கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் பொற்கிழி பெற்ற ஐதீக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2026 11:01
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் உள்ள அதுல்ய குஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வர கோயிலில் ரதசப்தமி பெருவிழா 5ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. திருஞானசம்பந்தர் தந்தையின் வேள்விக்காக பொன் உலவாக் கிழி பதிகம் பாடி பொற்கிழி பெற்ற ஐதீக விழா நடந்தது.
இதனை முன்னிட்டு காலை அலங்கார பல்லக்கில் திருஞானசம்பந்தர் புறப்பாடும், தொடர்ந்து கோயிலில் நந்தி மண்டபத்தில் ஓதுவார்கள் பதிகம் பாட சுவாமி பூதகனம் மூலம் பொற்கிழியை கோயில் பலிபீடத்தில் வைக்க அதனை திருஞானசம்பந்தர் பெறும் நிகழ்வு சிறப்பு மகா தீபாரதனையுடன் நடந்தது. தொடர்ந்து அந்த பொற்கிழியை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் சிவாச்சாரியார் வழங்கினார். இதனை அடுத்து திருவாவடுதுறை திருப்பதிகங்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. ஓதுவார்கள் திருவாவடுதுறை வடிவேல், சிதம்பரம் பாலசுப்ரமணியன், திருத்தணி முத்துக்குமரன், கடலூர் சுப்பிரமணியன், கண்ணன் ஆகியோருக்கு தலா ரூ.5ஆயிரம் பொற்கிழி மற்றும் விருது வழங்கப்பட்டது. மாலை ஓதுவா மூர்த்திகளின் திருமுறை பண்ணிசை சங்கமம் நடந்தது.