பெங்களூருவிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் என்ற நகரத்துக்கு அருகில் மலைஉச்சியின் மீது சுயம்புவாக அருள்பாலிக்கிறார் சிவபெருமான். வழியெங்கும் வானர ராஜாக்கள் ராஜ்யம் நடத்தும் இந்த மலையில் ஏறுவதற்கு முன்பு, அடிவாரத்தில் உள்ள கங்காதீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்கிறார்கள் பக்தர்கள். லிங்க உருவத்தில் காட்சிதரும் கங்காதீஸ்வரருடன் ஸ்வர்ணம்பா தேவியும் கோயில் கொண்டுள்ளார். இங்குள்ள மூல லிங்கத்தில் அர்ச்சகர் நெய் அபிஷேகம் செய்யும் போது, அந்த நெய், வெண்ணெயாக மாறி விடும் அதிசயத்தைக் காணலாம். மலைஉச்சியில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்ய ஓங்கி உயர்ந்து வான் முட்டுவதுபோல் செங்குத்தாக உள்ள மலைமீது ஏறவேண்டும், குறைந்தது, இரண்டரை மணிநேரம் பயணம் செய்து, பாறையில் செதுக்கப்பட்ட படிகளில் கவனமாக ஏறிச் சென்றால் அந்தப் பரவசமான அனுபவம் நமக்கு கிட்டும். வழியில் ஓர் இடத்தில் ஒரு சிறிய துவாரத்தில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. நம் கையை நுழைத்தால் நீரை தொடலாம். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் வாய்க்கிறது. இதனை சிவ கங்கா என்கிறார்கள். மேலும் ஒரே கல்லால் ஆன நந்தி தேவரையும் வணங்கிவிட்டால், கீழே இறங்கிவிடலாம்.