முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2013 11:03
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா நேற்றுடன்(19ம் தேதி) நிறைவடைந்தது. நேற்று இரவு அம்பாளுக்கு காப்பு களையப்பட்டு மஞ்சள் நீராட்டு நடந்தது. இதையடுத்து திருக்கொடி இறக்கப்பட்டது. நிறைவு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசிப்பெருந்திருவிழா 16 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த, 11ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மாசிப்பெருந்திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இரவு காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருக்கோவில் வந்தடைந்ததும் அம்பாளுக்கு காப்புகள் களையப்பட்டு மஞ்சள் நீராட்டு நடந்தது. இதையடுத்து திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. நிறைவு விழா நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை தரிசித்தனர்.