திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆக.20ல் கொடியேற்றத்துடன், சதுர்த்திப் பெருவிழா நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான, நேற்று காலை வெள்ளிக் கேடகத்தில், விநாயகர் வலம் வந்தார். தொடர்ந்து மாலையில், ’கஜமுக சூரசம்ஹாரம்’ நடந்தது. கற்பக விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில், வில், அம்பு ஆயுதம் தரித்து, தேவர்களை துன்புறுத்தி வந்த யானை முகம் கொண்ட அசூரனை எதிர் கொண்டார். பல்வேறு முகங்களை மாற்றி வேலுடன் அசூரன் விநாயகருடன் யுத்தம் செய்தான். கடைசியாக சேவல் வடிவமெடுத்த அசுரனை தனது தந்தத்தால் கற்பக விநாயகர் வதம் செய்யும் படலம் நடந்தது. பின்னர் தங்க மூஷிக வாகனத்தில், விநாயகர் திருவீதி உலா நடந்தது.