பதிவு செய்த நாள்
10
ஜூன்
2014
11:06
திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவையொட்டி, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, எம்பெருமாள் கருட சேவை மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. நாளை, விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது.திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, கடந்த 4ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றம், தினமும் சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று, ஐந்தாம் நாள் நிகழ்ச்சியான பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்திலும், விசாலாட்சியம்மன், அன்ன பட்சி வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், விநாயகர், மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் காளை வாகனத்திலும் எழுத்தருளினர். எம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேரோடும் வீதிகளில் சுவாமிகள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இன்றிரவு 7.30 மணிக்கு, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதேபோல், வீரராகவப் பெருமாள் கோவிலில், பூமி நீளாதேவி, கனகவல்லி தாயார்,வீரராகவப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.நாளை தேரோட்டம் : தேரோட்டத்துக்காக, இரண்டு கோவில்களின் தேர்களும் தயார் நிலையில் உள்ளன. நாளை (11ம் தேதி) காலை 6.00 மணிக்கு, சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. விஸ்வேஸ்வரர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, நாளை மதியம் 2.00 மணிக்கு துவங்கும். நாளை மறுநாள் (12ம் தேதி), வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்திருவிழா, மகா தரிசனம், மலர் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். 17ம் தேதி, விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.