதனால் தேவைக்கு மழை பெய்ய வேண்டும். இதனால் ஆண்டாள் உலக மக்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு தேவைக்கு மழை பெய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி வருணன் மழை பெய்ய வைத்தார்.எப்போதும் மழை இல்லாத காலகட்டத்தில் எல்லாம் திருப்பாவையில் உள்ள இந்த பாடல்களை பாடி பகவானம் நாமத்தை ஜெபிக்கும் போது தானாக மழை வந்து விடுகிறது. இதனை நாம் கண்கூடாக பல சந்தர்ப்பங்களில் பாத்திருக்கிறோம்.தூத்துக்குடி பெருமாள் கோயில் பிரகாரத்தில் இரண்டு மணி நேரம் திருப்பாவையில் உள்ள இந்த பாடலை மழை பெய்வதற்காக நாளை கூட்டு பிரார்த்தனை செய்து பாடுகிறோம். இந்த கூட்டு பிரார்த்தனையில் ஜாதி, மத பேதம், குலம், கோத்திரம் இன்றி எல்லா மக்களும் கலந்து கொண்டு மழைக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வரவேண்டும். கூட்டு பிரார்த்தனைக்கு வருவோர் நிச்சயமாக குடை கொண்டுவர வேண்டும். அந்த அளவிற்கு நம்பிக்கையோடு இதற்கு வர வேண்டும் என்று தூத்துக்குடி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.இவ்வாறு கோபாலவல்லிதாசர் தெரிவித்தார்.கூட்டு பிரார்த்தனைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் கோயில் ஊழியர்கள், இதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் செய்துள்ளனர். கூட்டு பிரார்த்தனை முடியவும் மழைவேண்டி வைகுண்டபதி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.