பாதுகாப்பற்ற நிலையில் மதுரை மீனாட்சி கோயில் தேர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2025 12:06
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா முடிந்த நிலையில் தேர்கள் பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.29ல் தொடங்கியது. தேரோட்டம் மே 9ல் நடந்தது. இதற்கான அம்மன், சுவாமி தேர்கள் கீழமாசிவீதியில் நிறுத்தப்பட்டுள்ளன. திருவிழா கொடியேற்றம் நடந்ததும் தேர்களை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் ‘செட்’ அகற்றப்பட்டு அலங்கரிக்கும் பணி நடக்கும். தேரோட்டம் முடிந்ததும் ஒருவாரத்திற்குள் மீண்டும் ‘செட்’ அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். ஆனால் இந்தாண்டு தேரோட்டம் முடிந்து 23 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ‘செட்’ அமைக்கப்படாமல் உள்ளது. பாதுகாப்பற்ற திறந்தவெளியில் வெயில், மழையால் தேர்கள் துாசிபடர்ந்து பொலிவிழந்து வருகின்றன. இதுகுறித்து ஹிந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, ‘தேர் நிற்கும் இடத்தில் மழைநீர் தேங்கி, தேரின் இரும்பு சக்கரங்கள் பாதிக்காமல் இருக்க தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுதான் தாமதத்திற்கு காரணம்’ என தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான எந்த பணியும் துவங்கியதாக தெரியவில்லை என ஹிந்து அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.