பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் முருகன் சிலையில் ஏறி , ஒருமணி நேரத்திற்கும் மேலாக, நடனமாடிய பாம்பைக்கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். வத்திராயிருப்பு சேனியர்குடித்தெருவில் மீனாட்சி, சொக்கநாதர் சமேத சங்கிலி மாடசாமி கோயில் உள்ளது. இங்கு முருகன் சன்னதி உள்ளது. வள்ளி தெய்வாணையுடன் அருள்பாலிக்கிறார். நேற்று மாலையில், கோயில் பூசாரி சாமிமலை, வழக்கமான பூஜைகளுக்காக சென்றபோது, அங்கு நின்ற 3 அடி நீளமுள்ள பாம்பு, தலையை ஆட்டியபடி நின்றது. பூசாரி விரட்டியும் செல்லாமல், முருகன் சிலைமீது ஏறி, கழுத்தை சுற்றியது. பின்னர் தனது தலையை சுற்றியும் உடலை வளைத்தும் நடனமாடத் துவங்கியது. மாலை 6.40 மணிக்கு துவங்கிய ஆட்டத்தை,இரவு 8 மணி வரை தொடர்ந்தது. தகவல் பரவியதால், ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு பாம்பை வழிபட்டனர். பின்னர் முருகனுக்கு சாத்தப்படும் "வேல் ஐ, பூசாரி பாம்புக்கு நேராக காட்டியதும், அது மெல்ல சிலையிலிருந்து இறங்கி கோயிலை விட்டு வெளியேறியது. அதன் பின் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜைகள் நடந்தன. இச் சம்பவத்தால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.