பொள்ளாச்சி; பழநியில், சந்திர கிரகணத்தை குறிக்கும், 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில், இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் நடத்திய ஆய்வில், சந்திர கிரகணத்தை குறிக்கும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நிறுவன இயக்குநர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழநி, பெரியநாயகி அம்மன் கோவிலின் திருச்சுற்றாலை ஈசான மூலையில், யாகசாலை கட்டடத்தின் சுவரில், கல்வெட்டு பொதிந்திருப்பது கண்டறியப்பட்டது. கல்வெட்டின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்து போயிருந்தன. அதில், நான்கு வரிகள், பார்வைக்கு தெரிகிறது. ஒரு சந்திர கிரகணத்தன்று கோவிலுக்கு, ஒருவர் ஒரு கொடை அளிக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த கல்வெட்டு, துண்டாக இருப்பதால், கொடை அளித்தவர் விபரத்தை கண்டறிய முடியவில்லை. மேலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத காலத்திலும் கிரகணங்களை முன்கூட்டியே கணிக்கும், வானியல் அறிவு பெற்ற தமிழ் அறிஞர்கள் வாழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது. கல்வெட்டின் எழுத்தமைப்பு, கி.பி. 17ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருப்பதால், திருமலை நாயக்கரின் ஆட்சியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.