பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
10:07
ஜம்மு :ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத் குகை கோவிலில் தோன்றிய பனி லிங்கம், பெருமளவு உருகி விட்டது. இதனால், பக்தர்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளனர்.
28ல் துவங்கியது: ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாகவே, பனி லிங்கம் உருவாகும். இதைத் தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து, ஏராளமான பக்தர்கள், புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான, அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, கடந்த மாதம், 28ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம், 21ம் தேதி வரை, யாத்திரை நீடிக்கும்.யாத்திரை துவங்கியது முதல், இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட, பக்தர்கள் பனி லிங்க தரிசனம் செய்துள்ளனர். யாத்திரை முடிய, இன்னும் பல நாட்கள் உள்ள நிலையில், பனி லிங்கத்தின் பெரும்பகுதி உருகி விட்டது. இதனால், பக்தர்கள் மன வருத்தம் அடைந்துள்ளனர்.
உடல் உஷ்ணம்: இதுதொடர்பாக, ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த, சோனம் லோட்டஸ் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு, அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. பனி லிங்கத்தை தரிசிக்க, இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளதால், அவர்களின் உடம்பிலிருந்து வெளியாகும் வெப்பமும், குகை கோவில் பகுதியில் வெப்பநிலை அதிகரிக்க காரணம்.மேலும், மலை அடிவாரத்தில், தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள், காஸ் அடுப்புகளை பயன்படுத்தி, சமையல் செய்கின்றனர். இதுவும் வெப்பநிலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். இந்தக் காரணங்களாலும், பருவநிலை மாறுபாடு காரணமாகவும், பனி லிங்கம் உருகி இருக்கலாம்.இவ்வாறு லோட்டஸ் கூறினார்.