பதிவு செய்த நாள்
19
மார்
2013
10:03
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி புல்லாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், 500 ஆண்டுகளுக்கு பின் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.மாவட்டத்தின் புண்ணியதலங்களில் ஒன்றாக விளங்கும் திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதர் பெருமாள் சுவாமி கோயில் உப தலமான புல்லாணி அம்மன் கோயிலில், கடந்தாண்டு திருப்பணி துவங்கியது. இம்மாதம் 18ம் தேதி, கும்பாபிஷேக விழா, ஆச்சார்யவரணம் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 6,30 மணிக்கு, திருப்புல்லாணி பத்மநாத பட்டாச்சார் தலைமையில், கோ பூஜை தொடர்ந்து பல பூஜைகள் நடந்தது.வானத்தில் கருட பகவான் வட்டமிட, காலை 9,45 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. கோயில் கமிட்டி தலைவர் ராமநாதபுரம் வக்கீல் திருமலை சடகோபன், நிர்வாகிகள் ஊராட்சி தலைவர்கள் முனியசாமி (திருப்புல்லாணி), புல்லாணி (தாதனேந்தல்), ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் முனியாண்டி, திருப்புல்லாணி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரி, கீழக்கரை நகர் அ.தி.மு.க., செயலாளர் வி.ராஜேந்திரன், பத்மாஸனித் தாயார் கைங்கர்ய சபா நிர்வாகிகள், ரகுபதி அய்யங்கார், ராஜா சாஸ்திரி, ஸ்ரீகாந்த், அரியமுத்து பூசாரி, சி.சுரேஷ், எஸ்.வி.பால சுப்பிரமணியன் பங்கேற்றனர்.