பதிவு செய்த நாள்
01
பிப்
2013
10:02
பழநி: பழநி மலைக்கோயிலில், சேலம் எடைப்பாடி பருவதராஜ குல சமுதாயத்தினர் சார்பில், ஒரு லட்சம் பக்தர்களுக்கு வழங்க, 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான பணிகளை, நேற்று, துவக்கினர். பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரித்து வழிபடுவதை, இந்த சமுதாயத்தினர் பாரம்பரியமாக கொண்டுள்ளனர். ஆண்டுதோறும், விரதம் மேற்கொண்டு, காவடி எடுத்து பழநிக்கு வருகின்றனர். ஜன., 27 ல், வெள்ளாண்டி வலசையில் பாதயாத்திரை துவங்கினர். இன்று பழநியை அடைந்து கோயிலுக்கு செல்கின்றனர். இதற்கு முன்னதாகவே, வழிபாட்டுக் குழுவினர், பஞ்சாமிர்த பொருட்களை, பழநிக்கு கொண்டு வந்து விட்டனர். கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில், பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. பக்தர் ஒருவர் கூறியதாவது: ஏழு டன் மலை வாழைப்பழம், மூன்று டன் பேரீட்சை, 150 கிலோ கற்கண்டு, ஏழு டன் சர்க்கரை, 12 டின் தேன், நெய் மற்றும் ஏழு கிலோ ஏலக்காய் கொண்டு, 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட உள்ளது. இரவு, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் மலைக்கோயிலில் தங்குவர். அதிகாலை வழிபாட்டிற்கு பின், அனைவருக்கும் பஞ்சாமிர்த பிரசாதமாக வழங்கப்படும். இது, ஒரு ஆண்டு வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இது 353 வது ஆண்டு வழிபாடு, என்றார்.பிப்., 2 ல் பருவதரராஜகுல மடத்தில் தங்கியிருந்து வரவு, செலவு கணக்கு பார்த்தல் நடைபெறும். பிப்., 5 ல் புறப்பட்டு, அமராவதி ஆற்றங்கரை, வட்டமலை, பிடாரி அம்மன் கோயில், செங்கமாமுனியப்பன், வெள்ளூற்றுப் பெருமாள் கோயில் வழி, பிப்., 9 ல் எடைப்பாடி திரும்புவர்.