புதுச்சேரி: நெல்லித்தோப்பு திருமால் நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. திருமால் நகர் குடியிருப்போர் நல் வாழ்வுச் சங்கம் சார்பில், மத நல்லிணக்கம் மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி நடந்த கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, இந்து முறைப்படி கற்பக விநாயகருக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தது. நல்வாழ்வுச் சங்கத்தின் கவுரவத் தலைவர் டொமினிக் அல்வாரிஸ், கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. நல்வாழ்வுச் சங்கத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் பெருமாள், பொருளாளர் காமராஜ், செயற்குழு உறுப்பினர்கள் விவேகானந்தன், சிவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.