Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » கிறிஸ்துமஸ் கோலாகலம்!
இயேசு என்பதன் பொருள்
டிசம்பர் 24,2012
அ-
+
Temple images

இயேசு என்பதற்கு விடுதலையாக்குபவர் என்றும் கிறிஸ்து என்பதற்கு தீர்க்கதரிசி என்றும் அர்த்தம். கிறிஸ்துவாக இயேசு ஏன் உலகில் பிறந்தார் என்பதை ஆராய வேண்டும். கடவுள் முதல் மனிதனாக ஆதாமையும், அவனுக்கு துணையாக ஏவாளையும் படைத்தார். பின்பு இவர்கள் மூலம் மக்கள் ஜனத்தொகை உலகில் பெருகத் துவங்கி, சேத், ஏனோஸ், கேனான், மகலாலேயல், யாரேத், ஏனோக், மெத்தூசலா, லாமேக், நோவா, சேம், அர்பக்சாத், சாலா, ஏபேர், பேலேகு, ரெகு, செருக், நாகோர், தேரா, ஆபிரகாம் வரை 20தலைமுறைகள் உருவாயின. 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆதாமிலிருந்து துவங்கிய பாவம் உலகில் அதிகமானது. மனிதன் பாவ மன்னிப்பை பெற ஆட்டையும், மாட்டையும், பறவைகளையும் பலியாக கடவுளுக்குச் செலுத்தி வந்தான். ஆனாலும், பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் மறுபடியும் பாவத்திற்கு அடிமையாகி வந்தான். மனிதனின் பாவம் போக்க வேண்டுமானால் தானே மனிதனாகப் பிறந்து பாவப்பிபலியாக தானே இறக்க வேண்டும் என்று கடவுள் விருப்பம் கொண்டார்.

இயேசு பற்றிய இனிய இலக்கணம்!

பெத்லகேம் குறவஞ்சி: திருநெல்வேலியில் பிறந்து, தஞ்சை சரபோஜி மன்னரின் அவைப்புலவராக விளங்கிய வேதநாயகம் சாஸ்திரியார்(1774-1864) பெத்லகேம் குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியம் படைத்து, பெத்லகேமுக்கு தமிழிலக்கியத்தில் அழியா இடம் பெற்று தந்துள்ளார். இது நாடகப் பாங்கான கதை அமைப்புடையது. திருமுழுக்கு யோவான், இயேசு உலா வரப்போகிறார் என்னும் செய்தியை அறிவிக்கிறார். இயேசுவின் பெருமைகளை எடுத்தோதுகிறார். உலா வரும் இயேசுவை வரவேற்க ஜெருசலேம் நகரம் விழாக் கோலம் பூணுகிறது. மக்களும், வானதூதர்களும், திருச்சபை மகளிரும் திரளாகக் கூடிவருகின்றனர். இயேசு மாட்சிமையோடு உலா வருகின்றார். அவரைப் பார்க்கும் அனைவரும் வியப்பில் ஆழ்கின்றனர். இலைக் கொத்துகளை அசைத்து ஓசன்னாஎன்று கூறி ஆர்ப்பரிக்கின்றனர்.சீயோன் மகள் என்னும் தேவ மோகினி (திருச்சபையின் உருவகம்) இயேசுவைக் கண்டதும் காதல் கொள்கிறாள். அழகும் இறைபக்தியும் கொண்ட அவள், அவரை நினைத்து ஏங்கித் தவிக்கிறாள். இவ்வேளையில் (விசுவாச) குறத்தி (சிங்கி) வருகிறாள்.

இடுப்பில் கூடையும் சிங்கார நடையுமாக வந்த குறத்தியை அழைத்து, தலைவி குறிசொல்லக் கேட்கின்றாள். குறத்தியும் தன் நாட்டு வளத்தையும் நகர வளத்தையும் மலை வளத்தையும் எடுத்துக் கூறும் போது விவிலியச் செய்திகளையும், இயேசுவின் பெருமையையும் அவர் புரிந்த அருஞ்செயல்களையும், கிறிஸ்தவர்களின் மேன்மையையும் இணைத்துக் கூறுகிறாள்.இயேசுவின் வியத்தகு பெருமைகளைக் குறத்தி கூறக் கேட்ட தலைவியை நாணம் மேற்கொள்ளவே, அவள் முகம் சிவந்து விழி தாழ்கிறாள். தலைவியின் கையைப் பார்த்துக் குறிசொல்லும் குறத்தி பெத்லகேம் நாதர் (பெத்தலை நாதர் = இயேசு) உன்னை மணம் கொள்ள நாளை வருவார்; சேலை வரும்; மாலை வரும்; சிலுவை முத்திரை மோதிரமும் வரும் என்று குறி கூறுகிறாள். தலைவியும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்குகிறாள். நன்றிநிறை உள்ளத்தோடு சிங்கிக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளிக்கின்றாள்.இதைத் தொடர்ந்து (ஞான) சிங்கன் பெத்லகேம் நாதராம் இயேசுவைப் பாடிக்கொண்டே வருகிறான். அந்த இயேசுவிடம் ஒரு ஞான வலை இருக்கிறது, ஆசையெனும் வலையில் சிக்கித்தவிக்கும் மனிதரை மீட்டெடுப்பது அந்த ஞான வலையே என்று பாடுகிறான். பின் அவன் சிங்கியைச் சந்திக்கிறான். இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல் எங்கே நீ சென்றனை சிங்கி?என்று அவன் கேட்க, சிங்கி பதிலாக, பெத்லகேம் நகர் சீயோன் குமாரிக்குப் பக்திக்குறி சொல்ல சென்றேன், என்றாள்.கதைத் தலைவியாம் சீயோன் மகளிடமிருந்து பெற்ற அணிகளையெல்லாம் சிங்காரமாக உடலில் சாத்தியிருந்த குறத்தியிடம், சிங்கன் அவை எங்கிருந்து வந்தன என்று வினவுகிறான். அதற்குச் சிங்கியும் நயமாகப் பதிலளிக்கிறாள். பின்னர் சிங்கனும் சிங்கியும் கடவுளைப் போற்றுகின்றனர். இறுதி வாழ்த்தோடு பெத்லகேம் குறவஞ்சி நிறைவு பெறுகிறது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.