பதிவு செய்த நாள்
17
ஏப்
2014
11:04
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சிவன்கூடல் கிராமத்தில், இந்து சமய அறநிலைய துறையும், மாநில தொல்லியல் துறையும் இணைந்து அகழாய்வு நடத்தினால், மேலும் சில கற்சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, அந்த கிராமத்தினர் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவன்கூடல் கிராமம் உள்ளது. இங்கு, முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தை சேர்ந்த, சிவன் கோவில் உள்ளது.
சிலை கடத்தல்: சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் என, இன்று அறியப்படும் அந்த கோவில் கட்டடம், மாநில தொல்லியல் துறையிடமும், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், இந்து சமய அறநிலைய துறையிடமும் உள்ளன. இந்த கோவில் நிர்வாகம், 2000 ம் ஆண்டிற்கு முன் வரை, இந்த ஊரை சேர்ந்த, ராஜமாணிக்கம் என்ற ஜமீன் குடும்பத்து வாரிசிடம் இருந்துள்ளது. இந்த கோவிலை சேர்ந்த, சோமாஸ்கந்த உற்வச மூர்த்தி சிலை தான், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் உள்ளது. கோவிலில் இருந்த உற்சவ மூர்த்திகள் பற்றிய விவரம் எதுவும், கிராமத்தினருக்கு தெரியவில்லை. கடந்த, 1985 ல் முதன் முதலாக, கோவில் கட்டடம், மாநில தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அதேபோல், ராஜமாணிக்கத்தின் கோரிக்கையின் பேரில், 2001 முதல் கோவிலில், அறநிலைய துறை சார்பில் தக்கார் நியமிக்கப்பட்டார். 2006 ம் ஆண்டு வரை அறநிலைய துறை சார்பில் நிலங்கள் குத்தகை எடுக்கப்பட்ட விவரங்கள், கிராமத்தினரிடம் உள்ளன.
இந்த நிலையில், கோவில் பற்றி அந்த கிராமத்தினர் கூறியதாவது: இந்த கோவில், நடேச முதலி என்ற ஜமீன் குடும்ப தலைவரிடம் முதலில் இருந்தது. அதன்பின், அவரது மகன் ராஜமாணிக்கம் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் வந்தது. எங்களுக்கு விவரம் தெரிந்த வரையில், இந்த கோவில், பாழடைந்து தான் கிடந்தது. எங்கள் தந்தை, தாத்தா போன்றோர், ஜமீன் குடும்பத்திடம் வேலைபார்த்து வந்தனர். அவர்களுக்கு கோவிலுக்குள் போக அனுமதியில்லை. அதனால் அவர்களுக்கும், எங்களுக்கும் கோவிலுக்குள் என்ன இருந்தது என்பது தெரியாது. ஆனால் கோவிலை சுற்றி, 7 அடி உயரத்திற்கு பெரிய மதில் சுவர் இருந்துள்ளது. கொடிமரம், தேர் போன்றவையும் இருந்ததாக சொல்லி இருக்கிறார்கள். கடந்த,1980 க்கும் முன்னால், கோவில் வளாகத்தில் எதற்காகவோ தோண்டிய போது, யோக தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வயானை, விநாயகர், பிரம்மா, ஜ்யேஷ்டா தேவி (இந்த சிலையை கிராமத்தினர் மூதேவி சிலை என்கின்றனர்) உள்ளிட்ட கற்சிலைகள் கிடைத்தன. அவற்றில் யோக தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சிலைகளை, தங்கள் வீட்டிற்குள் ஓரிடத்தில், அந்த ஜமீன் குடும்பம் புதைத்து வைத்ததாக எங்கள் குடும்பத்து பெரியவர்கள் சொல்லி இருக்கின்றனர். முருகன், பிரம்மா, வள்ளி, தெய்வயானை சிலைகள், இன்று கோவிலில் உள்ளன.
பயந்து போய்... : மூதேவி சிலையை, சென்னையில் இருந்து சிலர் வந்து காரில் எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால், ஊர் வாசலில் போட்டு விட்டு சென்றனர். ஊர்க்காரர்கள் பயந்து போய் அந்த சிலையை வேறு எங்கோ போட்டு விட்டனர். இப்போதும், கோவில் வளாகம் மற்றும் ஜமீன் குடும்பத்தினர் சிலைகளை புதைத்த இடங்களில் தோண்டி பார்த்தால், சில கற்சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விசாரணை தொடர்கிறது : சிவன்கூடல் கிராமத்து சோமாஸ்கந்த உற்சவ மூர்த்தி சிலை குறித்து, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்ட அறநிலைய துறை உயரதிகாரி ஒருவர், அந்த கிராமத்திற்கு நேரடியாக வந்து விசாரித்து விட்டு சென்றுள்ளார். அதேபோல் தற்போது, இந்து சமய அறநிலைய துறை மற்றும் மாநில தொல்லியல் துறையிடம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், விசாரித்து வருகின்றனர். அந்த கோவில் பற்றிய ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர் என, கூறப்படுகிறது.