பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
11:04
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மலை மீது சேவல் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.மலைகளில் தலையாய மலையாக போற்றப்படும் சென்னிமலை, கடல் மட்டத்தில் இருந்து, 1,749 அடி உயரத்தில் உள்ளது. இங்கு மலை மீது குமரக்கடவுள் பாலதண்டாயுதமூர்த்தி அருள்பாலித்து வருகிறார். இங்கு தினமும், படி வழியாக முருகப்பெருமானுக்கு எருதுகள் மூலம் திருமஞ்சனம் (தீர்த்த குடம்) கொண்டு செல்வது தனிச்சிறப்பு. வேறு எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், இங்கு, தைப்பூச தேர் மற்றும் பங்குனி உத்திர தேர் உள்ளன.
இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பங்குனி உத்திர விழா, நேற்று இசைவேளாளர்கள் சமூகத்தை சேர்ந்த நாட்டமை, பெரியதனகாரர்கள், பெரியவர்கள் முன்நின்று, மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில், சேவல் கொடியை ஏற்றி, உத்திர விழாவை துவக்கி வைத்தனர்.
கொடியேற்றத்துக்கு முன் முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தலைமை குருக்கள் ராமநாதசிவம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்ய இசைவேளாளர்கள் சமூகத்தினர், சேவல் கொடியை ஏற்றி விழாவை, முறைப்படி துவக்கி வைத்தனர்.
கொடியேற்ற விழாவில் காவேரிரங்கன், முத்துகணேஷ், எஸ்.ஏ.பி., டெக்ஸ் மேலாளர் சிவசுப்பிரமணியம், மெட்ரோடெக்ஸ் மேலாளர் சரவணகுமார், இந்திரா டெக்ஸ் மேலாளர் சுகுமார்ரவி, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் சௌந்திரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இன்று இரவும், திருத்தேரோட்டம் நாளை காலை, ஆறு மணிக்கும் நடக்கிறது.மாலை, ஐந்து மணிக்கு தேர் நிலை சேரும், 14ம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 15ம் தேதி காலை மஹா தரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன், பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.