திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 510வது தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2014 12:07
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலின் 510வது தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கி.பி.,ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரால் ‘திருநெல்வேலி பதிகம்’ பாடல்பெற்றது நெல்லையப்பர் கோயில். ஆடவல்லானின் ஆருத்ரா தரிசனம் நடக்கும் பஞ்ச சபைகளில் தாமிரசபை இங்கு அமைந்துள்ளது. நெல்லையப்பர் தேர் 450 டன் எடை கொண்டது. 35 அடி உயரமும், 28 அகலமும் கொண்ட, தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகும். ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழாவில் தேரோட்டம் நடக்கிறது. கடந்த ஒன்பது நாட்களாக ஆனித்திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. ஒன்பதாம் திருநாளில் நேற்று காலையில் எட்டு மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கலெக்டர் கருணாகரன், டி.ஐ.ஜி.,சுமித்சரண் உள்ளிட்டோர் தேரினை இழுத்து துவக்கிவைத்தனர். முன்னதாக அதிகாலையிலேயே விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டன. சுவாமி தேரினை தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்பட்டது. மாலையில் சண்டிகேஸ்வரர் தேரும் இழுக்கப்பட்டது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.