பெருமாளின் கையில் ஒரு சங்கும், ஒரு சக்கரமும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் புருஷோத்தமர் கோயிலில், இவர் இரண்டு சங்கு, இரண்டு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இங்குள்ள தாமிரபரணி தீர்த்தம் கங்கை தீர்த்தத்துக்கு சமமானது. இங்கே சுவாமி விழாக்காலங்களில் கங்கா ஸ்நானம் செய்கிறார். தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் விசேஷம். இந்த பெருமாளைத் தீபாவளியை ஒட்டி தரிசிப்போமா!
தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட பராந்தகசோழ மன்னனுக்கு குழந்தை இல்லை. அந்த பாக்கியம் கிடைக்கவேண்டி பல யாகங்கள் செய்தும் பலனளிக்கவில்லை. ஒருசமயம் பொதிகை மலைக்கு வந்த மகரிஷியிடம் சென்ற மன்னன், தனக்கு குழந்தை இல்லை என்ற கவலையை விட, எதிர்காலத்தில் நாட்டு மக்களைக் காக்க மன்னன் இல்லாமல் போய்விடுமே என்ற குறையே மனதை வாட்டுவதாக தெரிவித்தான். அவனது நிலையறிந்த மகரிஷி, எந்த பரிகாரத்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாதவர்கள், சிவனுக்கும், திருமாலுக்கும் கோயில் எழுப்பி வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்றார். அதன்படி மன்னன் தாமிரபரணி நதிக்கரையில் பல கோயில்களைக் கட்டினான். அதில் முதலில் கட்டிய கோயில் இது. இங்கு பெருமாள், மடியில் மகாலட்சுமி தாயாரை அமர்த்தி புருஷோத்தமர் என்ற பெயரில் அருளுகிறார்.