பதிவு செய்த நாள்
31
ஜூலை
2014
01:07
மதுராந்தகம் : மாரிபுத்துார் செல்லியம்மன் கோவில் ஆடி திருத்தேர் வீதியுலா, நேற்று கோலாகலமாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த, மாரிபுத்துார் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருத்தேர் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆடி மாதத்தையொட்டி உற்சவ விழா கடந்த, 22ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 26ம் தேதி அமாவாசை தீப ஜோதி தரிசன விழாவும், 29ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், அம்மன் வீதியுலாவும் நடந்தது.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியே சென்று, மீண்டும் நிலைக்கு வந்தது. இவ்விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.இன்று காலை, 8:30 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், பிற்பகல் 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் நடைபெற உள்ளது.இதேபோன்று, மதுராந்தகம் அடுத்த நெட்ரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாமூர் கிராமத்தில் உள்ள எட்டியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் வீதியுலா நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.