பதிவு செய்த நாள்
02
மே
2013
10:05
ஆண்டிபட்டி: துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும், வினோத வழிபாடு நிகழ்ச்சி, கோவில் விழாவில் நடந்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அடுத்த, மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில், பொங்கல் விழா மூன்று நாட்கள் நடந்தது. மூன்றாம் நாளில், மாமன், மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள், கோவில் முன் கூடுகின்றனர். உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு, ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொள்கின்றனர். பின், கோவில் முன், விழுந்து வணங்குகின்றனர்.அதை அடுத்து, கையில் பழைய துடைப்பத்தை வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர், மாறி, மாறி அடித்துக் கொண்டனர். அடி வாங்கும் யாரும் கோபப்படுவதில்லை. ஆவேச ஆட்டத்துடன், பல மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை காண, வெளியூரில் இருந்து, ஏராளமானோர் வந்திருந்தனர். மாடுகளை, கயிற்றில் கட்டி, இழுத்துச்செல்வது போல், ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டி அழைத்துச்சென்று அடிக்கும்போது, அடிபடுபவர்கள், கோபப்படாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அவர்களின் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை என, இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர். முத்தாலம்மனுக்கு, நேர்த்திக்கடனாக, இதை செய்வதாகவும், சிலர் தெரிவித்தனர்.