பதிவு செய்த நாள்
20
டிச
2012
10:12
திருத்தணி: கடந்த ஆண்டே முடிய வேண்டிய, திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுர கட்டுமான பணிகள், கோவில் நிர்வாகத்தின் மெத்தனத்தால், இழுபறியில் உள்ளன. பணிகளுக்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், திருப்பணி முடிய இன்னமும் நான்கு ஆண்டுகள் ஆகும் என, பக்தர்கள் தெரிவித்து உள்ளனர். அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் சராசரியாக, 25 ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை, திருப் படித் திருவிழா ஆகிய இருமுக்கிய விழாக்களில் பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்தும், அலகுகள் குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர்.
9 நிலை ராஜகோபுரம்: அறுபடைகளில் ஒன்றாக திகழும் இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாதது, பக்தர்கள் இடையே பெரும் குறையாகவே இருந்து வந்தது. கடந்த, 2009ம் ஆண்டு அப்போதைய கோவில் அறங்காவலர் குழு சார்பில், 9 நிலை ராஜகோபுரம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்து அறநிலையத் துறையின் அனுமதி பெற்று, கோவில் நிதியில் இருந்து, 3.60 கோடி ரூபாய் செலவில் ராஜாகோபுரம் கட்டும் பணி, 2009ம் ஆண்டு நவ.,18ம் தேதி துவக்கப்பட்டது. இப்பணிகளை 2011ம் ஆண்டு ஜூலைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. மொத்தம், 158 அடி உயரம் கட்டப்பட உள்ளது. இதில் அடித்தளம், 25 அடி, கல் காரம், 11 அடியாகவும், மீதமுள்ள, 122 அடி உயரத்திற்கு ஒன்பது நிலை கோபுரமும் கட்டப்பட உள்ளன.
பாதியில் நிறுத்தம்: ராஜகோபுர பணி ஆரம்பத்தில் விறு,விறுவென நடந்து வந்தது. கடந்த, 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் கோபுரம் அமைப்பதற்காக, 25 அடி தளம் அமைக்கப்பட்டது. பின்னர், தளத்தின் மீது, 11 அடிக்கு கல்காரம் கட்டும் பணி நடத்தாமல், ஓராண்டு நிறுத்தப்பட்டது. இதனால், ராஜகோபுர பணிகள் கேள்விக் குறியாக இருந்தது. ராஜகோபுர பணிகள் தொடர்ந்து நடத்தி முடிக்க வேண்டும் என, பக்தர்கள் கோவில் இணை ஆணையர் மற்றும் இந்து அறநிலையத் துறைக்கு மனு அளித்தனர்.
ஆமை வேகத்தில் பணி: இதையடுத்து, இந்து அறநிலையத் துறை ஆணையர், நிறுத்தப்பட்டு இருந்த ராஜகோபுர பணிகள் விரைவில் முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் கல்காரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது, கல்காரம் கட்டும் பணி, 80 சதவீதம் தான் முடிந்து உள்ளது. மற்ற பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், நான்கு ஆண்டுக்கு மேல் ஆகும் என, பக்தர்கள் கூறுகின்றனர்.
விலை ஏற்றம்இதுகுறித்து, ஒப்பந்ததாரர் தரப்பில் கூறியதாவது: ராஜகோபுரம் கட்டுவதற்கான டெண்டர் விட்ட போது, மணல், சிமென்ட், ஆட்கள் கூலி குறைவாக இருந்தது. இதனால் தான் அடித்தளம் விரைவில் அமைத்தோம். அதற்கான, பில்தொகை எங்களுக்கு கோவில் நிர்வாகம் உரிய நேரத்தில் வழங்காததால் தான், ஒரு ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், கூடுதல் தொகையை தருகிறோம் என, வாய்மொழியாக உறுதி கூறினர். நாங்களும் பணிகள் தொடங்கினோம். ஆனால், கூடுதல் தொகை கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதுவரை, 1.50 கோடி மட்டுமே தரப் பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறியதாவது: ராஜகோபுரம் பணிகள் எடுத்த ஒப்பந்ததாரரை அழைத்து பேசி, அவரின் குறைகளை கேட்டு அறிந்து, பணிகள் விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ராஜகோபுர பணிகளுக்கு பக்தர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும். இவ்வாறு புகழேந்தி கூறினார்.