பதிவு செய்த நாள்
19
மார்
2013
10:03
திருவாரூர்: மன்னார்குடி, ராஜகோபாலசுவாமி கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். தென் திருப்பதி என்றும் தென்மாவட்டங்களில் முக்கிய வைணவ தளங்களில் ஒன்றாக கருதப்படும் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில், பங்குனி பெருவிழா, ஆண்டுதோறும், 18 நாள் வெகு சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு விழா, கடந்த 2ம்தேதி துவங்கியது. கோவில் கொடிமரத்தில், கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு ராஜகோபால சுவாமி, பாமா ருக்மணி சமேதராக கல்யாண அவசர அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா, கொடி சப்பரத்தில் வீதியுலா காட்சியும் நடக்கிறது. நேற்று முன்தினம், 17ம்தேதி காலை, வெண்ணை தாழி உற்சவ திருவிழாவும், இரவு, தங்க குதிரை வாகனத்தில், ராஜகோபால சுவாமி வீதியுலா காட்சியும் நடந்தது. நேற்று மாலை, வெகு விமர்சியாக நடந்த தேரோட்டத்தில், பொதுமக்கள், வடம் பிடித்து தேர் இழுத்தனர்.