பதிவு செய்த நாள்
29
மார்
2013
05:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களில் புனித நீராடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளுடன், கூடுதல் வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும், என அறநிலையத்துறை கமிஷனர் தனபால் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்த கிணறுகளில், பக்தர்களுக்கு நீராடும் வசதி, மூன்றாம் பிரகார பணிகளை, நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், ராமேஸ்வரம் கோயில் இணை கமிஷனர் செல்வராஜிடம் ஆலோசனை நடத்திய பின் கூறியதாவது: கோயில்களில் சுத்தம், சுகாதாரம், வெளிச்சம் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களில், நீராட அமல்படுத்தப்பட்டுள்ள அடையாளவில்லை முறை, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்து தீர்த்தங்களுக்கு பக்தர்கள் செல்ல, கருங்கல்லில் ஆரோ மார்க் வடிவில் அமைத்தும், ஒவ்வொரு தீர்த்தத்தின் பெயர், அதன் மகிமை குறித்து, கிரானைட் கற்களில் எழுதி வைக்கப்படும். பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் வழுக்கி விடாமல், கூடுதல் டிரை கிளினர் வைத்து சுத்தம் செய்து, மேட் விரிக்கப்படும். கோயிலில் இருள் சூழ்ந்த பகுதிகளில், தேவையற்ற சுவரை அகற்றி, வெளிச்சம் வர அலுமினிய கிரில்கள் அமைக்கப்படும்.
தேவையான இடங்களில் மின் விளக்கு பொருத்தப்படும். வடக்கு நந்தவனத்தில் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதியும், அக்னி தீர்த்தக் கடற்கரையில், கூடுதலாக 50 மீட்டர் தூரத்திற்கு படிக்கட்டு அமைக்கப்படும். வயோதிகர் நீராட, வீல் சேர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். கார்கள் நிறுத்துமிடத்தில் பக்தர்கள் ஓய்வெடுக்க குடிநீர் வசதியுடன், நிரந்த ஷெட் அமைக்கப்படும். ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, விரைவில் பணி துவங்கும். பாதுகாப்பு கருதி, கோயிலுக்குள் உள்ள வணிக கடைகளை அகற்ற, நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இக்கோயிலுக்கு வாடகை செலுத்தாத,டாப் 10 நபர்களின் விபரம் மற்றும் போட்டோக்களுடன், பொது இடத்தில் வைக்கப்படும். கோயிலுக்கு வெளியே உள்ள, 31 தீர்த்தங்களை புனரமைக்கவும், கோயில் தங்கும் விடுதியை நவீனப்படுத்தவும், பயன்பாடின்றி கிடக்கும் டமாரத்தை ஒலிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.