பதிவு செய்த நாள்
03
ஜூன்
2025
11:06
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் மைக்கண் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், இன்று அம்மன் அழைப்பு நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் பழைய சந்தைக் கடையில், மைக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசித் திருவிழா, கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து நடந்த அக்னி கம்பம் நடும் விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு நாளும் சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். பின்பு அம்மன் சுவாமிக்கு அலங்காரமும், கம்பத்தை சுற்றி பக்தர்கள் ஆடி மகிழ்ந்தனர். இன்று சுப்ரமணியர் சுவாமி கோவிலில் இருந்து, அம்மன் அழைப்பும், 4ம் தேதி பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற உள்ளது. ஐந்தாம் தேதி இரவு அம்மன் திருவீதி உலாவும், ஆறாம் தேதி மஞ்சள் நீராட்டு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வனிதா, அறங்காவலர் குழு தலைவர் சிவமூர்த்தி, அறங்காவலர் சக்திவேல், பத்மாவதி மற்றும் திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.